பொய் சொல்லக்கூடாது சித்து
கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி கெளர் சமீபத்தில் புற்று நோயில் இருந்து காப்பாற்றப்பட்டார். இது குறித்து பேசிய சித்து, ‘’என் மனைவிக்கு புற்று நோய் நான்காவது நிலை என்று கண்டறியப்பட்டது. உயிர் பிழைப்பதற்கு 5 சதவீத வாய்ப்பு என்றே கூறப்பட்டது. ஆனால் என் மனைவி மன உறுதியுடன் தீவிரமாக விரதம் இருந்து நோயிலிருந்து விடுபட்டார். என் மனைவி காலையில் எலுமிச்சம் பழச் சாறு, மஞ்சள் போன்றவற்றை அப்படியே எடுத்துக்கொண்டார். வேப்பிலை, மாதுளை, நெல்லிக்காய், பீட்ரூட், வால்நட் போன்றவையே அவளுடைய உணவுப் பழக்கமாக இருந்தது. இப்போது புற்று நோயிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார்’’ என்று பொதுவெளியில் பேசியிருந்தார். இனிப்பை முற்றிலும் தவிர்த்து புற்றுநோய்க் கிருமிகளை அழித்துவிட்டார்..’’ என்று கூறியிருந்தார்.
சித்துவின் பேச்சு மருத்துவ உலகத்தில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்திவிட்டது. புற்று நோய்க்கு உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் மாற்று சிகிச்சை மூலம் குணமடைய முடியும் என்று பேசியதற்கு அலோபதி மருத்துவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏனென்றால், அவர் தொடர்ந்து அலோபதி சிகிச்சை எடுத்துவந்தவர். அதனாலே புற்று நோய் சிகிச்சையை திசை திருப்புவதாக குற்றம் சாட்டி சட்டீஸ்கர் சிவில் சொசைட்டி மூலம் 850 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நோட்டீஸை பார்த்ததும் சித்து, ‘’எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கீமோதெரபி, ஹார்மோனல் தெரபி போன்றவை வழங்கப்பட்டது. அதேநேரம், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரிலும் டயட் எடுத்துக்கொண்டார். டாக்டர் என்பவர்கள் கடவுளைப் போன்றவர்கள்’’ என்று அப்படியே பல்டி அடித்துவிட்டார்.

நவ்ஜோத் சிங் போன்ற பிரபலங்களே மருத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் மாற்று மருத்துவத்தைப் பெருமைப்படுத்துவதாக நினைத்து முழுமையான தகவல்கள் கொடுக்காமல் மறைப்பதாக அலோபதி மருத்துவர்கள் ஆவேசமானார்கள். அதனால் சித்துவின் மனைவியின் புற்று நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 40 நாட்கள் கொடுக்கப்பட்ட அலோபதி சிகிச்சை குறித்து அறிக்கை வெளியிட்டார்கள். டெல்லி இந்திரப்பிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் இது குறித்து, ’’புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்களிடம் மிகவும் அதிகமாகக் காணப்படுவது மார்பகப் புற்றுநோயாகும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புள்ளி விவரப்படி, ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதிலும் சிகிச்சை வழங்குவதிலும் இங்கே குறைபாடுகள் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் 5 வருட உயிர்வாழ்தல் 66.4 சதவீதமாகவே இருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இது 90.2 சதவீதமாகும்.
இந்த நோயால்தான் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி பாதிக்கப்பட்டார். அவருக்கு முறையான அலோபதி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகள் முழுமையடைந்து வீடு திரும்பியிருக்கிறார். ஆனால் இப்போது சித்து உணவுக் கட்டுப்பாடு, விரதம் மூலம் புற்று நோயிலிருந்து மனைவி குணமடைந்தாகக் கூறுகிறார்.
அப்படி புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமென்றால், அறிவியல் சான்றுகள் இருக்கிறது என்றால் நாங்கள் இத்தனை பெண் நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
கீமோதெரப்பி, இம்மியூனோதெரபி போன்ற சிகிச்சை முறைகளால், 5 வருட உயிர்பிழைக்கும் விகிதம் 20 சதவீதத்திலிருந்து நோயின் வகை மற்றும் தீவிரத்திற்குத் தகுந்தாற்போல் 70 முதல் 90 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. இரத்தப் புற்று நோயிலிருந்து குழந்தைகள் உயிர் பிழைக்கும் விகிதம் நோயின் தீவிரத்திற்குத் தகுந்தாற்போல் 10 சதவீதத்திலிருந்து 50 முதல் 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவைகளெல்லாம் சாத்தியமாகக் காரணம் கடந்த 100 ஆண்டுகளாக தொடர்ந்து செய்யப்படும் ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், மருத்துவ சோதனைகள், தவறுகளைத் திருத்துதல் மேலும் சிகிச்சையின் பலன்களே ஆகும்.
1882ல் வில்லியம் ஹால்ஸ்டெட் என்பவர் முதல்முறையாக மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சை செய்தார். முதல் கீமோதெரப்பி 1943ல் செய்யப்பட்டது, கதிர்வீச்சு சிகிச்சை 1900ல் நடந்தது. நூதனமான கார்ட்-டி (CART-T) செல் சிகிச்சை இரத்தப் புற்றுநோயிலிருந்து நிவாரணம் கிடைக்கக் காரணமாயிற்று. 2016லிருந்து 2020 வரை, புற்றுநோய் ஆராய்ச்சிக்காக 24.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்) செலவு செய்யப்பட்டுள்ளது. பலன்கள் கிடைக்காவிட்டாலும், மக்களின் வாழ்வில் (சிகிச்சைக்குப் பிறகு) தகுந்த மாறுதல் கிடைக்கவில்லை என்றாலும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடைபெற உறுதியாகச் சாத்தியமில்லை.
மேலும், நாம் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். 5 முதல் 10 வருடங்கள் வரை உயிர் பிழைத்தவர்களை பூரண குணமடைந்தவர்களாக அறிவிக்க இயலாது. அடுத்து, மிகவும் கவனத்துடன் செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள். தொடர்பற்ற (random) அறிவியல் சார்ந்த சோதனைகளின் போது ஒரே மாதிரியான அளவில் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை இரண்டு குழுக்கலாகப் பிரித்து பரிசோதனை செய்து கண்காணிக்கின்றனர்.
ஒரு குழுவிற்கு தற்போது நடைமுறையில் உள்ள சிகிச்சை முறையும், அடுத்த குழுவிற்கு விலங்குகளின் சோதனையில் நிவாரணம் தந்த புதிய சிகிச்சை முறையும் கொடுக்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணிக்கப்படுகின்றது. வெற்றியடைந்தால் மட்டுமே, இந்தச் சோதனை அதிகப்படியான மனித நோயாளிகளுக்கு உலகின் பல பகுதிகளில் வாழும் வேறுபட்ட மரபணுக்கள் உடையவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்தச் சோதனை வெற்றியடைந்தால் மேலும் கண்காணிக்கப்பட்டு, ஒவ்வொரு சோதனைக் கட்டத்திலும் பரிசோதிக்கப்பட்டு பின்பு மருத்துவ சிகிச்சை நெறிமுறையாக தகுந்த ஆதாரங்களுடன் பரிந்துரைக்கப்படுகிறது.
புற்றுநோய் செல்கள் செல் வளர்ப்பு சோதனைக் குழாய் மூலம் பரிசோதிக்கப்படும்பொழுது பல தரப்பட்ட காரணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு மாற்றாக உணவுமுறை, பத்தியம் போன்றவற்றைக் கொண்டுவர முடியாது. ஏனென்றால் இவை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவை அல்ல.
உணவுமுறை வளர்சிதை மாற்றங்களைத் தூண்டுகிறது. அதனால் இது புற்றுநோய் செல்களில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இது முழுமையாகப் புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது. அறிவியல் ரீதியான மருத்துவ சிகிச்சை முறை மூலமே புற்றுநோய் செல்களைக் குறிவைத்து அழிக்க முடியும். ஆகையினால், முறையான உணவுப் பழக்கம் சுகாதாரமான வாழ்விற்கும், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உதவும் என்று கருதலாம்,
புற்று நோயால் பாதிக்கப்பட்டு (முறையான சிகிச்சை பெறுபவர்கள்) சீக்கிரம் குணமடைய உதவலாம். கீமோ தெரப்பி எடுப்பவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதால் விரதம் இருப்பதும் கலோரிகளைக் குறைப்பதும் நல்லதல்ல, குறிப்பாக எப்போதும் மெலிந்த உடல்பாகு கொண்டவர்கள், வயிறு மற்றும் உணவுக் குழாய் சம்பந்தப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதத்தைத் தவிர்க்க வேண்டும். இவர்களை விரதம் இருக்க வைத்தால் அவர்கள் தளர்ந்து போகவும் அவர்களின் தசை சிதைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.
புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறிப்பிட்ட நபருக்கு சூழலுக்கு ஏற்றவாறு வரையறுக்கப்படுகின்றன. 40 வயது நோயாளியின் சிகிச்சை முறை, மற்ற பக்க விளைவுகளின் அபாயத்தில் உள்ள 70 வயது நோயாளியின் சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். ஒரு நபர் குணமடைந்த சிகிச்சை முறையை எல்லோருக்கும் பொதுவாக உபயோகப்படுத்த முடியாது.
புற்றுநோய் மருத்துவர்கள் மாற்று சிகிச்சை முறைகளுக்கு எதிரிகள் இல்லை ஆனால் அவற்றின் சோதனை முறைகள் நெறிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அதன் முடிவுகள் பல வருடங்களாகப் பதியப்பட வேண்டும், வெறும் 5 மாதங்கள் போதாது. ஆய்வாளர்களும், மருத்துவர்களும் சிகிச்சை முறைகளைப் பதிவு செய்கின்றனர். முடிவுகள் மருத்துவ இதழ்களில் பிரசுரிக்கப்படுகின்றன, அவைகள் பொய்யாகச் சித்தரிக்கப்படுவதைத் தடுக்க மற்ற மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப் படுகிறது.
சென்ற வருடம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ நகரில் நடைபெற்ற அமெரிக்க மார்பகப் புற்றுநோய் மாநாட்டில் நான் பங்கேற்றேன். அதில், பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, உடற்பயிற்சி 30 சதவீதம் வரை புற்றுநோயைப் பழைய நிலைக்குப் போகவிடாமல் தடுப்பதாகக் கண்டறியப்பட்டு அதன் முடிவுகள் மாநாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதை (புற்றுநோயிலிருந்து) உயிர் மீண்டவர்களின் தாங்கும் திறனை எப்படி வகைப்படுத்துவது என்று அறிய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் இப்போது உணவுமுறை சம்பத்தப்பட்ட ஆய்வுகள் அளவிடப்படவில்லை’’ என்கிறார்.
ஆகவே, பிரபலங்களாக இருப்பவர்கள் மாற்று மருத்துவம் பற்றி பேசுகையில், அதேநேரம் எடுத்துகொண்ட அலோபதி மருத்துவ சிகிச்சை குறித்தும் வெளிப்படையாகப் பேச வேண்டியது அவசியம். அப்போது தான் நோயாளிகள் உண்மையை அறிய முடியும்.