கருணாநிதி நாணயம் 10 ஆயிரம் ரூபாயாம்
100 ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்டுள்ள கருணாநிதி நாணயத்தை 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அத்தனை தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கருணாநிதிக்கு நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டதே தி.மு.க.வினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத்திருமண விழா ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த 100 ரூபாய் நாணயத்தை ரூ.10,000 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
நூறு நாணயத்தை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வது படு பயங்கரமான பகல் கொள்ளையாக இருக்கிறது என்று கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர், ‘’கருணாநிதியின் நற்பெயரை அதிகரிக்க செய்யப்படும் சூழ்ச்சி, இந்த விற்பனைக்கு GST விதிக்கப்படுகிறதா? 100 ரூபாய் நாணயத்தை அதிக விலைக்கு விற்பது சட்டப்படி குற்றமாகும். இது வரையறுக்கப்பட்ட மற்றும் சிறப்பு பதிப்பாக இருக்கலாம் ஆனால் ரிசர்வ் வங்கி இதற்காக எந்த தொகையும் வசூலிக்காது.
இது வெறும் நிதி திரட்டுவதற்காக மற்றும் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக செய்வது போலவே உள்ளது. அப்படி கலைஞர் நினைவை போற்றவேண்டும் என்றால் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு நாணயத்தை இலவசமாக கொடுக்கலாம் அல்லவா? எதற்கு 10,000 வசூலிக்க வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கருணாநிதி என்றாலே விஞ்ஞானக் கொள்ளை என்று மக்கள் ஞாபகப்படுத்தும் நேரத்தில், அவரது நாணயத்துக்கு விஞ்ஞான ரீதியில் பணம் வசூலிப்பது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது