பெற்றோருக்கு என்ன தீர்வு..?

Image

தங்கக் கூண்டு வேண்டாமே


இன்று, நம் நாட்டில் நல்ல லாபகரமான தொழில் என்ன தெரியுமா? முதியோர் இல்லம் தொடங்குவதுதான். ஆம், தெருவுக்குத் தெரு புதுசுபுதுசாக முதியோர் இல்லங்கள் முளைக்கின்றன. அதில் ஹை கிளாஸ், லோ கிளாஸ், நடுத்தர கிளாஸ் என்றுதான் எத்தனை வகைகள்?

முன்பு, ஒவ்வொரு குடும்பத்திலும் நாலைந்து பிள்ளைகள் இருந்தனர். மேலும் கூட்டுக்குடும்ப அமைப்பும் இருந்தது. அதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் குட்டீஸ்களில் இருந்து முதியவர் வரை சகல வயதினரும் நிரம்பியிருப்பார்கள். முதியவர்கள் மதிப்புக்கு உரியவர்களாக மதிக்கப்பட்டார்கள். எந்த ஒரு விஷயம் என்றாலும், பெரியவர்களின் உத்தரவை பெற்றபிறகே காரியங்கள் நடக்கும்.

ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை. வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களை கஷ்டப்பட்டு படிக்கவைத்து, வேலைக்குச் சேர்த்து, திருமணம் செய்துவைத்ததும், எல்லாமே மாறிப் போகிறது. ஆம், குடும்பத்தில் மாமியார், மாமனாரை வைத்துக் கவனிக்கும் அக்கறையும் பொறுமையும் பெண்ணுக்கு இல்லை. தன் மனைவியை மீறி குடும்பத்தில் பெற்றோரை வைத்துக்கொள்ளும் தைரியம் மகனுக்கு இருப்பதில்லை. அதனால், வாழ்க்கை சிதறிப் போகிறது.

தங்களுக்குப் பிறந்த பிள்ளைகளை குழந்தைகள் காப்பகத்திற்கும், பெற்றோரை முதியோர் இல்லத்திற்கும் அனுப்பிவிட்டு, தங்கள் பணியைக் கவனிப்பதற்கு இறக்கை கட்டிக்கொண்டு பறக்கிறார்கள். பெற்றோரை இப்படி விடலாமா என்று கேள்வி கேட்டால், ‘நாங்கள் கணவனும் மனைவியுமாக இருவரும் வேலை செய்வது எதற்காக தெரியுமா? குழந்தையும் பெற்றோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். பெற்றோ, வீட்டில் இருந்தால் தனிமையில் தவிப்பார்கள், அதனால்தான் பணம் கட்டி முதியோர் இல்லத்தில் விடுகிறோம். அங்கே ஏராளமான முதியவர்கள் இருப்பதால், அவர்களுக்கு சந்தோஷமாக பொழுது போகும். நிம்மதியாக இருப்பார்கள்” என்று சமாதானம் சொல்கிறார்கள்.

இது உண்மைதானா என்று ஒரே ஒரு கணம் யோசித்துப் பார்த்தால், இதன் பின்னே இருக்கும் அயோக்கியத்தனமும் சுயநலமும் கண்ணுக்குத் தெரியவரும். ஆம், கஷ்டப்பட்டு படிக்கவைத்த பெற்றோருக்கு, அதற்கான கூலியாக பணம் கொடுத்தால் போதும், அருகே இருந்து கவனிக்க வேண்டியதில்லை என்று பொறுப்பை தட்டிக்கழித்து விடுகிறார்கள்.

இதற்கு காரணம் யார் தெரியுமா? அதே பெற்றோர்தான்.

ஆம், குடும்பத்தின் மதிப்பு, முதுமையின் அனுபவம், முன்னோருக்கு மரியாதை, மூத்தோர் வாக்கு மகிமை போன்றவற்றை குழந்தைகளுக்கு முறையாகக் கற்றுக்கொடுப்பதில்லை. பிள்ளைகள் நிறைய மதிப்பெண் வாங்கவேண்டும் என்ற சிந்தனையில்தான் பெற்றோர் காலம் கடத்துகிறார்களே தவிர, குழந்தைகளுக்கு குடும்பத்தின் ஆணிவேர் எதுவென்று கற்றுத்தருவதில்லை. அதன் பலனையே, முதியோர் இல்லத்தில் அனுபவிக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் இருக்கும் இடத்தில் பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதில்லை. அதனால் பறந்து செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படவே செய்கிறது. இதன் அர்த்தம், அவர்களை முதியோர் இல்லத்தில் தங்க வைப்பது மட்டுமே தீர்வு என்பது அல்ல. அது தங்கக் கூண்டு.

தாங்கள் எங்கே இருக்க வேண்டும் என்ற முடிவை பெற்றோர் எடுக்கட்டும், தனியே வசிப்பது என்றாலும் சேர்ந்து வசிப்பது என்றாலும், முதியோர் இல்லம் என்றாலும் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுவே சரியான தீர்வாக இருக்கும். பெற்றோருக்கு சேர்த்து பிள்ளைகள் முடிவு எடுக்க வேண்டாம் என்பதே நமது கோரிக்கை.

Leave a Comment