ஐஸ் படலத்தை உடைத்துப் போடுங்கள்.
பனியின் தன்மை விசித்திரமானது. ஒரு பொருளின் மீது மெலிதாக படர்ந்திருக்கும்போது, அதனை எளிதில் அகற்றிவிட முடியும். அதுவே அடுக்கடுக்காக மீண்டும் மீண்டும் படிந்து கடினத்தன்மை அடைந்துவிட்டால், அந்த பொருளை உடைத்தோ, தீயில் காட்டியோ அகற்ற வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில், அந்த பொருள் சேதமாவதற்கே அதிக வாய்ப்புண்டு.
மனித உறவுகளும் அப்படித்தான். ஏமாற்றம், வருத்தம், கோபம் போன்ற காரணங்களால் உறவுக்குள், நட்புக்குள் மனஸ்தாபம், பிரிவு ஏற்படுவது சகஜம். இதுபோன்ற தருணங்களில், அதாவது இருவருக்கும் நடுவே மெல்லிசாக ஐஸ் படரும்போதே, ஈகோவை தூக்கிப் போட்டு பிரிவை உடைப்பதற்கு யாரேனும் ஒருவர் முன்வர வேண்டும். இல்லையென்றால், ஒட்ட முடியாத அளவுக்குப் பிரிவு நிரந்தரமாகிவிடும்.
என்ன பிரச்னைக்காக உரசல் ஏற்பட்டது என்பது ஒரு கட்டத்தில் மறந்தே போய்விடும். ஆனாலும், ஈகோவை தூக்கிப் போட்டு பேசுவதற்கு மனம் வராது. ஐஸ் படலம் கடினமாகி, இருவருக்கும் இடையே உடைக்க முடியாத சுவர் எழுந்துவிடும்.
ஒரே வீட்டில் பத்து வருடங்களுக்கும் மேல் பேசாத தம்பதியர், அக்கம்பக்கம் வசித்தாலும் பேசிக்கொள்ளாத சகோதரர்கள், ஒரே அலுவலகத்தில் ஏழெட்டு வருடங்களாகப் பேசாத நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.
இந்த பிரிவின் மூலம் என்ன சாதிக்கப் போகிறோம்?
விலகி இருப்பவரை காணும் தருணங்களில் அல்லது அவரை பற்றி பேசப்படும் தருணங்களில் ஹார்மோன் சுரப்பிகள் தாறுமாறாக சுரந்து, பல நோய்களுக்கு மூல காரணமாவதே நடக்கிறது.
ஆகவே, யாருடைய தவறு என்பது பிரச்னை இல்லை. ஐஸ் கட்டியை உடைக்கும் முதல் நபராக நீங்கள் இருங்கள். ’சின்ன மனஸ்தாபத்துக்கு நாம ஏன் பேசாம இருக்கணும்… இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு பேசாம இருக்கலாமா?’ என்று தொடங்குங்கள் பனிப்படலம் சட்டென உருகிவிடும்.
அதன் பிறகு, முன்பு போன்று அத்தனை ஆழமான நட்பு, உறவுக்கு சாத்தியம் இல்லை என்றாலும், முகத்தைப் பார்த்து சிரிக்க முடியும். மனதில் நெருடலின்றி வாழ முடியும். அதுவே போதும்.
எனவே, எல்லா காலகட்டங்களிலும் ஐஸ் கட்டியை உடைப்பவராக நீங்கள் இருங்கள். இதனால் இழக்கப்போவது எதுவும் இல்லை. ஆனால், கிடைக்கப் போவது ஆயிரம் இதயங்கள். மன்னிப்பதிலும் மறப்பதிலுமே இருக்கிறது, உண்மையான மகிழ்ச்சி.
எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர், ஞானகுரு கவுன்சிலிங்