மம்தாவின் புதிய திட்டம் சாத்தியமா?
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை பாதுகாக்கிறார் என்று மம்தா பானர்ஜிக்கு எதிராக போராட்டம் வெடித்திருக்கிறது. பல இடங்களிலும் போராட்டத்தில் மோதல் நடந்து நகரமே ரத்தக்களறியாக மாறியிருக்கிறது.
பாஜக அழைப்பு விடுத்துள்ள 12 மணி நேர பந்த் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பகுதியாக முடங்கியுள்ளது. நாடியாவில் திரிணமூல் – பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆங்காங்கே ரயில் மறியல், சாலை மறியல், கடைகளை மூட வற்புறுத்தல் என பாஜகவினர் பந்த்தை முழு வீச்சில் அமல்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தீர்வு காணும் வகையில் புதிய சட்டம் கொண்டுவருகிறார் மம்தா பானர்ஜி. இதுகுறித்து மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க சட்டப்பேரவை அடுத்த வாரம் கூட்டப்படும். அப்போது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனையை உறுதி செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றுவோம். இந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும். அந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் தரவில்லை என்றால், நாங்கள் ராஜ்பவன் வெளியே உட்காருவோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், பொறுப்புக் கூறுவதை இந்த முறை ஆளுநர் தவிர்க்க முடியாது” என்று தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை வழக்குகள் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு 7 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் எனது அரசு விரும்புகிறது என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
இதெல்லாம் சமாளிப்பதற்கான நடவடிக்கை மட்டுமே, இதற்கு சாத்தியமே இல்லை. உண்மையான குற்றவாளியை இன்னமும் போலீஸ் கைது செய்யவில்லை என்றே போராட்டங்கள் நடக்கின்றன.