ஹோம் மேட் பியூட்டி டிப்ஸ்
நம்முடைய சருமத்தைஅழகாக்குவதற்கு மருத்துவமனைக்கோ அல்லது பியூட்டி பார்லருக்கோ போகவேண்டியதே இல்லை. ஆம், வீட்டிலிருந்தபடியே அழகாக்கலாம். அதற்குத் தேவை வீட்டில் இருக்கும் பொருட்களும் கொஞ்ச நேரமும்தான்.. இதோ சில எளிய டிப்ஸ்.
சருமம் பளிச்சிடுவதற்கு:
* ஆப்பிள் பழத்தை, சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
* ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்கும்.
* எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தக்காளியை நன்றாக மசித்து, அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து முகம், கழுத்து, கைகளில் பூசிவர சருமம் பளிச்சிடும்.
* தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால், சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளைப் போட்டுக் குழைத்து முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து பயத்தமாவை தேய்த்துக் கழுவினால் சுருக்கங்கள் விலகுவதுடன் சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
* மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
சருமம் வெண்மை பெறுவதற்கு:
* அன்னாசிப் பழத்தின் சாறு, தர்பூசணி மற்றும் பப்பாளி பழச் சாறுகளை முகத்தில் தடவி காய்ந்தபின் கழுவவும். இப்படி, வாரம் மூன்று நாள் செய்தால் சருமம் நிறம் பெறும்.
* புதினா மற்றும் எலுமிச்சைச் சாறுகளை கலந்து முகத்தில் தடவினால் சருமம் நிறம் பெறும். சுத்தமான சந்தனத்தை, பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தைக் கழுவலாம்.
* வேப்பிலை, புதினா, மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளைக் காயவைத்து, தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் சிறிது எடுத்து பாலில் குழைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊறவைத்து குளித்தால், கறுத்துப் போகாமல் இருக்கும்.
* சீரகம் மற்றும் முள்ளங்கியை, தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும். அதுபோல், சிறிதளவு இளநீரை முகம், கழுத்து மற்றும் கைகளில் பூசிவந்தாலும் சரும நிறம் மாறும்
* முட்டையின் வெள்ளைக் கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
கருமை அகற்றுவதற்கு:
* ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
* கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சைப் பழச் சாற்றைத் தேய்த்து சோப்பு போட்டு குளித்தால், நாளடைவில் கறுப்பு நிறம் போய்விடும்.