பணமே மந்திரம்
ஏ.டி.எம். மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனையில் எக்கச்சக்க மோசடிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. யாருக்கும் உங்கள் பின் நம்பரை, பாஸ்வார்டுகளை சொல்லவேண்டாம் என்று அறிவுறுத்தி வந்தாலும், பலரும் கொடுத்து ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில், உங்களுடைய ஏ.டி.எம். பின் எண் மற்றும் நெட் பேங்கிங் பாஸ்வேர்டு உங்களைத் தவிர எத்தனை பேருக்குத் தெரியும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக உருவெடுத்துள்ளது.
பொதுவாக பாஸ்வேர்டுகளை குடும்ப உறுப்பினர்களுக்குக்கூட தெரிவிக்க வேண்டாம் என்று வங்கிகளும் பண பரிமாற்ற நிறுவனங்களும் சொல்கின்றன. ஆனால், அப்படி இருக்கலாமா, இருப்பது நல்லதா என்று கேட்டால், ‘இல்லை’ என்பதுதான் உண்மையான பதில். ஏனென்றால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் பணம் குறித்த பரிவர்த்தனைகளில் எந்த ரகசியமும் இருக்கக்கூடாது. அதனால், குடும்பத்தில் மனைவி, மகன், மகள் என்று யாரேனும் ஒருவருக்கு உங்களுடைய பாஸ்வேர்டு, பின் எண் போன்றவை தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
அதே போன்று சொத்துக்கள் குறித்த விபரம், கடன் குறித்த தகவல்களும், குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். சொத்துப் பத்திரம், நகைகள் குறித்த பட்டியல் போன்றவையும் வீட்டில் ஓரிருவருக்குத் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அப்படி, யாருடனும் பகிர்ந்துகொள்வதற்கு விருப்பம் இல்லை என்றால், அவற்றை ஒரு ஃபைலில் அதாவது கம்ப்யூடரிலாவது சேகரித்துவையுங்கள். பாஸ்வேர்டு பாதுகாப்புள்ள உங்களுடைய சொந்த கம்ப்யூட்டரில், சொத்துக் கணக்கு, பணமுதலீடு, கடன் போன்றவை மட்டுமின்றி பி.பி.எஃப்., மருத்துவக் காப்பீடு அல்லது ஃபிக்சட் டெபாசிட் போன்ற நிதி ஆவணங்களின் விவரங்களையும் ஒரு எக்செல் ஃபைலில் எழுதி வையுங்கள். இதில் பிரீமியம் அல்லது போனஸ் கிடைக்கும் தேதிகள் உள்ளிட்ட கணக்கு விவரங்களையும் சேர்க்கலாம்.
இது ஒரு வகையில் மிகவும் நல்லது. ஏனென்றால், பின் நம்பர்களையும் பாஸ்வேர்டுகளையும் மாதத்துக்கு ஒரு முறையாவது மாற்றும்படி சில வங்கிகள் கேட்டுக் கொள்கின்றன. எனவே குடும்ப உறுப்பினரிடம் அவ்வப்போது அதை பகிர்வது முடியாது. அதனால், தேவைப்படும் நேரத்தில் மட்டும் அந்த ஃபைலை பார்த்து தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.
அதேபோன்று, உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்னர், பல்வேறு நபர்களிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள். ஒருபோதும், எவ்வளவு தொகை முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டாம். ஆனால், பல தரப்பு மக்களிடமும் பேசும்போதுதான், உண்மையில் எதில் முதலீடு செய்வது அதிக பாதுகாப்பும், நல்ல வருமானமும் வரும் என்பது தெரியவரும்.
நீங்கள் வேலை செய்து பணம் சம்பாதிப்பது முக்கியம் அல்ல, நீங்கள் சம்பாதித்த பணம், அது உறங்கும் நேரத்திலும் உங்களுக்காக பணம் சம்பாதித்துத்தர வேண்டும். அதேநேரம், அது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதனால் சரியான நபர்களை உங்களுடைய இன்சூரன்ஸ், முதலீட்டு ஏஜெண்ட்களாக தேர்வு செய்யுங்கள். திடீரென உங்களுக்கு ஒரு சிக்கல், உயிரிழப்பு ஏற்பட்டால், அவர்கள் உங்கள் குடும்பத்தினருக்கு உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும்.
உங்கள் பணம் குடும்பத்தினருக்கு சரியாக பயன்பட வேண்டும் என்றால், அதற்கான நடவடிக்கையையும் இப்போதே எடுத்துவிடுங்கள்.