தலையை பத்திரமா பாத்துக்கோங்க.
பிரபல நடிகர் பிரபு, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் பிரைன் அட்டாக் எனப்படும் மூளை ரத்தக்கசிவு நோயில் இருந்து தப்பியுள்ளனர். அந்த நோய் குறித்து தெளிவாக அறிந்துகொள்வோம்.
பொதுவாக பிரபலங்களுக்கு புதிதாக ஒரு நோய் பாதிப்பு ஏற்படும் நேரத்தில், அந்த நோய் குறித்து சாதாரண மக்களுக்கும் சென்றடைந்து மருத்துவ விழிப்புணர்வு உண்டாகிறது. அதனாலே பிரபலங்கள் மீண்டு வந்த மெடிக்கல் ஹிஸ்டரியை விரிவாகச் சொல்வது பலருக்கும் பயனுள்ளதாக அமைகிறது. அந்த வகையில் இப்போது ஹார்ட் அட்டாக் போன்று பிரைன் அட்டாக் குறித்து பலரும் கேள்விப்படுகிறார்கள்.
மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவை அட்டாக் என்று சொல்வதை விட பிரைன் பக்கவாதம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள். மூளையின் ஒரு ரத்தக்குழாய் வெடிப்பதால் அந்த இடத்திலும் அதை சுத்தியுள்ள திசுக்களிலும் ரத்தக் கசிவை உண்டாக்கும். இது மூளை செல்களை அழித்துவிடுகிறது. சிறிதளவு ரத்தம் கசிவு ஏற்படும் நேரத்தில், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில் அந்த நபரை நிச்சயம் காப்பாற்ற முடியும். அதிக அளவு ரத்தம் கசிவதும், உடனடியாக மருத்துவ வசதி கிடைக்காததும் உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.
மூளையில் ஏன் ரத்தம் கசிகிறது?
பொதுவாக தலையில் அடிபடுவதே ரத்தக்கசிவுக்கு முக்கியமான மற்றும் முதல் காரணமாக இருக்கிறது. குறிப்பாக இள வயதினருக்கு அதாவது 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு மூளை ரத்தக்கசிவுக்கு இதுவே அதிகபட்ச காரணமாக இருக்கிறது. அதோடு நீண்ட நாட்களாக ரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பின் அது நாள்பட்ட ரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்கிறது. சிகிச்சை அளிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம் மூளையில் ரத்தக்கசிவை உண்டாக்குகிறது. ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தாலும் ரத்தக்குழாய் வெடித்து மூளையில் ரத்தம் கசியலாம்.
சிலருக்கு பிறவியிலேயே ரத்தக்குழாய்களின் சுவர் பலவீனமாக இருப்பதுண்டு. அது, ஒரு கட்டத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ரத்தக்கசிவு ஏற்படலாம். வயது மூப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தினால் ரத்த நாளங்கள் வலுவிழந்து போகலாம். அதேபோல், மூளைப்பகுதியில் அனியூரிசம் (aneurysm) திடீரென வெடிக்கலாம். அனியூரிசம் என்பது ரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்யும் ஒருவகை வீக்க நோய். ரத்த நாளங்களில் சில நேரங்களில் இது போன்ற வீக்கங்கள் ஏற்படுவதுண்டு. இதை கண்டுகொள்ளா விட்டால் எந்நேரம் வேண்டுமானாலும் இது வெடித்து ரத்தக்கசிவு ஏற்படலாம். மூளையில் ரத்தக் கசிவு காரணமாக பக்க வாதம் ஏற்படலாம்.
ஹீமோஃபீலியா அல்லது சிக்கில்செல் அனீமியா ஆகியன ரத்தத்தில் ப்ளேட்ளெட்ஸ் அளவை குறைக்கும். அதுபோல் ரத்தத்தை மென்மையாக்கும் ப்ளட் தின்னர்ஸ் மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் மூளையில் ரத்தக் கசிவு ஏற்படலாம். கல்லீரல் நோய்களாலும் மூளையிலும் ரத்தக் கசிவு ஏற்படலாம். பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் மாரடைப்பு மாதிரியே பிரெயின் அட்டாக் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
அறிகுறிகள்
பொதுவாக மூளையில் எந்த இடத்தில் ரத்தம் கசிகிறது, எவ்வளவு கசிவு என்பதைப் பொறுத்தே இந்த அறிகுறிகள் தென்படும். பாம்பே ஜெயஸ்ரீக்குத் தெளிவான அறிகுறிகள் தெரியாமல் உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டார். அதனாலே திடீரென மயங்கி விழுந்து கோமா நிலைக்குப் போகும் அளவுக்கு உடல் நிலை மோசமானது.
திடீர் தீவிர தலைவலி, திடீர் வலிப்பு, கை, கால்களில் தளர்ச்சி, குமட்டல், வாந்தி, மந்தநிலை, பார்வையில் குறைபாடு, மரத்துப்போதல், கூச்சம் ஏற்படுதல், பேசுவதில் சிக்கல். பேச்சை புரிந்துகொள்வதில் சிக்கல், உணவை விழுங்குவதில் சிக்கல், எழுதுதல், வாசித்தலில் சிக்கல், கைகள் உதறுதல், சுவையறிதலில் தடுமாற்றம், மூர்ச்சையடைதல் போன்ற பாதிப்புகள் ரத்தகசிவு காரணமாக இருக்கலாம்.
மூளை ரத்தக்கசிவு என்பது மூளை திசுக்களுக்கு உள்ளேயும் ஏற்படலாம் வெளியேயும் ஏற்படலாம். வெளியே ஏற்படும்போது அது மூளையைப் பாதுகாக்கும் மெம்ப்ரேன்களையும் சேர்த்து பாதிக்கிறது. இந்தவகை ரத்தக் கசிவால் தான் 13 சதவீத பக்கவாத பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிகிச்சைகள்
மூளை ரத்தக்கசிவை மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மூலமே உறுதி செய்கின்றனர். ‘ஹெமராஜிக் ஸ்ட்ரோக்’ பாதித்தவர்களுக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை மூலமே தீர்வு காண முடியும். ஏனென்றால் அந்த அடைப்பானது அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு கட்டி போல காட்சியளிக்கும். சிலருக்கு வீக்கத்தை தணிக்க, ரத்தக்கசிவை நிறுத்த அறுவை சிகிச்சை அவசியமாகும்.
ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும் பட்சத்தில் கார்டிகோஸ்டீராய்ட்ஸ், ஆஸ்மோடிக்ஸ் போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படும். வலிப்பு ஏற்பட்டவர்களுக்கு வலிப்பு நோய் தடுப்பு மருந்துகள் தரப்படும்.
தவிர்க்க முடியுமா?
தலையில் அடிபடுவது மிக முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே அனைவரும் குறிப்பாக முதியவர்கள் கீழே விழுந்து தலையில் அடிபட்டுவிடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதேபோல், வாகனங்கள் ஓட்டுவதில் அதிக கவனம் தேவை. அதிக வேகத்தில் செல்பவர்களுக்கே மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே எப்போதும் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள். மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். மோட்டார் சைக்கிள் ஓட்டும் நேரத்திலும் ஸ்கேட்போர்டு பயன்படுத்தும் நேரத்திலும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம்.
உயர் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பரிசோதனை செய்துகொண்டு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதேபோன்று சிகரெட், மது போன்ற போதை போதைப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. ரத்தநாள பிரச்னை இருப்பது தெரியவந்தால், உடனடியாக அதனை சீர் செய்யும் கரெக்டிவ் சர்ஜரி செய்துகொள்ள வேண்டும். இதய நோய்க்கு ரத்த அடர்த்தி குறைக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதில் போதிய கவனம் இருக்க வேண்டும். அவ்வப்போது இந்த மாத்திரைகளின் பக்கவிளைவுகள் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
மன அழுத்தமும் ரத்த அழுத்தத்திற்கும் ரத்தக்கசிவுக்கும் முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆகவே, எல்லாவற்றையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்ளுங்கள். கடினமான சூழலையும் ஈசியக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அது தொடர்பான அழுத்தம் குறைந்துவிடும். எனவே, ரத்த அழுத்தத்தை எகிற விடாமல் பார்த்துக்கோங்க.