• Home
  • சட்டம்
  • வில்லங்கச் சான்று பார்த்து சொத்து வாங்குங்க

வில்லங்கச் சான்று பார்த்து சொத்து வாங்குங்க

Image

வழி காட்டுகிறார் வழக்கறிஞர்




ஒரு சொத்து பிரச்னை இல்லாதது என்பதை, ஆதாரபூர்வமாக எடுத்துச்சொல்வதுதான் வில்லங்கச்சான்று. ஒரு காலத்தில் வில்லங்கச்சான்று வாங்குவதற்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டும். ஆனால், உலகம், இன்று கைக்குள் அடங்கிவிட்டது என்றே சொல்லலாம். அதனால், அனைத்தும் ஆன்லைன் மூலமே மாறியிருக்கிறது; மாற்றப்பட்டு வருகிறது. இது, ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும். அங்கு நடைபெறும் மோசடிகளால், அந்தத் துறை அலுவலகங்களும் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், அங்கும் எல்லா வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் எளிதாகச் செய்யமுடிகிறது. அந்த வரிசையில் இ.சி. எனப்படும் வில்லங்கச் சான்றிதழைக்கூட எளிதாக ஆன்லைனில் பெறலாம் என்கிறார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.நிலா.


இது குறித்து பேசும் நிலா, “சொத்துக்களை வாங்குபவர்கள், வாங்குவதற்கு முன்பு சொத்தின் கிரையப்பத்திரம், பட்டா போன்றவற்றுக்கு அடுத்தபடியாகப் பார்ப்பது வில்லங்கச் சான்றிதழைத்தான். வாங்க இருக்கும் சொத்துக்கு உரிமையாளர் யார் என்பதை நிரூபிக்கும் ஒரு சான்றிதழே வில்லங்கச் சான்றிதழ் ஆகும். இதை, வாங்க இருக்கும் சொத்தின் வரலாறு என்றுகூடச் சொல்லலாம்.


இந்த வில்லங்கச் சான்றிதழ் மூலம், யார்யார் கைகளில் இருந்து இந்தச் சொத்து எப்படி எல்லாம் மாறி வந்திருக்கிறது என்ற விவரத்தை அறிய முடியும். அந்தச் சொத்தின் உரிமை, யாருக்கெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடியும். வாங்க இருக்கும் சொத்து, வங்கிகளிலோ, நிதிநிறுவனங்களிலோ அடமானம் வைத்து அடமானப் பத்திரம் பதிவு செய்திருக்கிறார்களா என்ற விவரம் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.

 பிரிக்கப்படாத சொத்தாகவோ அல்லது ஒரு சொத்தை வாங்க விரும்புபவர்கள், அந்தச் சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா, சொத்தை விற்பவர் பெயரில்தான் அந்தச் சொத்து உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இதனால், இந்த வில்லங்கச் சான்றிதழ் ஒரு முன்னெச்சரிக்கை ஆவணமாக வாங்குபவருக்குப் பயன்படுகிறது. எனவே, சொத்து வாங்குவதில் இந்த வில்லங்கச் சான்றிதழ் முக்கியத்துவம் பெறுகிறது.
இப்படிப்பட்ட இந்த வில்லங்கச் சான்றிதழை, தற்போது மிக எளிதாக ஆன்லைனில் பெறலாம். இதற்காக தமிழ்நாடு பத்திரப்பதைவு இணையதள முகவரிக்குச் சென்று அதில், நாம் வாங்கவிருக்கும் சொத்து எந்தப் பத்திரப்பதிவு மண்டலத்தின் எல்லைக்குட்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு, அந்தச் சொத்து எந்த பத்திரப்பதிவு மாவட்டத்தில் வருகிறது என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ள முடியும். மேலும், வாங்க இருக்கும் சொத்துக்கு எத்தனை வருடங்களுக்கு வில்லங்கம் பார்க்க வேண்டும் என்பதையும் தேதியுடன் குறிப்பிட்டால், அதையும் தெரிந்துகொள்ள முடியும்.
இதற்கு, வாங்க இருக்கும் சொத்துக்குரிய சர்வே எண் மற்றும் அந்த சர்வே எண்ணுக்குரிய சப் டிவிஷன் எண்ணை மறக்காமல் குறிப்பிட வேண்டும். இதற்காக, ஆன்லைனில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அடுத்த சில விநாடிகளில் வில்லங்கச் சான்றிதழ் குறித்த அனைத்து விவரங்களும் கிடைத்துவிடும். அதை, பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். மேலும் இதுகுறித்த விவரங்கள் அறிய, வாங்க இருக்கும் சொத்து, எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லைக்குட்பட்டதோ அந்த சார் பதிவாளர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.
முக்கியமாக, வில்லங்கச் சான்றிதழ் குறித்து ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு முன்பு வரைதான் இணையத்தில் விவரம் கோரமுடியும். அதற்கு முந்தைய ஆண்டில் சொத்தின் தன்மையைப் பார்க்க அந்தந்த சார் பதிவாளர் அலுவலகத்தை நாடி பெற்றுக்கொள்ள வேண்டும். இதை, நிச்சயம் நாம் கடைப்பிடித்தால் எந்தப் பிரச்சினையுமின்றி வில்லங்கச் சான்றிதழை எளிதாகப் பெறலாம்” என்றார்.

அப்புறமென்ன, வில்லங்கமின்றி சொத்துக்களை வாங்குங்கள்.

  •  எம்.நிலா, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், தொடர்புக்கு : 7299753999

Leave a Comment