தமிழிசையுடன் குடி மோதல்
தி.மு.க. கூட்டணியில் அண்ணன் தம்பி போல பழகிவந்த ஸ்டாலின் – திருமாவளவனுக்கு இடையில் பனிப்போர் நடந்துகொண்டு இருக்கிறது. குடி ஒழிப்பு மாநாடு நடத்தியதில் தி.மு.க.வினரின் கோபத்தை சம்பாதித்திருக்கிறார். அதோடு, ஆட்சியில் பங்கு கேட்டு அ.தி.மு.க.வின் கூட்டணியையும் அலறவிட்டார்.
தி.மு.க. கொண்டுவந்த அருந்ததியர் இட ஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போனார் திருமாவளவன். அங்கேயும் அவருக்குத் தோல்வி கிடைத்திருக்கிறது. மாநாட்டுத் தோல்வி, கட்சிக்குள் குழப்பம், நீதிமன்றப் பின்னடைவு என்று தடுமாறும் திருமா இப்போது தமிழிசையிடம் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
வாழ்நாள் முழுக்க மதுவுக்கு எதிராகப் போராடிய காந்திஜிக்கு மாலை அணிவித்துவிட்டு மது ஒழிப்பு மாநாட்டுக்கு செல்வதற்கு திருமாவளவன் நினைத்தார். ஆனால், கவர்னர் மாலை அணிவித்த பிறகே மற்றவர்கள் அணிவிக்க முடியும் என்று தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு மாலை அணியாமல் கிளம்பினார் திருமாவளவன்.
திருமா மாநாட்டைக் கடுமையாக எதிர்த்தது பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ’விசிக நடத்தியது மது ஒழிப்பு மாநாடு அல்ல, டிராமா’’ என்று கடுமையாகப் பேசியிருந்தார். அடுத்து தமிழிசை செளந்தரராஜன், ‘குற்றவுணர்வு காரணமாக திருமா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை’ என்று அவருக்கே உரிய பாணியில் பேசினார்.
ஆனால் இதற்கு திருமாவளவன், ‘’உங்களைப் போலத் தான் நானும்’’ என்ற ரீதியில் பதிலளித்து இருந்தார். இந்த விஷயத்தை அண்ணாமலை டீம், ‘’தமிழிசை மது குடிப்பதை திருமாவளவன் கிண்டல் செய்கிறார்’’ என்று செய்தி பரப்பியது. இதையடுத்து தமிழிசைக்கு மதுப் பழக்கம் இருப்பதை திருமாவளவன் கிண்டல் செய்கிறார் என்று சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் அறிந்து தமிழிசை நொந்தே போய்விட்டார்.
இதையடுத்து இன்று திருமாவளவன், ‘’எனக்கு குடிப் பழக்கம் இல்லை, அதே போல் அவருக்கும் இல்லை என்பதைக் குறிப்பிடவே அப்படிப் பேசினேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவருக்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்’’ என்று பேசியிருக்கிறார்.
இப்படி எல்லா பக்கமும் சிக்கலை உருவாக்கிக்கொண்டே இருந்தால் எப்படி..? ஏன் இத்தனை தடுமாற்றம் என்று சிறுத்தைகள் நொந்துகொள்கிறார்கள்.