ஸ்டாலின் பதவி விலக வேண்டுமா?
கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மாற்றக்கோரி அ.தி.முக., பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இன்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதியரசர் கிருஷ்ணகுமார் மற்றும் நீதியரசர் பாலாஜி அடங்கிய அமர்வு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
கள்ளச்சாராய வழக்கு சி.பி.ஐ. கைக்கு மாறியிருப்பது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று எதிர்க்கட்சிகள் கொண்டாடும் நிலையில், ‘இதுவரை எடுத்துக்கொண்ட எந்த வழக்கையும் உருப்படியாக முடித்ததே இல்லை, யாருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்ததும் இல்லை. எனவே, இது அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்கிறார்கள்.
இது குறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ், ‘’கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் நச்சு சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கள்ளச்சாராய சாவுகளின் பின்னணியை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இதுவாகும்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த ஆணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் முக்கியமானவை. கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் கவனத்திற்கு வராமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; கள்ளச்சாராய விற்பனையை தமிழக காவல்துறை கண்டும் காணாமலும் இருந்ததைத் தான் இது காட்டுகிறது; கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது தவறு என்றெல்லாம் கண்டனக் கணைகளை நீதிபதிகள் தொடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகிலும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகிலும் கடந்த ஆண்டு நச்சு சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தமிழக அரசு உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் அதன் பின்னர் தமிழ் நாட்டின் எந்த பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்காமல் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இது தமிழக அரசின் படுதோல்வி ஆகும்.
அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் திமுகவின் நிர்வாகிகளும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தான் முழுக்க முழுக்க ஆதரவாக இருந்திருக்கின்றனர் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும். இப்போது நீதிபதிகள் எழுப்பியுள்ள வினாக்கள் பா.ம.க.வின் குற்றச்சாட்டுகள் சரியானவை என்பதை உறுதி செய்திருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பதில் தமிழக அரசின் தோல்விக்கு கிடைத்த சவுக்கடி ஆகும். தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருந்தால் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், ஸ்டாலினுக்கு இது நல்ல செய்தி. ஏனென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதில் தீர்ப்பு வரப்போவதே இல்லை.