என்னங்கடா நடக்குது இங்கே…?
திராவிட மாடலை எதிர்க்கிறோம் என்றும் விஞ்ஞான ஊழல் நாயகன் என்று கருணாநிதியை ஆயிரத்தெட்டு முறை விமர்சனம் செய்த பா.ஜ.க. தலைவர்கள் அத்தனை பேரும் இன்று கருணாநிதி சமாதியில் ஒன்றுகூடிய தரமான சம்பவத்தைக் கண்டு ஒட்டுமொத்த தமிழகமும் உறைந்து நிற்கிறது.
40 நாடாளுமன்ற சீட் இருக்கிறது என்ற காரணத்துக்காகவும், பெரும்பான்மை அரசாங்கமாக இல்லை என்பதாலும் இப்படி தி.மு.க.வுக்கு இறங்கிவந்து பா.ஜ.க. சாமரம் வீசுவதாக சமூகவலைதளத்தில் விமர்சனங்கள் வெளியாகின்றன. இரண்டு கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று சங்கமித்து இருப்பதால், இனி யாரை எதிர்த்து போராட வேண்டும் என்று புரியாமல் சங்கிகளும் உ.பி.களும் திகைத்து நிற்கிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில், நூற்றாண்டு நிறைவு விழாவாக ரூ.100 நினைவு நாணயத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட, அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெற்றுகொண்டார்.
இந்த நாணயத்தினை வெளியிட தமிழகம் வந்துள்ள ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணய வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த பா.ஜ.க. தலைவர்களும் வந்து நின்றது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பின்னே நின்ற அண்ணாமலையை அன்புடன் அழைத்து முன்னுக்கு வரவழைத்திருக்கிறார் ஸ்டாலின். இவர்களின் அன்பையும் அரவணைப்பையும் கண்டு தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள். அரசு விழா என்றாலும் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா, இப்படியா கட்டிக்குவாங்க என்று கேட்கிறார்கள்.