கமலா ஹாரீஸ் சிங்கப்பெண் இல்லையாமே
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸ்க்கு ஆதரவு திரட்டும் வகையில் தனது சிங்கப்பெண்ணே பாடல் மூலம் ஒரு பரப்புரை செய்திருந்தார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். முதன் முதலாக ஒரு பெண் அதிபராக வேண்டும் என்பதற்காக அவர் ஆதரவுக் குரல் எழுப்பியிருந்தார். அவர் சிங்கப்பெண் அல்ல அசிங்கப்பெண் என்று கண்டனக் குரல் எழுந்துள்ளது.
இது குறித்து மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, ‘’பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்கும் வாய்ப்பு கொண்டவர் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரீஸ். இசுரேலின் கொடும் போருக்கான ஆதரவை அமெரிக்கா நிறுத்தினால், அடுத்தநாளே இசுரேலால் போரை நடத்த இயலாது. போரை நிறுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஐ.நா தீர்மானங்களை தனது அதிகாரத்தின் மூலமாக தடுத்து நிறுத்திய அமெரிக்காவின் முடிவுக்கு பின்னால் இயங்கியவர் கமலாஹாரீஸ்.
2 லட்சம் பாலஸ்தீனர்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என உலகின் புகழ்பெற்ற ‘லேன்சட்’ மருத்துவ ஆய்வு ஊடகம் அறிவித்திருக்கிறது. அக்7ம் தேதி கொல்லப்பட்ட இசுரேலியர்கள் பெரும்பாலும் இசுரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்பதை மேற்குலக ஊடகங்களே அறிவித்து விட்டன. இருந்த போதிலும் பாலஸ்தீன போராளிகளை குற்றம் சொல்லி இனப்படுகொலையை தொடரச் செய்கிறார் கமலா ஹாரீஸ். 20,000 பாலஸ்தீன குழந்தைகளை கொன்ற ஆயுதங்களில் பெரும்பாலானவை கமலாஹாரிஸ் ஆட்சி இசுரேலுக்கு அனுப்பியவை. உணவு, குடிநீர் இன்றி செயற்கை பஞ்சத்தை காசாவில் இசுரேல் உருவாக்கியதற்கு துணை நின்றவர் கமலா.
பாலஸ்தீனத்தின் அனைத்து மருத்துவமனைகளையும் அழித்த இசுரேல் ராணுவத்தை நியாயப்படுத்தியது கமலாவின் அரசு. குடிநீர், உணவு வாங்குவதற்காக குவிந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திய இசுரேலை ஆதரிப்பவர் கமலாஹாரிஸ். இசுரேல் மீதான இனப்படுகொலை வழக்கை பல நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் நடத்துகின்றன. இசுரேலின் இனப்படுகொலை தீர்ப்பு வரும்பொழுது அமெரிக்காவின் ஜோ பைடன், கமலா ஹாரீஸ் ஆகியோரும் இனப்படுகொலைக்கு உதவியதாக குற்றவாளியாவார்கள். இந்த வரலாறு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறவாது நிலைத்து நிற்கும்.
அமெரிக்காவின் இதே ‘டெமக்கரட்ஸ்’ ஆட்சியே 2009ல் ஈழப்படுகொலைக்கும் துணை போனது. இசுரேலின் இனப்படுகொலை போர் 4 நாடுகளில் நடக்கிறது. இவை அனைத்தின் பின்புலத்தில் ஜோபைடன்-கமலாஹாரீஸ் அரசு உள்ளது. இவ்வகையில் கமலா ஹாரீஸை ஆதரித்ததன் மூலமாக வரலாற்று பிழையை, நாம் நேசிக்கும் ஏ.ஆர்.ரகுமான் செய்திருப்பது மிகப்பெரும் வருத்தத்தையும் துயரத்தையும் கொடுக்கிறது. தமிழர்கள் வரலாறு நெடுக பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நின்றவர்கள். இனிமேலும் நிற்பார்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.