சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள்
கேள்வி ; நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, வாதாட இலவச பிரிவு ஏதும் இருக்கிறதா..?
- ஏ.பால்பாண்டி, சூலக்கரை.
நிலா :
இலவச சட்ட உதவி என்பது மக்களுக்கான அடிப்படை உரிமை. எனவே, சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்காக, 1987 சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டம் கீழ் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) அமைக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு மாநில சட்டப் சேவைகள் ஆணையம் (TNSLA) மற்றும் மாவட்ட சட்டப் சேவைகள் ஆணையம் (DLSA) ஆகியவை தாலுகா சட்ட சேவைகள் குழுவுடன் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சேவை குழுவிடம் தேவைப்படும் சட்ட உதவி குறித்து விண்ணப்பம் அளிக்கவேண்டும். உங்களுடைய தகுதிகள் மற்றும் வழக்கு குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உதவி வழங்கப்படும். நீதி மன்றக் கட்டணம், சட்ட சிக்கல்களுக்கான இலவசப் பிரதிநிதித்துவம், கட்டணமின்றி சட்ட நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகள் மற்றும் ஆவண நகல்களைப் பெறுதல், உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய விருப்பம் தெரிவித்தல் ஆகிய அனைத்து உதவிகளும் பெற முடியும்.

கேள்வி ; பொதுநல வழக்கு எந்த மாதிரியான வழக்குகளுக்குப் போடலாம்..? இதற்கென வழிமுறைகள் இருக்கின்றனவா..?
- டி.ராஜகணேஷ், முத்தால்நகர்.
நிலா :
பொதுவாக எந்த வழக்கையும் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தாக்கல் செய்ய முடியும். ஆனால், எந்த விதத்திலும் பாதிக்கபடாவிட்டாலும் ஒருவர் பொதுநல வழக்கு பதியலாம். தனி நபர்கள் அல்லது கன்ஸ்யூமர் அமைப்புகள். சில தொண்டு நிறுவனங்கள் இத்தகைய வழக்குகள் பதிவு செய்கின்றனர். பொது மக்களை பாதிக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் இத்தகைய வழக்குகள் தாக்கல் செய்யலாம். ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் ஆபத்து, குழந்தை தொழிலாளர்கள், ஊழல் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக பொதுநல வழக்கு தொடர முடியும்
அதேநேரம், புகழுக்காக அல்லது தேவையற்ற வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. சமீபத்தில் உயர் நீதிமன்றம், ‘’பொது நல மனுக்கள் தாக்கல் செய்வோர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி, அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அவகாசம் வழங்கி, அதன் பிறகே நீதிமன்றத்துக்கு வர வேண்டும்.’’ என்று உத்தரவு பிறப்பித்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கேள்வி ; அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சித்தலைவர் மீது தனி நபர் வழக்கு தொடுக்கலாமா..?
- எம்.ஸ்ரீனிவாசன், சிவகாசி.
நிலா ;
இதற்காக ரிட் மனு தாக்கல் செய்யலாம். ஊராட்சித்தலைவர் அடிப்படை வசதி செய்துதரவில்லை என்று கலெக்டர் உள்ளிட்ட முதல் அமைச்சர் வரையிலும் மனு அளித்து விட்டு வழக்கு தொடர்வது சரியாக இருக்கும்.
- எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling
உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை. தொடர்புக்கு : 7299753999