• Home
  • மருத்துவர்கள்
  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு செயற்கை மார்பகம் வைத்துக்கொள்ளலாமா..?

அறுவை சிகிச்சைக்குப் பிறகு செயற்கை மார்பகம் வைத்துக்கொள்ளலாமா..?

Image

டாக்டர் ரோகிணி விளக்கம்

பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனை மருத்துவரிடம் காட்டுவதற்கு தயங்கவேண்டிய அவசியம் இல்லை என்று மக்களிடம் விழிப்புணர்வூட்டும் மார்பக புற்றுநோய் மருத்துவர் ரோகிணியிடம் புற்றுநோய் குறித்து சில கேள்விகள் கேட்டோம்.


பெண்களுக்கு மார்பக புற்றுநோயில் இருக்கும் நிலை குறித்து சொல்லுங்கள்? இதனால், உயிருக்கு ஆபத்து ஏற்படுமாமார்பகத்தை நீக்காமல் நவீன மருத்துவம் செய்ய முடியுமா?

பொதுவாக மார்பக புற்றுநோயில் நான்கு நிலை உள்ளது. மார்பக கட்டியானது, இரண்டு சென்டி மீட்டருக்கும் சிறிதாக இருந்தால் அது முதல் நிலை. இரண்டு முதல் ஐந்து சென்டி மீட்டருக்குள் இருந்தால், அது இரண்டாவது நிலை. மார்பில் ஐந்து சென்டி மீட்டரும் அக்குளிலும் கட்டி இருக்கிறது என்றால், அது மூன்றாவது நிலை. அதேநேரத்தில் இது, வேறு எங்காவது (கிட்னி, நுரையீரல்) ரத்தம் மூலமாகப் பரவினால் அது நான்காவது நிலை. மார்பக புற்றுநோயைப் பொறுத்தவரை முதல் மூன்று நிலைகளில் இருந்தால், அதை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்கிவிட முடியும். அதுவே நான்காவது நிலையாக இருந்தால், அதைக் குணப்படுத்துவது  இயலாத காரியம். அதனால், உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
அன்று பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருந்தால், முழுவதுமாக மார்பகத்தை நீக்க வேண்டியிருந்தது. அப்படி, முற்றிலும் அகற்றும்போது பெண்களுக்கு கஷ்டம் இருக்கும். அத்துடன் அருகில் இருக்கும் சிறிய நிணநீர் முடிச்சுகளையும் எடுத்துவிடுவோம். இதனால் அவர்களின் கைகளில் வீக்கம் வரலாம். அது ஆயுள் முழுவதும் தொடரும். தவிர, அந்தக் கையை தூக்க முடியாமல்கூடப் போகலாம். ஆனால், தற்போது அப்படி இல்லை. மார்பகத்தில், இரண்டு சென்டி மீட்டர் அளவில் கட்டி  இருந்தால் அதை மட்டும்  நீக்கிவிட முடியும். நவீன ரேடியோ தெரபி மூலம் சிகிச்சை கொடுத்து அழிக்க முடியும். இதை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கே செய்ய முடியும். அந்த கட்டி மார்பகத்தில் அல்லது அக்குளில் எங்கு பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அதை மட்டும் எடுக்கலாம்.  இதற்கு  மருத்துவமனையில் தங்கும் நேரமும் செலவும் குறையும். மேலும், அறுவை சிகிச்சைக்கு நேரமும், செலவும் குறைவுதான்.


மார்பக புற்றுநோய் அறுவைச்சிகிச்சை செய்தபிறகு செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்கிறார்களா? இது நலம் தருமா?

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. பொதுவாக கேன்சர் வந்து பெண்களுக்கு மார்பகத்தை முற்றிலும் அகற்றிவிட்டால், அந்த இடம் காலியாக இருக்கும். அதனால், அவர்கள் பெண்கள் தன்மையை இழப்பர். இது, அவர்களுக்கு சங்கோஜமாக இருக்கலாம். அதனால், இதே வடிவமைப்பில் சிலிகான்  வைத்து மார்பகம் செய்யப்படும். அதை வாங்கி பிராவுக்குள் வைத்து அணிந்துகொள்ளலாம். (வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மார்பகம் போன்றே தெரியும்.) இதனால், அவர்களுக்குப் பாதிப்பில்லை. அவர்களும் பழைய நிலையில் நடமாட முடியும். இது சென்னையிலே நிறைய இடங்களில் இருக்கிறது. அதற்கான செலவு 5 ஆயிரம் ரூபாய் ஆகும். அதுமட்டுமல்ல, இதை 10 – 15 வருடங்கள் பயன்படுத்த முடியும். இன்று, நிறைய பெண்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்.  இதில் மற்றொரு வகை, இன்பிளாண்ட். அதாவது, மார்பக சதைக்குள்ளேயே சிலிகான் போன்ற மார்பகத்தை வைத்து ஆபரேஷன் செய்வது ஆகும். இதன்மூலம் ஆபத்து வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், இதை நிறைய பெண்கள் செய்வதில்லை. அதைவிட இதற்கு காசு அதிகம். மேலும் இதற்கான தயாரிப்புகள் இந்தியாவில் இல்லை. வெளிநாட்டில் இருந்தே பெற முடியும்.

மாமோகிராம் என்றால் என்ன? இதன்மூலம் எந்த வயது பெண்களுக்கு டெஸ்ட் எடுக்கலாம்?

மாமோகிராம் என்பது ஒரு எக்ஸ்ரே கருவி. நம்முடைய நுரையீரலில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், எக்ஸ்ரே மூலம் டெஸ்ட் எடுப்பதைப்போன்று, மார்பகத்தில் இருக்கும் கட்டியைக் கண்டுபிடிக்க பயன்படுவதே மாமோகிராம். இதன்மூலம் டெஸ்ட் எடுப்பது என்றாலே,  நிறைய பெண்கள் தயக்கமடைகிறார்கள்; பயப்படுகிறார்கள். காரணம், வலி இருக்கும் என்பதால். உண்மையில், மாமோகிராம் மூலம் மார்பக புற்றுநோயைக் கண்டறிய வேண்டுமானால், மார்பகத்தை அழுத்தித்தான் அந்த எக்ஸ்ரேவை எடுக்க வேண்டும். அதனால் சிறிது வலி இருக்கும். குறிப்பாக, மார்பகத்தை கொஞ்சம் அழுத்தினால்தான் கட்டி இருப்பது துல்லியமாகத் தெரியும். தற்போது நம் சூர்யா மருத்துவமனையில்,  நியூ டைப் மாமோகிராம் கருவி வாங்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம்  5 அல்லது 10 நிமிடத்தில் டெஸ்ட் எடுத்துவிட முடியும். மேலும், அதனால் வலி ஏற்படுவதும் குறையும்.
40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்குத்தான்  மாமோகிராம் டெஸ்ட் எடுக்க வேண்டும். சிறுவயது பெண்களுக்குத் தேவையில்லை. காரணம், சிறுவயதில் மார்பக சதை கெட்டியாக இருக்கும். கொழுப்புத் தன்மை குறைவாக இருக்கும். வயது ஆக ஆகத்தான் மார்பக சதை குறைந்து கொழுப்பு அதிகமாக இருக்கும். அதனால் கட்டி இருந்தாலும் சுலபமாக தெரிந்துவிடும்.  இதனால் சிறுவயது பெண்களுக்கு மாமோகிராம் செய்தால் ஒருபயனும் இருக்காது. ஆகையால், 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு கர்ப்பிணிகளுக்கு டெஸ்ட் செய்யப்படும் அல்டரா சவுண்டு ஸ்கேனே போதுமானது. இந்தியாவில் மார்பக புற்றுநோயால் 50 சதவிகிதத்துக்கும் பெண்கள் இறந்துபோவதற்குக் காரணம், அவர்கள் சிகிச்சைக்காக மூன்றாவது மற்றும் இரண்டாவது நிலையில் வருவதுதான். ஆனால், இன்று மாமோகிராம் மூலம் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் கட்டியைக்கூடக் கண்டுபிடிக்க முடியும். ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதால், அந்தப் பெண்களின் ஆயுள் கூடுகிறது.

எல்லா மார்பக புற்றுநோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க முடியுமா? அறுவைச்சிகிச்சையின் மூலம் அகற்றியபிறகும் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உண்டா?

மார்பக புற்றுநோயில் பல்வேறு வகைகள் உண்டு. செக்கப்பின் போதுதான் அது தெரியவரும். ஆகையால், எல்லா மார்பக புற்றுநோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க முடியாது. பரிசோதனைகளை வைத்துத்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் சிலருக்கு, அறுவைச் சிகிச்சை செய்ய வாய்ப்பு உண்டு. சிலருக்கு, ஹீமோதெரபி மூலம் மருந்துகள் கொடுத்து கட்டியை  சிறிதாக்கலாம். இன்னும் சிலருக்கு கதிரியக்கம் மூலம் கட்டிகளை அகற்றிவிட முடியும். நம் கண்ணுக்குத் தெரியாத அணுக்களை நீக்குவதற்குதான் ஹீமோ தெரபி சிகிச்சை அளிக்கிறோம். இதன்மூலம் மருந்தை ஊசிவழியாக ஏற்றுகிறோம். அது, நம் ரத்தத்தில் எவ்வளவு சிறிய புற்றுநோய் அணுக்கள் இருந்தாலும்  அழித்துவிடும்.  

அடுத்து கதிரியக்கம். இதன் வழியில் புற்றுநோய் எங்கிருக்கிறதோ, அங்கே மட்டும் கதிர்களைப் பாய்ச்சுவது. ஆபரேஷன் செய்த இடத்தில் ஏதாவது அணுக்கள் விட்டுப் போயிருந்தால், அந்த அணுக்களை அழிக்க இந்த கதிரியக்கம் பாய்ச்சப்படுகிறது. ஆக, மார்பக புற்றுநோய் வேறுவேறு வகையில் இருந்தாலும் அதற்குத் தகுந்தமாதிரி நவீன சிகிச்சைமூலம் அழிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் டார்கெட் தெரபி, ஹார்மோன் தெரபி  என்கிற புதுவித சிகிச்சைகளும் தற்போது வந்துள்ளன. ஆனால், இதை எல்லா நோயாளிகளுக்கும் செய்ய முடியாது.
மார்பக புற்றுநோயின் தன்மையே அறுவைச்சிகிச்சை செய்தபிறகும் வருவதே. அது, வளரும்போது அதன் பக்கத்தில் உள்ள அவயங்களிலும் வளரும். அதனால் ஒரு சிறு அணு இருந்தாலும் அது மீண்டும் கேன்சராக வரக்கூடும். இப்போதைக்கு முழுவதுமாக ஆய்ந்தறிந்து அழிக்கக்கூடிய அளவுக்கு ஸ்கேன் வசதியோ, டெஸ்ட் வசதியோ எதுவும் இல்லை. ஸ்கேன் மூலம் டெஸ்ட் எடுத்துப் பார்த்தாலும், அது முழுவதுமாக எடுக்கப்பட்டிருக்கிறதா என்று துல்லியமாகச் சொல்ல முடியாது.  5 சென்டி மீட்டர் அளவு இருந்தால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஆனால், அரை சென்டி மீட்டராக இருந்தால் சொல்ல முடியாது.

அதனால் மீண்டும் கண்டிப்பாக கேன்சர் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக மூன்று மாதத்துக்கு ஒருமுறை செக்கப் செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு மரபு ரீதியாக கேன்சர் உருவாகக்கூடிய தன்மை இருக்கும். ஆனால், இது எல்லோருக்கும் வருவது இல்லை. மொத்தத்தில் திரும்ப வரும்  கேன்சர்களே  அதிகம். குறைவாக வரும் சில கேன்சர்களும் உண்டு.


Leave a Comment