சைவம் என்பது உணவா… மதமா..?
பொங்கல் பண்டிகை கொண்டாட்ட விடுமுறைகளுக்கு இடையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி இறைச்சிக் கடைகளை மூடச்சொல்லி தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது. இந்த உத்தரவு வழக்கம் போல் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்றன.
அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘’மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சி கூடங்கள் அரசு உத்தரவின் படி மூடப்படுகின்றன. இதனை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். எனவே இறைச்சி கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும் இறைச்சி கடைகள் இன்று செயல்படாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த உத்தரவை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சைவம் என்பது உணவா அல்லது மதமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் திராவிட சிந்தனையாளர்கள். ஏனென்றால் சைவம் என்பது சிவனைக் கும்பிடுபவர்களாகவே அறியப்பட்டு வந்தனர். அவர்களும் புலால் எடுத்துக்கொள்பவர்களே. ஆக, சிவனைக் கும்பிடுபவர்கள் புலால் உண்பவர்களே. இறைவனும் பிள்ளைக் கறி சாபிட்டவரே.
ஆக, சமயத்துக்கும் உணவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திருவள்ளுவர் புலால் உண்ணாமையை வலியுறுத்தினார் என்பதற்காக ஒரு நாள் அதனை வலியுறுத்துவதன் அர்த்தம் என்ன..? பொய் சொல்லாமை, களவு போன்றவைகளுக்கும் இப்படி நாட்கள் ஒதுக்கப்படுமா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதோடு பயிரும் உயிர் என்பதால் உயிர்க்கொலை என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லை. உணவு என்பது தனிப்பட்ட விவகாரம். இதில், அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்கிறார்கள்.