உங்கள் வாழ்க்கையைப் பிறர் தீர்மானிக்கலாமா?

Image

ஆசிரியர் பக்கம்

சமீபத்தில் நண்பர் ஒருவர், ‘’என் மகளுக்கு அமெரிக்காவில் வேலை செய்யும் மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருக்கிறோம்…’’ என்று சொன்னார்.

அவரிடம், ‘’சென்னையில் வேலை செய்யும் நபர் தான் வேண்டும் என்று போன சந்திப்பில் சொன்னீர்களே…’’ என்று கேட்டதற்கு, ‘’அப்படித் தான் தேடிக்கொண்டு இருந்தோம். சமீபத்தில் என் மகளின் தோழிக்கு அமெரிக்கா மாப்பிள்ளையுடன் திருமணமானது. அவளுடைய வாழ்க்கை அத்தனை நன்றாக இருக்கிறதாம். அதனால் மகளும் அமெரிக்க மாப்பிள்ளை கேட்கிறார்”” என்றார்.

‘’எனக்கு கார் வாங்குற ஆசை எல்லாம் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிட்டார். நம்மளை விட அந்தஸ்து குறைஞ்சவரே வாங்கிட்டாரு, நாம வாங்கலைன்னா நல்லா இருக்காதுன்னு வாங்கிட்டேன்’’

‘’கொஞ்சம் நிலம் இருக்குன்னு சொன்னாத்தான் மதிக்கிறாங்க, அதான் லோன் வாங்கி கிராமத்தில் இடம் வாங்கிப் போட்டேன்’’

‘’கிளாஸ்ல நிறைய பசங்க கிரிக்கெட் விளையாடுறாங்களாம், அதான் பையனை கோச்சிங்ல சேர்த்துவிட்ருக்கோம்’’

‘’எல்லோரும் கட்டுறாங்கன்னு நம்பித்தான் சீட்டுக் கம்பெனியில பணம் போட்டேன், ஓடிப் போயிட்டான். முதல்ல பணம் போட்டவங்க எல்லாம் தப்பிச்சிட்டாங்க…’’

இப்படி நிறைய பேர் அடுத்தவர்களுக்காக, அடுத்தவர்களைப் போலவே வாழ்கிறார்கள். ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதை அவரது அண்டை வீட்டுக்காரரே முடிவு செய்கிறார்.

உங்களுக்கு முன் காரில் ஒருவர் 120 கிலோமீட்டர் ஸ்பீடில் போகிறார் என்றால், அது அவரது விருப்பம். அவரைப் போலவே நீங்களும் 120 கிலோமீட்டர் ஓட்டுகிறீர்கள் என்றால் உங்கள் வேகத்தை தீர்மானிப்பது அவராக மாறுகிறார்.

மற்ற மனிதர்களுக்கு அடிமையாக வேண்டாம். அடுத்தவர்களைப் பார்த்து ஆசைப்பட்டு, பொறாமைப்பட்டு, விருப்பப்பட்டு உங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிட வேண்டாம். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை நீங்களே கொண்டாட்டமாக வாழுங்கள்.

வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவே, மகிழ்ச்சி.

Leave a Comment