சாதிக் கணக்கெடுப்பு சாத்தியமா?
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டு நடைபெற இருந்தது, ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தாமதமானது இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய கணக்கெடுப்பை முடிக்க சுமார் 18 மாதங்கள் ஆகும் என்று இருக்கும் நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்துவருகிறார்கள். இதன் மூலமே சமூகநீதி கிடைக்கும் என்றும் கருதுகிறார்கள்.
இண்டியா கூட்டணி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உறுதி அளித்திருக்கும் நிலையில் மத்திய பா.ஜ.க. அரசும் தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
இதுகுறித்து ராமதாஸ், ‘’இந்தியாவில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. அதனால் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல பத்தாண்டுகளாக நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை; எந்தத் தடையும் இல்லை. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புகாக திரட்டப்படும் புள்ளிவிவரங்களுடன் சாதி என்ற ஒரே ஒரு பிரிவை சேர்த்தால் மட்டும் போதுமானது. இதற்காக எந்த கூடுதல் செலவும் ஏற்படாது. மாறாக, சாதிவாரி விவரங்கள் திரட்டப்படுவதால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கும் பயன்கள் எல்லையில்லாதவை.
சமூகநீதியை வழங்குவதில் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உச்சவரம்பை உடைக்க இந்த விவரங்கள் உதவும். எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி விவரங்களை திரட்டுவது குறித்து விவாதித்து வரும் மத்திய அரசு, அதில் சமூகநீதிக்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை ( கேஸ்ட் சர்வே) எடுக்க வேண்டும் என்பதால் அதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவே, அத்தனை மக்களும் எதிர்பார்ப்பும் ஆகும். மத்திய அரசு நிறைவேற்றுமா?