• Home
  • சக்சஸ்
  • மண்டியிடாத மாவீரன் பகத்சிங் கடவுள் தியரி

மண்டியிடாத மாவீரன் பகத்சிங் கடவுள் தியரி

Image

பிறந்த நாள் சிந்தனைகள்

ஒரு மனிதனை நீங்கள் அழித்து விடலாம். ஆனால் அவன் சிந்தனையை நீங்கள் ஒருபோதும் அழிக்க முடியாது என்று முழங்கிய பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று. அவரது சிந்தனைகளை, அவரது சேவைகளை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இப்போதும் இருக்கிறது ஒரு வேதனையான சூழல் தான். ஏனென்றால், அவரது சிந்தனைகள் எல்லாம் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நனவாகிவிடும் என்று நினைத்தார்.

முக்கியமாக குருட்டு நம்பிக்கைகள் இப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பகத் சிங் சிந்தனை மிகவும் ஆழமானவை, அர்த்தமுள்ளவை.

பகத்சிங் கடவுள் நம்பிக்கை சிந்தனைகள் அற்புதமானவை. ’இந்தப் பிரபஞ்சத்தை படைத்து , காத்து, நடத்தி வரும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கையை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டுவிட்டேன். என்னுைடய இந்த தெய்வ நம்பிக்கையற்ற தன்மையை நாத்தக வாதத்தை பகிரங்கப்படுத்தினேன்’ என்கிறார். அதனாலே, உலகம் முழுவதும் உள்ள விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்றால் பரிபூரணமான சுதந்திரம் புரட்சியின் மூலம் கிடைக்கப்பெற வேண்டும் என்று விரும்பினார்.

கடவுளை நீரோ மன்னன் என்று அழைத்த புரட்சியாளன். ’கணக்கு வழக்கற்ற கொலைகளை, துக்கமும் துயரமும் நிறைந்த சம்பவங்களை—ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நாழிகையிலும்,ஒவ்வொரு நிமிஷத்திலும் செய்து கொண்டிருக்கிற “என்றுமுள” நீரோவாகிய முழு முதற் கடவுளுக்கு—நீங்கள் என்ன தீர்ப்புக் கூற போகிறீர்கள்? செங்கிஸ்கான் தோற்றோடும்படியாக ஒவவொரு கணத்திலும் நடைபெறும் அவனுைடய (கடவுள்) தீய காரியங்களை நீங்கள் எவ்வாறு ஆதரிக்கு நினைக்கிறீர்கள்?:’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

புரட்சிகர இளைஞனாக 23 வயது வரை வாழ்ந்து இந்த தேசத்திற்கு தன்னை ஒப்படைத்து தூக்கு மேடையை முத்தமிட்ட இளைஞன் தான் பகத்சிங்.  அவர் சிறைச்சாலையில் இருந்து எழுதிய ஒரு முக்கியமான நூல் தான் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற நூல்,

பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து, மிகவும் உணர்ச்சியும், அறிவும் பொங்கும் ஒரு அற்புதமான தலையங்கத்தை எழுதியவர் தந்தை பெரியார் (29.3.1931 – குடிஅரசு) காந்தியார் கூட பகத்சிங்கை ஆதரிக்காத நிலையில், காங்கிரசை விட்டு வெளியேறி  சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் பகத்சிங்கை பாராட்டி எழுதியதோடு மட்டுமல்லாமல், சிறையில் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார், அந்த நூலுக்கு ஆங்கில அரசு தடை விதித்த நிலையில் – தோழர். ஜீவானந்தம் அவர்கள் மூலம் தமிழில் மொழி பெயர்த்து, “குடிஅரசு” வெளியீடாக வெளியிட்டு பரப்பினார்கள் பெரியார் தனது உண்மை விளக்கம் அச்சகத்தின் மூலம், குடியரசு பதிப்பகத்தில் வெளியிட்டார்.  அதற்காக பெரியார் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த புத்தகத்திற்கு தடை விதித்ததோடு விடாமல் பெரியாரையும், ஜீவாவையும் 1934 இல் கைது செய்தது, இது தான் தமிழக வரலாற்றில் மொழிபெயர்ப்பு செய்தற்க்காக முதன் முதலில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம்.

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணமே பகத்சிங்.

Leave a Comment