காதலன் நினைவுடன் கல்யாணம் முடிக்கலாமா?

Image

ஞானகுரு கவுன்சிலிங்

செடிகளுடன் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க இரண்டு இளம் பெண்கள் வந்தனர். இருவர் கண்களிலும் எக்கச்சக்க குழப்பம். முதல் பெண்ணை பார்த்து சிரித்ததும், அவள் பேசத் தொடங்கினாள்.

‘’என் கல்லூரியில் படிக்கும் பாலுவுடன் எனக்கு காதல் இருந்தது. சூழ்நிலை காரணமாக அவனால் என்னை திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. நானும் அவன் சூழலை புரிந்துகொண்டு விலகிவிட்டேன். இப்போது எனக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. நல்லவராகத் தெரிகிறார். அவரிடம் திருமணத்திற்கு முன்பே என் காதலை சொல்ல வேண்டுமா..?” ஆர்வத்துடன் கேட்டாள்.

‘’இன்னமும் உன் இதயத்தில் பாலு இருக்கிறானா..?’’

’’ஆம்… அவனை எப்படி என்னால் இதயத்தில் இருந்து தூக்கியெறிய முடியும்? முதல் காதல் என்றுமே மறையாது என்பார்கள். சூழல் மாறியதால் என்னை கைவிட்டானே தவிர, அவன் என்னை ஏமாற்றவில்லையே’’ என்றாள் உறுதியுடன்.

‘’மனதில் ஒருவர் இருக்கும்போது, இன்னொருவரை திருமணம் செய்துகொள்வது சரியென்று நினைக்கிறாயா… ஏனென்றால் பெரும்பாலான சினிமாக்களில் பழைய காதல் நினைவுகளை கொண்டாடுகிறார்கள், அதை மக்களும் ரசித்து பாராட்டுகிறார்கள். உண்மையில் அது ஒரு கேவலமான மனநிலை. நீயும் அதே போன்று, பழைய காதலன் நினைவுடன் புதிய கணவரை கைப்பிடிக்கும் முடிவுக்கு வந்துவிட்டாயோ…’’

‘’திருமணம் செய்துகொண்டால் காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று அம்மா சொல்கிறாள்..’’

’’காலத்தைப் பற்றி உன் அம்மா சரியாகச் சொல்லி இருக்கிறார். ஆனால், உறவுகள் பற்றி இன்னமும் அவருக்குப் புரிதல் இலை. உண்மையில் நீ இன்னமும் திருமணத்துக்குத் தயாராகவில்லை பெண்ணே. மனதில் ஒருவன் இருக்கும்போது, இன்னொருவரை திருமணம் செய்ய நினைப்பதே தவறு. அப்படிப்பட்ட வாழ்க்கை இருவருக்கும் மிகவும் துன்பம் தரக்கூடியது. மனதில் ஒருவர், நிஜத்தில் ஒருவர் என்று வாழ்வதன் காரணமாகவே சண்டை, வன்முறை, கொலை, விவாகரத்து போன்றவை அதிகம் நடக்கின்றன. எந்த தவறும் செய்யாத உன் கணவன் கொல்லப்படலாம்.

எனவே, எப்போது பாலுவை மறக்க முடிகிறதோ, எப்போது உன்னால் கணவனுக்கும் பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு மட்டும் முழு அன்பையும் தரமுடியும் என்று நினைக்கிறாயோ, அப்போது திருமணத்துக்கு சம்மதம் சொல்…’’

‘’என்னால் பாலுவை மறக்கவே முடியாது என்றால் என் எதிர்காலம்…?’’

‘’உனக்கு பாலுவின் நினைப்பு மகிழ்வு தருகிறது என்றால், அந்த நினைப்புடனே வாழ்ந்து செத்துப் போ. வேறு வாழ்க்கை வேண்டும் என்றால் நீ கடந்த காலத்தை மறக்க வேண்டும். நீ மறக்க வேண்டியது பாலுவைத் தான், காதலை அல்ல. உன் காதல் உன்னுடன் எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அது தவறு அல்ல. ஆனால், பாலு உன்னுடன் இருக்க முடியாது. காதல் என்பது வேறு திருமணம் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளாதே… காதல் எவர் மீது வேண்டுமானாலும் வரும். ஆனால், திருமணம் என்பது எதிர்காலத்திற்கு உத்தரவாதம் தரும் ஒரு நபருடன் மட்டுமே நடக்கும்.

ஏதேனும் ஒரு நிறுவனத்தில் மட்டுமே ஒருவரால் முழு நேர ஊழியராக முழு உழைப்பையும் கொடுக்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் முழு நேர ஊழியராக இருந்தால், இரண்டு நிறுவனங்களையும் ஏமாற்றுவதாகத்தான் அர்த்தம். திருமணம் என்பதும் ஒரு நிறுவனம் போன்ற அமைப்புதான். எனவே  திருமண பந்தத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் நிறையவே கடமைகளும், பொறுப்புகளும் உண்டு.

காதலன் மனதில் இருக்கும்போது உன்னால் கணவனுக்கும் குடும்பத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாகச் செய்ய முடியாது. ஒரு கணவனின் நிலைமையில் நீ இருந்து பார். அப்போது தான், நீ எத்தகைய சுயநலவாதி என்பது தெரியவரும்.

எனவே பாலுவை மறந்த பிறகு திருமணம் செய்வதற்கு சம்மதம் சொல். உன் பழைய காதலை திருமணத்துக்கு முன்னரே கணவரிடம் மட்டுமின்றி, அவருடைய குடும்பத்தினருக்கும் சொல்லிவிடு, அப்போதுதான் திருமணத்துக்குப் பிறகு, பழைய காதல் உனக்கு துன்பம் தராது…” என்றவர் அடுத்த பெண்ணைப் பார்த்தார்.

‘’குருவே, எனக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு சண்டையால் ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரிந்து, இப்போது என் பெற்றோருடன் வாழ்கிறேன். விவாகரத்துக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இப்போது நினைத்துப் பார்க்கும்போது, அந்த சண்டை அத்தனை பெரியதாகத் தோன்றவில்லை. ஆனால், என் குடும்பத்தாரும் அவருடைய குடும்பத்தாரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். எனவே, நாங்கள் பிரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இப்போது நான் என்ன செய்வது..?’’ கண்களில் நீருடன் நின்றாள்.

‘’உன்னுடைய ஈகோவை விட்டு கணவரிடம் பேசுவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை, அப்படித்தானே..?’’

ஆம் என்று தலையசைத்தாள்.

’’நீ சண்டைகளை மறந்து அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறாய் என்பது உன் கணவருக்கு இதுவரை தெரியாது. இலவு காத்த கிளி போல நீ காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, நீ காத்திருப்பதை அவருக்கு முதலில் தெரிவித்துவிடு. உனக்கு ஈகோ இடம் கொடுக்கவில்லை என்றால், உன் தோழிகள், பொதுவான நண்பர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்து.

அதற்கு முன்னர், நீ கணவருடன் சேர்ந்து வாழ்வது அல்லது முறையாக விவாகரத்து செய்து வேறு வாழ்க்கையை அமைத்து கொள்வது ஆகிய இரண்டில் ஒன்றை தெளிவாக தேர்வு செய். உன் பெற்றோர் இப்போது உனக்கு ஆதரவாக இருந்தாலும், எல்லா காலத்திலும் உனக்கு துணையாக இருக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்துகொள். எனவே, முடிவு எடுக்க வேண்டியது நீ மட்டும்தான். பிரிவது என்றாலும் இணைவது என்றாலும் அது உன் முடிவாக இருக்கட்டும்” என்றார் ஞானகுரு.

இருவரும் தெளிவுடன் விடை பெற்றனர்.

Leave a Comment