• Home
  • சட்டம்
  • பெண்களுக்கு சொத்து தராமல் ஏமாற்ற முடியுமா?

பெண்களுக்கு சொத்து தராமல் ஏமாற்ற முடியுமா?

Image

வழக்கறிஞர் சொல்வதைக் கேளுங்க


இன்று, ஆண்களைப்போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று பல பேருக்குத் தெரிவதில்லை. திருமணம் செய்துகொடுத்தவுடன் கடமைகள் அனைத்தும் முடிந்துவிடுவதாக அவர்கள் நினைக்கின்றனர். மேலும் சொத்து குறித்து அவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடமோ, சகோதரர்களிடமோ கேட்பதில்லை. ஆனால், இந்த விவரம் தெரிந்த சிலர், இன்று அதற்காகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.
உண்மையில், பெண்களுக்கு சொத்தில் என்னென்ன உரிமைகள்  இருக்கிறது என்று வழக்கறிஞர் நிலாவிடம் கேட்டோம். “ஒருகாலத்தில், திருமணத்தின்போது கொடுக்கப்படும் நகைகளும், சீர்வரிசைகளும் மட்டுமே பெண்களுக்கான சொத்து என்று இருந்தது. ஆனால், 1956ல் இந்து வாரிசு உரிமைச் சட்டம் பெண்களுக்கான சொத்துரிமையை நிலை நாட்டியது. இந்த சட்டம் வருவதற்கு முன்பு, பெண்களுக்கு, பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது.

ஆனால், 1956 இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி, ஓர் இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில், அந்த ஆண் இறக்கும்பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாகக் கிடைக்கும். இதில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதன்பிறகு 1956 சட்டத்தில் சில மாற்றங்கள் வந்தன. 1989ல் மேலும் சில மாற்றங்கள் வந்ததன. ஆனாலும் 2005ல் மத்திய அரசு கொண்டுவந்த சட்டமே ஒரு தெளிவைத் தந்தது.

அதன்படி, ஆண்மகனுக்கு எப்படியெல்லாம் பூர்வீக சொத்தில் உரிமை உள்ளதோ, அதன்படியே பெண்ணுக்கும் உரிமை உண்டு. அவற்றில் இரண்டு முக்கிய விதிமுறைகளையும் சட்டத்தின் கூடவே அருமையாகச் சொன்னது. 2005ம் ஆண்டின் இந்து வாரிசு உரிமை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர் சொத்தை பாகப்பிரிவினை செய்திருக்கக்கூடாது. பெண்கள்  உரிமை கொண்டாட, நினைக்கும் சொத்தை  அவரது தந்தை 2005க்கு முன்னர் வேறொருவருக்கு விற்பனை செய்திருந்தால் அதில் பெண்கள் பாகமோ, உரிமையோ கோர முடியாது.

இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, இது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தினருக்கு இந்த சட்டம் மாறுபடும்  என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

பொதுவாக, திருமணமான ஆணின் சொத்துக்கு மனைவி, மக்கள், தாயே உரிமை கொள்ள முடியும். திருமணமான பெண்ணின் சொத்துக்கு கணவனும், பிள்ளைகளும் மட்டுமே உரிமை கோர முடியும். திருமணமாகாத ஆண் மற்றும் பெண் சொத்துக்கு பெற்றோர் மட்டுமே உரிமைகொள்ள முடியும். பெற்றோர்கள் இல்லையென்றால், இருதரப்புக்குமே சகோதர, சகோதரிகள் சொத்துக்கு உரிமை கொண்டாடலாம்.

திருமணம் ஆகிவிட்ட ஓர் ஆணின் மனைவி, மக்கள் இறந்துவிட்டால், அவருடைய மகன் அல்லது மகள் வயிற்று வாரிசுகளுக்கு நேரடியாக சொத்துப்போக நேரிடும். கணவர் இறப்பிற்கு அவரது மனைவியே காரணம் என்று சட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது கணவரது மரண வழக்கில் மனைவி சம்பந்தப்பட்டு இருந்தாலோ மனைவி கணவரது சொத்தில் பங்கு கேட்க முடியாது.

தாத்தா மற்றும் தந்தை சொத்தில்  ஆண் வாரிசுகளுக்கு இணையாக பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது. நிலம், வயல் மற்றும் அசையா சொத்துகளை பெண்களும் பிரித்துக்கொள்ளலாம். ஆனாலும் பாரம்பரியமாக இருக்கும் வீட்டை, சகோதரன் விரும்பும் வரை அவரின் சம்மதமில்லாமல் அதை விற்கவோ, விற்பனை செய்து பணம் கொடுக்க வேண்டும் என்றோ அடம்பிடிக்க முடியாது.

இந்த உரிமைகள் எல்லாம் தனிப்பட்ட முறையில் யாருக்குமே உயிலோ அல்லது பாகப்பிரிவினை செய்து வைக்காமல் இருந்தால் மட்டுமே பொருந்தும். உயில் எழுதி வைத்துவிட்டால் உயிலின் தன்மையை பொறுத்துதான் அந்த சொத்துக்களை பிரிக்க முடியும். முக்கியமாக, உயிலை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். மாற்றி அமைக்கலாம். ஆனால், கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும்” என்றார்.

பெண்களே, நீங்கள் எதிலும் ஆண்களுக்குக் குறைவில்லை என்பதில் உறுதி கொள்ளுங்கள்.

  • நிலா, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

தொடர்புக்கு : 7299753999

Leave a Comment