என்ன செய்தார் சைதை துரைசாமி – 526
அம்மா உணவகம் ஆரம்பிப்பது தேவையில்லாத வேலை என்று கூறிய அரசு அதிகாரிகளே, இரவு உணவுத் திட்டத்துக்கு பெருத்த வரவேற்புடன் ஆதரவு கொடுத்தார்கள். ஏனென்றால், அம்மா உணவகத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு, ஏழை, எளிய மக்களுக்கு மூன்று நேரமும் குறைந்த செலவில் வயிறு நிறைந்தது.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இரவு நேரத்தில் சப்பாத்தி அறிமுகம் செய்யப்பட்டதுமே மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லது என்று மேயர் சைதை துரைசாமி தேர்வு செய்திருக்கிறார் என்றும் பாராட்டினார்கள். எனவே, இரவு நேர சப்பாத்தியும் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்த வகையில் தினமும் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் இருந்தாலே, ஒரு நாள் முழுவதும் வயிறு நிரம்ப சாப்பிடமுடியும் என்ற நிலை உருவானது. ஒருவருக்கு மாதம் 500 ரூபாய் இருந்தாலே போதும், நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதம் 2,000 ரூபாய் இருந்தாலே தாராளம் எனும் அளவுக்கு ஏழை மக்கள் வயிற்றில் பால் வார்த்தது அம்மா உணவகம்.
இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சப்பாத்தி 3 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டதால், கூட்டம் கட்டுங்கடங்காமல் அம்மா உணவகத்தை நோக்கி மக்கள் படை எடுத்தனர். எவ்வளவு உணவு தயார் செய்தாலும், அத்தனையும் உடனுக்குடன் தீர்ந்து போகும் அளவுக்கு வியாபாரம் சூடு பிடித்தது.
இந்த அம்மா உணவகத்தின் மாபெரும் வெற்றியும் மக்களின் உண்மையான பாராட்டும் 2016 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது என்ற உண்மையை, மேயர் சைதை துரைசாமியிடம் உளவுத் துறை அதிகாரி ஒருவர் மனம் திறந்து பேசினார்.
- நாளை பார்க்கலாம்.
