இவங்கதான் இந்துக்களின் பிரதிநிதிகளா..?
இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திய ‘பரிதாபங்கள்’ யூ டியூப் சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைவரிடம் பா.ஜ.க. தலைவர் நாராயணன் திருப்பதி புகார் அளித்திருக்கிறார். அமர்பிரசாத் ரெட்டியோ இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர காவல் துறை தலைவரிடம் புகார் அளித்திருக்கிறார்.
கோபி, சுதாகர் பங்குபெறும் பரிதாபங்கள் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்காத தமிழர்கள் யாரும் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு எல்லா விஷயங்களிலும் தனித்தன்மையுடன் புகுந்து விளையாடுபவர்கள். எத்தகைய சென்சிடிவ் மேட்டரையும் சிம்பிளாக டீல் செய்வதில் கில்லாடிகள். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி விஜய் வரையிலும் எல்லோரையும் மீம்ஸ்களாக மாற்றி சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பவர்கள். இவர்கள் லட்டு காமெடியை பிட்டு படங்கள் எடுக்கும் பா.ஜ.க.வுக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லையா என்று சமூகவலைதளங்களில் பிரித்து மேய்கிறார்கள்.
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, ‘’தமிழ்நாட்டிலிருக்கும் ரவுடுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாஜக யாருக்கு பிரதிநிதி? தமிழ்நாட்டின் கலைஞர்களை மிரட்டும் பொறுக்கித்தனத்தை நிறுத்திக்கொள்வது பாஜகவிற்கு நல்லது. பரிதாபங்கள் எனும் பெயரில் காணொளி படைப்புகளை வெளியிடும் கலைஞர்களான சுதாகர், கோபி தமிழக மக்களால் வரவேற்கப்படக் கூடிய வளர்ந்துவரும் இளம் கலைஞர்கள். தமது படைப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவையல்ல என்று அறிவிப்பவர்கள்.
தமிழகத்தின் தலைவர்களின் சாயலில் அவர்கள் வெளியிட்ட நையாண்டிகள், எள்ளல்களை அந்தந்த தலைவர்களே நகைச்சுவை உணர்வுடன், சனநாயக பண்புடன் கடந்து செல்வார்கள். கலைஞர்களுக்கும், படைப்புகளுக்கும் மரியாதை அளிப்பது தமிழர்களின் பண்பு. எவ்வகையிலும் படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தமிழ்நாடு தலையிட்டதோ, தடுத்ததோ கிடையாது. ஆனால் இந்த நாகரிகப்பண்புகளுக்கு அன்னியமான ஆரிய பாஜக கும்பல், பரிதாபங்கள் கோபி, சுதாகர் மீது அடக்குமுறையை ஏவ முயல்கிறது.
‘வெஜிட்டேரியன் ஒன்லி’ என வெட்கமில்லாமல் வெறுப்புணர்வை வெளிக்காட்டும் சாதிவெறி கூட்டங்களால் நாம் இழிவுபடுத்தப்படும் சூழலில், அந்த அநாகரிகத்தை அம்பலப்பாடுத்தி நையாண்டி செய்வது, உயர்சாதி வெறுப்புணர்வின் மீது விழும் செருப்படி. கல்விக்கூடம், வேலைசெய்யும் இடங்களில் அசைவம் உண்பவர்களை இழிவு செய்வதும், ஒதுக்குவதும், அசைவ உணவு உண்ணும் உரிமையை மறுப்பதும் என அராஜகமும், அயோக்கியத்தனம் செய்திடும் வெறுப்புணர்வுக் கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் பாஜகவின் மிரட்டலை ஒன்றுசேர்ந்து எதிர்த்திடுவோம்’’ என்று கண்டனம் செய்திருக்கிறார்.