எஸ்.கே.முருகன் – ஞானகுரு கவுன்சிலிங்
சென்னையில் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான சம்பத்குமார் மனக்குழப்பத்துடன் வந்தார். என்ன பிரச்னை என்று கேட்டதும் மளமளவென பேசத் தொடங்கினார்.
‘’எனது சொந்த ஊர் நெல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். முதல் தலைமுறை பட்டதாரி. மிகவும் கஷ்டபட்டு படித்து இப்போது ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் பணியில் இருக்கிறேன். என்னுடைய சகோதரிகள் இருவருக்குத் திருமணம் முடித்துக் கொடுத்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இத்தனை நாட்களும் என் கல்யாணம் பற்றி யோசிக்கவே இல்லை.

இப்போது எனக்கு கடமைகள் முடிந்துவிட்டன. வீட்டில் பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது அலுவலகத்தில் பணியாற்றும் தீபா மீது எனக்கு ஆர்வம் வந்திருக்கிறது. அவருக்கு 33 வயது. திருமணமாகி ஐந்து வயதில் பெண் குழந்தை இருக்கிறது. உறவுக்காரரை திருமணம் முடித்திருக்கிறார். ஆனால், அந்த உறவு சரியாக இல்லை. இவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்தே அழிக்கிறார். அதோடு அவ்வப்போது அடிக்கவும் செய்கிறார்.
தீபாவுக்கு நடக்கும் கொடுமையை தட்டிக்கேட்க அவரது உறவினர்கள் வருவதில்லை. புருஷன் என்றால் அப்படித்தான், அட்ஜெஸ்ட் செய்து போ என்று தீபாவுக்கே ஆலோசனை சொல்கிறார்கள். அலுவலகத்தில் அவ்வப்போது அவர் அழுவதைப் பார்த்திருக்கிறேன். உடன் பணியாற்றுபவர்களும் அவர் கதையைச் சொல்வார்கள்.
நாலைந்து வருடமாக ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம் என்றாலும் கடந்த 6 மாதமாக நெருக்கமாகப் பேசிப் பழகுகிறோம். இப்போது தீபா எனக்காக கணவரை டைவர்ஸ் செய்துவிட்டு வரத் தயாராக இருக்கிறார்.
வயது வித்தியாசத்தை நான் பெரிதாக நினைக்கவில்லை என்றாலும் பெற்றோர் மற்றும் உறவுகளுடன் இந்த விஷயத்தை எப்படி பேசுவது என்று புரியவில்லை.
இந்த விஷயத்தை இப்போது யாரிடமும் சொல்ல வேண்டாம், கோயிலில் திருமணம் செய்துகொண்டு நேரடியாக ஊருக்குப் போய் சொல்லிக்கொள்ளலாம் என்று தீபா சொல்கிறார். எனக்கு என்ன முடிவு எடுப்பது என்று புரியவில்லை. நீங்கள் தான் உதவ வேண்டும்’’ என்றார்.
’’உங்களுக்குள் பழக்கம் எதுவரை போயிருக்கிறது..?’’
‘’எல்லை மீறியிருக்கிறோம். நான் தனியாக தங்கியிருக்கிறேன். என் அறைக்கு வந்திருக்கிறார். நான் தான் வலுக்கட்டாயமாக வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தேன். ஏதேனும் வீட்டில் பிரச்னை என்றால் இங்கு வாருங்கள் என்று சொல்லி அழைத்தேன். கடந்த மூன்று மாதங்களாக அடிக்கடி தவறு செய்கிறோம். எனக்கு அது பிடித்திருக்கிறது. அவரும் மகிழ்ச்சியாக ஃபீல் செய்கிறார்…’’
‘’அவரது கணவருக்கு உங்களைப் பற்றி தெரியுமா..?’’
‘’அவரது மகள் பிறந்த நாளுக்கு அலுவலகத்தில் நாலைந்து நண்பர்கள் ஒன்றாகப் போனோம். அப்போது அறிமுகம் செய்துவைத்தார். இயல்பாகப் பேசினார். எங்களுக்குள் தொடர்பு இருப்பது எங்கள் அலுவலக நண்பர்களுக்கே தெரியாது. அத்தனை ரகசியமாக உறவை பாதுகாத்து வருகிறோம்…’’
‘’அவரது கணவர் மிகவும் கோபக்காரராகத் தெரிகிறாரா… என்ன வேலை செய்கிறார்..?’’
‘’கொஞ்ச நேரமே பேசியிருக்கிறோம். அதில் கோபக்காரராகத் தெரியவில்லை. ஆனால், அவர் ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். வெளிநாட்டில் போய் எம்.பி.ஏ. படித்து வந்திருக்கிறார். டூரிசம் தொடர்பான ஒரு பணியில் இருக்கிறார். அவ்வப்போது வெளியூர் போய்வருகிறார். ஆனால், அடிக்கடி வேலையை விட்டுவிடுகிறார். தனியாக ஒரு டூரிஸ்ட் கைடு நிறுவனம் தொடங்க இருப்பதாக எங்களிடம் கூறினார். அவர் தனியே தொழில் தொடங்குவதில் தீபாவுக்கு உடன்பாடு இல்லை. அதனால் ஆரம்பித்த தகராறு இப்போது பெரிதாக மாறியிருக்கிறது…’’
‘’அவர் தொழில் தொடங்குவதில் ஏன் தீபாவுக்கு உடன்பாடு இல்லை..?’’
‘’நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டல் வைக்கிறேன் என்று ஏற்கெனவே பணம் இழந்திருக்கிறார். அதனால் இந்த தொழிலையும் சொதப்பிவிடுவார் என்று தீபா நினைக்கிறார். அவர் வீட்டில் கிடைத்த பூர்விகச் சொத்துக்கான பங்கு பணத்தை வைத்துத் தான் ஹோட்டல் தொடங்கி அதை முழுமையாக காலி செய்துவிட்டார். இப்போது கொஞ்சம் பூர்வீக நகைகள், ஒரு வீடு மட்டுமே இருக்கிறது. இதுவும் பறிபோய்விடும் என்று பயப்படுகிறார்…’’
‘’குடிப்பழக்கம் இருக்கிறதா..?’’
‘’இப்போது எல்லோரும் தான் குடிக்கிறார்கள். நானும் குடிப்பேன். ரொம்பவும் சோகமாக இருக்கும் நேரத்தில் தீபாவும் குடிப்பார். எங்கள் வேலை கலாச்சாரத்தில் இதுவெல்லாம் தவறு இல்லை…’’
‘’தீபாவுடன் பழகும் நேரத்தில் வராத குழப்பம் இப்போது ஏன் உங்களுக்கு வந்திருக்கிறது..?’’
‘’தீபாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பழகவே இல்லை. அழகான பெண்ணுக்கு இத்தனை பெரிய சோகமா என்று ஆறுதல் சொல்லவே அவரிடம் பழகினேன். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவர் என்னை முழுமையாக வசீகரித்துவிட்டார். இப்போது வாரத்தில் இரண்டு நாட்களாவது வீட்டுக்கு வந்து சமையல் செய்து வைக்கிறார். அவர் எனக்குக் கிடைத்தால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றே தோன்றுகிறது. ஆனால், என் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள் என்பது தான் என் பயம். அதேநேரம், அவரது குழந்தை என்னை தந்தையாக ஏற்றுக்கொள்ளுமா என்பதும் புரியவில்லை. தீபாவின் கணவருக்கு நட்பு மற்றும் உறவு வட்டாராம் அதிகம். அவர் வந்து பிரச்னை செய்தால் என்னால் சமாளிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. ஆனால், கணவர் விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தீபா நம்பிக்கை தருகிறார்..’’
‘’உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டுமா, இது குறித்துப் பேசினீர்களா..?’’
‘’தீபாவே பேசினார். விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார்… இரண்டு குழந்தைகளையும் நன்றாக வளர்ப்போம் என்கிறார்…’’
‘’அப்படியென்றால் உங்களுக்கு அவருடைய கணவரை நினைத்துப் பயமாக இருக்கிறது. ஊரில் உங்களுக்குரிய மதிப்பும் மரியாதையும் போய்விடும் என்று பயப்படுகிறீர்கள், அப்படித்தானே..’’
‘’ம். அதுதான் பிரச்னை. நான் நன்றாக சம்பாதிக்கிறேன் என்றாலும் யாருடனும் சண்டை போட்டது இல்லை. யாராவது அதட்டிப் பேசினாலே என்னால் தாங்க முடியாது. தலை வலி வந்துவிடும். விவாகரத்து என்பது தீபா நினைப்பது போன்று அத்தனை எளிதாக இருக்காது. நான் தீபாவை மயக்கி பிரிப்பதாக நினைத்து சண்டைக்கு வருவார். அதேபோன்று என்னை தீபா ஏமாற்றிவிட்டார் என்றே என் பெற்றோர் நினைப்பார்கள். தீபா வேறு ஜாதிப் பெண். அதனால் என் அப்பாவும் அம்மாவும் அதன்பிறகு என்னுடைய வீட்டுக்கு வர மாட்டார்கள். நானும் ஊர்ப்பக்கம் போக முடியாது…’’
’’சரி, ஒரு முறை தீபாவின் கணவரை தனியே சந்தித்துப் பேசுங்கள். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை எல்லாம் கேளுங்கள்…’’
‘’அதெப்படி முடியும்? என்னால் அவரிடம் இது பற்றி பேசவே முடியாது. அவராக வந்து பேசினாலும் தீபா என் பக்கத்தில் இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். என்னால் தனியாக அவரிடம் பேச முடியாது…’’
‘’சரி. தீபா விவாகரத்து வாங்கிவிட்டார். உங்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்றே வைத்துக்கொள்வோம். என்றாவது ஒரு நாள் தீபாவின் கணவர் உங்கள் வீட்டுக்கு வந்து தீபாவிடம் பேசுகிறார் அல்லது தீபாவை வெளியே எங்காவது அழைத்துச்செல்கிறார் என்றால் என்ன செய்வீர்கள்..?’’
இப்படியொரு கேள்வியை சம்பத் எதிர்பார்க்கவில்லை. ’’அதெப்படி, நான் திருமணம் முடித்த பெண்ணுடன் அவரது பழைய கணவர் பழகலாம்… அது சரிப்பட்டு வராது. தீபாவை அனுப்பிவிடுவேன். அவர் போகவில்லை என்றால் நான் வீட்டை விட்டு போய்விடுவேன்…’’
‘’இதென்ன அநியாயமாக இருக்கிறது. வேறு ஒருவரது மனைவி உங்கள் வீட்டுக்கு வரலாம், உங்களுடன் படுக்கலாம், உங்களுக்கு சமைத்து வைக்கலாம். ஆனால், நீங்கள் திருமணம் முடித்த மனைவியுடன் அவரது பழைய கணவர் பேசவும் பழகவும் கூடாது என்பது நியாயமா…? அந்தக் குழந்தை அவருடையதுதானே, அதை பார்க்க அவர் வரத்தானே செய்வார். சட்டமும் அதை அனுமதிக்குமே…’’
கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார். ’’நான் இதை யோசிக்கவில்லை. இப்போது நான் என்ன செய்யவேண்டும்?’’ என்று நேரடியாகக் கேட்டார்.
‘’இது உங்களுடைய வாழ்க்கை. தாம்பத்திய உறவுக்குள் விரிசல் ஏற்படும் காலகட்டங்களில் உங்களைப் போன்ற சில ஆண்கள் ஆதாயம் தேடி நுழைவார்கள். கணவரை விட ஆறுதல் சொல்பவர் நல்லவராகத் தெரிவார். அதனால் பெண்கள் கணவரைப் பிரிய முடிவெடுத்துவிடுவார்கள். ஆனால், எல்லா ஆண்களும் கோபக்காரர்கள், சண்டை போடுவார்கள், பிரச்னை செய்வார்கள் என்பது பெண்களுக்குப் புரிவதில்லை. நீங்கள் ஏதேனும் காரணமாக சண்டை போட்டால், உங்களுக்கு கணவரே பரவாயில்லை என்று அவர் நினைக்கலாம்…. இதையெல்லாம் யோசித்து ஒரு முடிவெடுத்துவிட்டு வாருங்கள். மீண்டும் பேசுவோம்’’ என்று அவரை அனுப்பி வைத்தேன்.
அதன் பிறகு அவர் நேரில் வரவில்லை, போன் செய்யவும் இல்லை. பெங்களூருக்கு மாறிப் போனதாக தகவல் மட்டும் வந்தது. தனியே போனாரா அல்லது லதாவுடன் போனாரா என்பது தெரியவில்லை.