மூளைக்கு வேலை தரும் ஆட்டுக்குட்டிகள்..!

Image

பாரம்பரிய விளையாட்டு


மக்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், நம் முன்னோர்கள் விளையாண்ட தாயம், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் போன்றவற்றை குடும்பத்தினருடன் அமர்ந்து விளையாடி வருகின்றனர்.  இந்த வரிசையில் ஆடு புலி ஆட்டம் குறித்து அறிந்துகொள்வோம்.


ஆடு புலி ஆட்டம் குறித்து சங்கப்பாடல்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது, அந்தப் பாடலில் வங்கா வரிப் பாறை என அழைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமின்றி, தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் விளையாடப்படும் ஆடு புலி ஆட்டம், தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்று. இது வெட்டும்புலி என்றும், இன்னும் வேறுபல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. வங்காளத்தில் பாக பண்டியாகவும், நேபாளியில் பாக்சாலாகவும், பஞ்சாப்பில் ஷிர் பகராகவும், மலேசியாவில் மெயின் தபல் எம்பத்தாகவும் வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.


அறிவுப்பூர்வமான  இந்த ஆடு புலி ஆட்டத்தை, தாயம், பல்லாங்குழி போன்று ஆட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்புக்கேற்ப ஆட முடியாது. ஆடும் நபர் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி ஆட வேண்டும். ஆடு புலி ஆட்டத்தை ஆடுவதற்கு நாம் இருக்கும் இடமே போதுமானது. மண் தரையாய் இருந்தால் கோடு கிழிக்க ஒரு மரக்குச்சி தேவைப்படும். மணலாய் இருந்தால் கைவிரல்கள் மட்டும் போதும். மற்ற கடினமான தளங்களாய் இருந்தால், வரைய உதவும் சுண்ணாம்பு, சாக்பீஸ், கரிக்கட்டை, செங்கல் பொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டங்களை வரைந்துகொள்ளலாம் ஆடுவதற்கு பதினெட்டு காய்கள் வேண்டும். அவற்றில் மூன்று காய்கள் ஒரு வடிவத்திலும், பதினைந்து காய்கள் வேறு வடிவத்திலும் இருக்க வேண்டும். இதில், இருவர் மட்டுமே ஆடமுடியும். மூன்று கூழாங்கற்கள், பதினைந்து புளிய விதைகள் அல்லது சோழிகள் அல்லது குன்றி மணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.


ஒரு புள்ளியில் இருந்து பிரியும் நான்கு சாய்கோடுகள் கீழே உள்ள கிடைக்கோட்டில் வந்து முடியவேண் டும். இந்த கூம்பு வடிவக் கோடுகளின் நடுவில் மூன்று கிடைக்கோடுகள் வரையப்பட்டு அவற்றின் இரு முனை யும் நெடுங்கோட்டால் இணைக்கப்பட்டிருக்கும். இதுதான் ஆடுபுலி ஆட்டத்தின் ஆடுகளமாகும். இக்கோடுகள் சந்திக்கும் இடத்தில் உருவாகும் சந்திகளில் காய்களை வைக்க வேண்டும். 3 புலிகள், 15 ஆடுகள் கொண்ட இந்த விளையாட்டில் புலிகள் ஆடுகளிடம் சிறைப்படுதல் அல்லது ஆடுகளை புலிகள் விழுங்குதல் என்பது விளையாட்டின் நோக்கமாகும்.

ஆடுகளை ஒவ்வொன்றாக விழுங்கும் புலிகள், புலிகளை முற்றுகையிட்டு அசையவிடாமல் அடைக்கும் ஆடுகள் என்று வகுக்கப்பட்டுள்ளது. முதலில் புலியைவைத்து ஆடுபவர்தான் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். முதலில் புலி, அடுத்து ஆடு என்று சட்டகத்தின் இணைப்புகளில் வைக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளைப் போல் இது கட்டத்துக்குள் வைக்கப்படுவதில்லை. புலிகளை அடைப்பதுபோல ஆடுகளை அடுக்க வேண்டும். அதைத் தடுப்பதுபோல புலிகளை நகர்த்த வேண்டும்.

புலிக்கு அருகில் ஆடு இருந்து, அதற்கு அடுத்தகட்டம் வெற்றிடமாக இருந்தால் புலி அங்கே தாவுவதன் மூலம் ஆட்டை விழுங்கும்.  எனவே, புலிக்கு அருகில் தொடர்ச்சியாக இரு ஆடுகள் வரிசையில் இருந்தாக வேண்டும். புலிகள் சிறைப்படும்போது எத்தனை ஆடுகள் விழுங்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து ஆடுகள் தரப்பில் விளையாடுபவர் புள்ளிகளைப் பெறுவார். அதுபோல புலிகளை சிறைப்படுத்த முடியாத அளவுக்கு ஆடுகளை இழந்தால் புலிகள் தரப்பில் விளையாடுபவர் வெற்றிபெறுவார்.


பொதுவாக இந்த விளையாட்டில் காசுக்கு வேலையில்லை. மூளைக்குத்தான் வேலை.இது, சாதாரணமாக கைகளை நகர்த்தி எளிதில் விளையாடக்கூடிய விளையாட்டில்லை. இதற்கு கூர்மையான சிந்தனை தேவை. இதில், நன்கு யோசித்து விளையாண்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். ஒரு காலகட்டத்தில் அனைத்துப் பிரிவினரும் ஆடிவந்த விளையாட்டாக இருந்த ஆடு புலி ஆட்டம், இன்று கிராமங்களில்கூட ஆடப்படுவதில்லை என்பது வேதனையான விஷயம். முதியோர் சிலர் மட்டும்தான் தங்களது கவலைகளை மறக்க விரும்பி, இன்றும் இந்த விளையாட்டை ஆங்காங்கே விளையாடி வருகிறார்கள்.


இந்த விளையாட்டை விளையாடுவதன் மூலம் நம்மை எதிரிகளிடமிருந்து எப்படிக் காத்துக்கொள்ள முடியும் என்கிற தற்காப்பு சிந்தனைகள் வளரும். எதிரி குற்றமிழைப்பதை நம்முடைய சுய சிந்தனை மூலம் தடுக்க முடியும். இதனால் நன்கு சிந்தனை திறன் மேலோங்கும். தொழில்நுட்பத்  திறனை வளர்க்க முடியும். ஒருங்கிணைக்கும் ஆற்றலை வளர்க்க முடியும். சாதுர்யமாக முன்னேற முடியும் என்கின்றனர், விளையாட்டு ஆசிரியர்கள். 

விளையாடுங்க புள்ளைங்களே…

Leave a Comment