• Home
  • ஞானகுரு
  • கல்யாணக் கனவு கண்டால் சாவு நடக்குமா..?

கல்யாணக் கனவு கண்டால் சாவு நடக்குமா..?

Image

ஞானகுரு தரிசனம்

மயிலை கபாலீஸ்வரன்  கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தூண் ஒன்றில் முதுகைச் சாய்த்து கால்களை கால்நீட்டியபடி அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஞானகுரு. பக்தர்களில் எத்தனையெத்தனை வகை! குருக்கள் நீட்டும் தட்டில் தட்சணைக் காசு போடவும் வகையற்ற ஏழைகள். பட்டுவேட்டி சரசரக்க தோரணையாக வணங்கி நிற்கும் பெரிய தனக்காரர்கள், பயபக்தியுடன் மந்திரங்களை முணுமுணுப்பவர்கள், வேண்டுதலை நிறைவேற்றியதற்கு நன்றி சொல்லிவிட்டு கையோடு அடுத்த அப்ளிகேஷனைப் போட்டு வைப்பவர்கள், ஆசையை நிறைவேற்றினால் அள்ளிக் கொடுப்பதாக கடவுளுக்கே ஆசை காட்டுபவர்கள், ஏகாந்தமாக சுற்றித் திரிபவர்கள், கடவுளிடம் சண்டை போடுபவர்கள்,  பக்தர்களிடம் பிச்சை எடுப்பவர்கள், கடவுளை ஒரு கண்ணிலும் கட்டிளம் பெண்களை மறுகண்ணிலும் சேவிக்கும் ஆண்கள் என கோயில் களைகட்டியிருந்தது.

அழுதுகொண்டிருந்த இடுப்புக் குழந்தையை நச்சென கீழே உட்காரவைத்து, ஞானகுருவின் அருகில் அமர்ந்தாள் ஒரு பெண். இருபது வயதிருக்கும், உடுத்தியிருந்த ஆடையில் எளிமையும், ஏழ்மையும் தெரிந்தது. ஏற்கெனவே சோகத்தில் வந்தவளுக்கு இங்கு ஆறுதல் கிடைக்கவில்லை என்பது அவளது முகத்தில் தெரிந்தது. தாயின் சோகம் உணரா அந்தக் குழந்தை, சிணுங்கலுடன் தாயிடம் பால் குடிக்க தாவ… முதுகில் பட்டென்று ஒரு அடி வைத்தாள். அதை எதிர்பார்க்காத குழந்தை தாயைப் பாய்ந்து கட்டிக்கொண்டு ‘வீல்’ எனக் கத்தியது.

உடனே… அந்தக் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு சமாதானப்படுத்தத் தொடங்கினாள். கண்களின் ஓரம் கண்ணீர் எட்டிப் பார்த்தது. குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவள் தற்செயலாக  திரும்பிப் பார்த்தாள்.

ஞானகுருவின் இனிப்பான புன்னகையே அவளை  பேசவைக்க போதுமானதாக இருந்தது.

’’சாமி… அம்பாள்கிட்ட இருந்து ஒரே ஒரு பூ குடுங்கன்னு பூசாரிகிட்டே கேட்டேன். அவர் தரவே இல்லை… யார் யாருக்கோ கிடைக்குது, எனக்கு அந்தக் கொடுப்பினைகூட இல்லை…’’ என்று மேற்கொண்டு பேசப்போனவளை கையமர்த்தி தடுத்து, ‘‘தட்டில் எவ்வளவு தட்சணை போட்டாய்?’’ என்று கேட்டார்.

’’2 ரூபாய் சாமி…’’ என்று கூச்சத்துடன் சொன்னாள்.

’’அந்த காசுக்கு அவன் உனக்கு குங்குமம் கொடுத்ததே அதிகம்…’’ என்று சிரித்தார். அவளது ஏழ்மையைக் கிண்டல் செய்வதாக நினைத்து, முகம் சுருங்கி, கிட்டத்தட்ட அழும் நிலைக்கு அவள் வருவதை பார்த்ததும் ஆறுதலாக பேசத் தொடங்கினார்.  

’’பெண்ணே… நான் உன்னை குறை சொல்லவில்லை. பூசாரியின் தயவுகள் எல்லாம் பணத்தால் மட்டுமே அளக்கப்படுகிறது என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். அதுசரி…  அம்பாளின் பாதம்பட்ட பூ தேவைப்படும் அவசியம் என்ன..?’’

அந்த கேள்வி அவளுக்கு நிம்மதி தந்திருக்க வேண்டும். மனதில் இருப்பதைக் கொட்டத் தொடங்கினாள், ‘‘சாமி…  நான் ஒரு கனவு கண்டேன். என் தம்பிக்கு கல்யாணம் நடக்குது, அதுல செத்துப் போன எங்க அப்பா கலந்துக்கிறார். விருந்து சாப்பாடு தடபுடலா இருக்கு, நான் வைச்சதை எல்லாம் சாப்பிட்டுக்கிட்டே இருக்கேன். என் புள்ளைய யாரோ என்கிட்டே இருந்து வாங்கிட்டுப் போறாங்க, அதைக்கூட கண்டுக்காம சாப்பிடுறேன் சாமி…’’ என்றபடி கலங்கினாள்.

’’அதனால் என்னம்மா…?’’

’’என்ன சாமி இப்படி சொல்றீங்க… கல்யாண கனவு கண்டா வீட்ல ஏதாவது சாவு நடக்கும்னு பெரியவங்க சொல்வாங்களே… ஊர்ல எங்க அம்மா மட்டும் தனியா இருக்குது. அதுக்கு ஏதாவது நடந்துடுமோ, இல்லைன்னா என் வீட்டுக்கார், குழந்தைக்கு ஏதும் ஆயிடுமோன்னு பயமா இருக்கு. அதான் சாமிகிட்ட பூ கிடைச்சா… கெட்டது விலகிடும்னு கோயிலுக்கு ஓடியாந்தேன். பூசாரி பூ குடுக்காம என்னை இன்னும் பயம் காட்டிட்டார். ஏதோ கெட்டது நடக்கப்போகுது…’’  என்றபடி கண்ணீர் சிந்தினாள்.

‘’உனக்கு ஏதாவது நடந்துடாதா..?’’

‘’அப்படி நான் போயிட்டா பரவாயில்லை சாமி… வீட்டுக்காரர் பிள்ளை மேல உசுரா இருக்கார்… இன்னொரு கல்யாணம் முடிச்சிக்கிட்டாலும், பிள்ளையை நல்லா பாத்துக்கிடுவார்…’’ என்றவளின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்.  

பெயர் அம்சவள்ளி. நெல்லையை அடுத்த சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறாள். இவளது தாய்வீடும், தூரத்து உறவினரான கணவன் குடும்பமும் விவசாய கூலிகள். வானம் பொய்த்து விவசாயம் இல்லாததால் சென்னைக்கு  வரவேண்டிய நிலை. இப்போது கணவன் சொற்ப சம்பளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான். இவள் பத்தாவது வரை படித்திருக்கிறாள், மேலும் திருமணம் ஆனதும் குழந்தை பிறந்துவிட்டதால் வீட்டோடு இருக்கிறாள். ஒரே ஒரு அறை, அதிலேயே கிச்சன் தடுப்பு என்று இருக்கும் குட்டியூண்டு வீட்டில் வாடகைக்கு இருக்கிறாள். அந்த குடியிருப்பில் இருக்கும் ஆறு வீட்டிற்கும் சேர்த்து ஒரே பாத்ரூம், ஒரு டாய்லெட். தண்ணீர் எல்லாம் வாசலில் இருக்கும் குழாயில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இதெல்லாம் குறையாக எடுத்துக் கொள்ளாமல் வாழ்பவளை, நேற்றைய கனவுதான் புரட்டிப் போட்டிருக்கிறது. அத்தனை விஷயத்தையும் கொட்டியதில் கொஞ்சம் அசுவாசமடைந்திருந்தாள்.

’’அம்சவள்ளி… கொஞ்சம் இரு…’’ என்று சொல்லிவிட்டு அருகே அனுமன் சிலைக்குப் போடப்பட்டிருந்த பூ மாலையை  எடுத்துவந்து, கண்களை மூடி தியானித்து அவளிடம் கொடுத்ததும், பரவசத்துடன் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

’’அம்சவள்ளி… கனவு என்பது என்ன தெரியுமா?’’

’’நடக்கப்போறதை முன்கூட்டியே நமக்குச் சொல்றதுதான சாமி…’’

’’இல்லை அம்சவள்ளி. ஞாபகங்கள், நினைவுகள், பதிவுகள் என அன்றாடம் சேகரிக்கும் மூளை எனும் குப்பைத் தொட்டியில் இருந்து நிரம்பிவழிபவைதான் கனவுகள். அதனால் கனவில் நீ இறைவனைப் பார்த்தாலும் சரி, நரகத்தைப் பார்த்தாலும் சரி அதன்படி எதுவும் நிகழப் போவதில்லை. வாழ்விற்கும் கனவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…’’

’’காலையில கண்ட கனவு பலிக்கும்னு சொல்வாங்களே சாமி..’’

’’எந்த நேரத்தில் பார்த்தால் என்ன, குப்பையை குப்பை என்றுதானே சொல்லவேண்டும்?’’

அம்சவள்ளிக்கு அந்த பதிலில் முழுதிருப்தியில்லை என்பது அவள் முகத்தில் தெரிந்தது.

’’சரி.. உன் வீட்டில் இருந்து கோயிலுக்கு வரும்வரை, தெரிந்தவர்கள் என்று எத்தனை நபர்களை சந்தித்தாய்..?’’

’’பக்கத்து வீட்டுக்காரம்மா மட்டும்தான் மார்க்கெட்டுக்குப் போயிட்டு வந்தாங்க, வேற யாரையும் பார்க்கலையே…’’ என்றாள்.

’’நீ யாரையும் குறிப்பாக பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், உன் கண்கள் அப்படியல்ல. நீ வந்த தெரு, மனிதர்கள், கட்டடங்கள், நடந்துகொண்டிருந்த நிகழ்வுகள் என்று அனைத்தையும் கவனித்து உள்வாங்கி இருக்கும்.  இவை எதுவும் உனக்குத் தற்போது தேவையில்லை என்பதால், உன் நினைவுக்கு அதனை மூளை கொண்டுவருவது இல்லை.  இதுபோலவே இதுவரை உன் வாழ்நாளில் நடந்த, கேட்ட, பார்த்த விஷயங்கள் மட்டுமின்றி உன் எண்ணங்கள், ஆசைகள், நிராசைகள், கோபங்கள், பயம், சந்தோஷம் அத்தனையையும் மூளை சேகரித்துக் கொண்டே இருக்கும். அதிகப்படியான குப்பை சேர்ந்தவுடன் தேவையற்றதை வெளியே தள்ளுவது போன்று மூளையும் அவ்வப்போது, தேவையற்ற சில நினைவுகளை உறக்கத்தில் கனவாக வெளியேற்றுகிறது. குப்பைகள் வெளியேறுவது வீட்டுக்கு சுகாதாரம்தானே தவிர, கவலைப்பட ஏதுமில்லை. கனவுகள் காணாத நபர் என்று எவருமே இல்லை, எல்லோருமே கனவுக்கு அர்த்தம் தேடத் தொடங்கி, அதனை நிஜ வாழ்வுடன் பொருத்திப் பார்க்கத் தொடங்கினால், நிகழ்காலத்தில் யாருமே சுகமாக வாழவே முடியாது…’’ என்றேன்.

அம்சவள்ளிக்கு அந்த பதிலிலும் அத்தனை திருப்தி இல்லை என்றாலும், அடுத்த ஒரு கேள்வியை ஆர்வமாகக் கேட்டாள். அது, அத்தனை மனிதர்களும் கேட்க விரும்பும் ஒரு கேள்வி.  

, ‘‘சாமி… நாங்க பணக்காரங்களாகி சந்தோஷமா இருப்போமா? குறி சொல்லுங்க…. ஆனா உங்களுக்குத் தர காசு இல்லை’’ என்று கேட்டாள்.

’’உனக்குப் பணம் வேண்டுமா..? சந்தோஷம் வேண்டுமா?’’ .

பதில் சொல்லத்தெரியாமல் விழித்தவள், பின்னர் சமாளித்துக்கொண்டு, ‘‘பணம் இருந்தாத்தான சந்தோஷமா இருக்க முடியும்?’’ என்று சந்தேகம் கேட்டாள்.

‘‘இல்லை அம்சவள்ளி… பணத்துக்கும் சந்தோஷத்துக்கும் துளியும் சந்பந்தம் இல்லை. இந்த உலகத்தை பணக்காரர்கள், ஏழைகள் என்று பிரிக்க முடியாது. சந்தோஷமாக இருப்பவர்கள்…. சந்தோஷம் இல்லாதவர்கள் என்றுதான் பிரிக்க முடியும். கோடிகோடியாகப் பணம் கொட்டிக் கிடந்தும் சந்தோஷம் இல்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். அதுபோலவே, அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழி தெரியாத நிலையிலும், கவலையின்றி சந்தோஷமாக இருக்கும் ஏழையும் உண்டு. நீ எந்த பிரிவில் சேர விரும்புகிறாயோ அது உனக்குக் கிடைக்கும். சென்று வா…’’ என்றவர் கையில் குழந்தையைக் கொடுத்தாள்.

உச்சிமுகர்ந்து மீண்டும் கொடுத்ததும் சந்தோஷமாகிப் போனாள்.

Leave a Comment