சாரநாத் வரலாற்றுப் படிமங்கள்..!
உலகமெங்கும் பரவி இருக்கும் பௌத்தர்கள், தங்கள் வாழ்நாளில் தரிசிக்க நினைக்கும் நான்கு இடங்களில் புத்த கயா, சாரநாத், குசிநகர் ஆகிய மூன்றும் இந்தியாவில் இருக்கின்றன. புத்தர் பிறந்த லும்பினி நேபாளத்தில் உள்ளது.
காசிக்கு வருபவர்களில் சொற்பமானவர்களே சாரநாத்திற்கு வருகிறார்கள். இதுதான் புத்தர் தன்னுடைய உபதேசத்தை முதன்முதலில் தொடங்கிய இடம். காசி நகரில் இருந்து 20 கிலோமீட்டரில் இருக்கும் அடர் காடுகளால் நிறைந்த இந்த நகரம் தான், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவிற்கும் புத்த மதத்திற்கும் இருக்கும் தொடர்புகளை உலகுக்குச் சொல்ல உதவிய இடம் இந்த சாரநாத்.
பரந்த பசும் புல்வெளிகளின் நடுவே, அகழ்வாய்வு அடையாளங்களாக இடிபாடுகள், சிறிய ஸ்தூபிகளின் அடிபகுதிகள், பெரிய பிராகாரங்களின் அடையாளங்கள் என நிறைந்திருக்கும் பகுதியின் நீண்ட பாதையைக் கடந்து வந்தபின் நாம் பார்ப்பது சாரநாத் ஸ்தூபி. தற்போது, இந்த ஸ்தூபி தூண்வடிவில் இல்லை. வட்டவடிவில் ஒரு உடைந்த செங்கல் கட்டடத்தின் வட்ட அடிப்பகுதியைப் போல 150 அடி உயர்ந்திருக்கிறது. கற்களாலான அடிப்பகுதியில் புத்தர் உருவங்களும் இருக்கின்றன.

கி.மு.600 களிலேயே, சாரநாத் சமணர்களுக்கு ஞானம் அருளுமிடமாக இருந்துள்ளது. சமண தீர்த்தங்கர்களில் மூவர் வாழ்ந்து உயிர் துறந்த இடம் இது. இதற்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் சித்தார்த்தன் இந்த இடத்திற்கு காசியிலிருந்து கடுந்தவம் செய்து ஞானம் அடையும் வழியை தேடி வந்திருக்கிறார். பின்னர், சமணர்களுடன் சேர்ந்து உடலை வருத்திக் கடுந்தவம் செய்வதினால், உடல் மட்டுமே நலிந்து போகிறது, ஞானம் எதுவும் அடைய முடியாது என்பதை உணர்ந்து தனியாக தவம் செய்ய கயாவுக்கு பயணம் செய்தார். அங்கே போதி மரத்தின் அடியில் ஞானம் பெற்று புத்தரானார்.
தான் பெற்ற ஞானத்தை மக்களுக்கு எடுத்துரைக்க சாரநாத் பகுதிக்கு திரும்பினார். பின்னாளில் புத்தர் தம் முதல் ஐந்து சீடர்களை பெற்ற இடமும் இது தான். புத்தர் வாழ்ந்த காலத்தில் இது அவர்கள் மார்க்கத்தின் தலைமை பீடமாகவும், சீடர்களுக்கு போதிக்கும் கல்விக்கூடமாகவும் இருந்திருக்கிறது.
இப்பெயர் பெற்ற இடத்தை கௌரவிக்கவே மன்னர் அசோகர் எழுப்பிய சின்னம் தான் இந்த ஸ்தூபி.
காலவெள்ளத்தில் இந்து மதித்தின் வளர்ச்சியாலும், சுல்தான்களின் படையெடுப்பாலும் கரைந்து காணாமல் போன புத்தமதத்தினால் இந்த இடமும் மறக்கப்பட்டு சாரநாத் மடிந்துகொண்டு இருந்தது.
கிட்டத்தட்ட 1794 ம் ஆண்டுவாக்கில் காசி மன்னர் ஆட்சி. மற்ற பல சமஸ்தானங்களை போல ஆங்கிலேயரின் ஆதிக்கமும் நுழைந்து கொண்டு இருந்த காலட்டம். காசி நகரில் ஏதேனும் கட்டடம் கட்ட வேண்டுமானால் இந்த இடிபாடுகளுக்கிடையே இருக்கும், தரமான செங்கற்களை எடுத்து சென்று இருக்கிறார்கள்.
அப்படி தான், ஒரு நாள் காசி அரசவை அமைச்சர் தம் வீட்டு கட்டடத்துக்காக இந்த ஸ்தூபியின் மேல் பகுதியை உடைத்து தரமான நன்கு சுடப்பட்ட முழு செங்கற்களை எடுத்து வரச் சென்னார். அதை பெயர்த்து எடுத்துக்கொண்டு இருந்தவர்கள் ஒரு பெட்டியையும், அதனுள் ஒரு மரகத புத்தர் சிலை மற்றும் சில ஆபரணங்களையும் கண்டனர்.
அதிர்ந்து போன அமைச்சரவை இதை ஆங்கிலேயர்களிடம் கூற, உடனே யாரும் அந்த இடத்தை இடிக்க கூடாது என்ற ஆணை பிறப்பிக்கப்படுகிறது. ஆராய்ச்சி தொடங்குகிறது. புத்தரின் சரித்திரத்தை ஆங்கில அதிகாரி அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற ஆய்வாளர், இங்கிலாந்திலிருந்து நிபுணர்களை வரவழைத்து அகழ்வாராய்ச்சியை நடத்தி மீட்டெடுத்தார்.
இந்த சரித்திர சான்றுகள் கிடைத்த இடத்திலேயே ஒரு அருங்காட்சியகம் நிறுவியிருக்கிறார்கள். இப்படி சான்றுகள் இருக்குமிடத்திலேயே காட்சியகம் இருப்பது சில இடங்களில் மட்டுமே.
அதனால்தான் புத்த மதத்தினர் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது வர விரும்பும் இடமாக சாரநாத் திகழ்கிறது. ஜப்பானியர், சீனர், இலங்கை, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்திருக்கும் புத்த பிக்குகள் ஸ்தூபின் வளாகத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்தபடி இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அதில் ஒருவராக புத்தர் கூட அமர்ந்து இருக்கலாம், நம் கண்களில் தான் அவர் புலப்படவில்லையோ, என்னமோ..?
ஸ்தூபி வளாகத்தை சுற்றி பல்வேறு புத்த பிரிவுகளில் உள்ள கோவில்கள் அவரவர் வழிபாட்டு முறைகளில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது. புத்தர் இறைமகனோ இறை தூதரோ அல்லர். அருளப்பட்ட இறைச் செய்திகள் எதையும் நமக்குச் சொன்னவரும் அல்லர். அவர் ததாகதர், இவ்வழியே வந்தவர், இப்படியே சென்றவர். அந்த பாதை நம் முன் விரிந்து கிடக்கிறது. அவரவர்கள் முயற்சியில் அவரவர்கள் இப்பாதையைக் கடக்கலாம். அவரவர் விடுதலையை, முழுமையாக அவரவரே உருவாக்க முடியும் என கூறிய புத்தர், உருவ வழிபாட்டை ஏற்கவில்லை, ஆனால் அவருக்கே சிலை அமைத்து உருவ வழிபாடு நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க ஞானத்தை போதித்த சாரநாத்திற்கு ஒருமுறை சென்று வருங்கள் ஞானத்தின் விருட்சம் நம்முள் பரவட்டும்.
- புருசோத் அப்பு
பயண புகைப்படகலைஞர்.
purushothjune15@gmail.com