நாராயணமூர்த்தியை அடுத்து சுப்பிரமணியன்
வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ள விவகாரம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தைக் கிளப்பியிருக்கிறது.
எல் எண்ட் டி தலைவர் SN சுப்பிரமணியன், `எனக்கு உங்களை (தொழிலாளர்களை) ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்று பெரிய வருத்தம் உள்ளது. உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைத்தால் மிகவும் சந்தோஷமடைவேன். நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்த்து வருகிறேன். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்… எவ்வளவு நேரம் உங்கள் மனைவியையே பார்த்துகொண்டு இருக்க முடியும்? மனைவிகளும் எவ்வளவு நேரம் கணவரை பார்த்துகொண்டு இருக்க முடியும்? ஆபீஸுக்கு வாருங்கள்…வேலை செய்ய தொடங்குங்கள்” என்று பேசியுள்ளார்
முன்னதாக இதே கருத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியிருந்தார். இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். “நான் காலை 6.20 மணி முதல் இரவு 8.30 மணி வரை பணியாற்றுவேன். அதுபோல உழைத்தால்தான் இந்தியா முன்னேறும். தற்போது உலக அளவில் இந்தியாவின் உற்பத்தி குறியீடு பின்தங்கி உள்ளது. அதேபோல், நாட்டில் நிலவும் ஊழல், அதிகார வர்க்கம் கடமையாற்றுவதில் உள்ள தாமதம் ஆகியவை மாறினால் மட்டுமே இந்தியா வேகமான வளர்ச்சியை எட்ட முடியும்” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து கடந்த நவம்பரில் சிஎன்பிசி குளோபல் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் பேசிய நாராயணமூர்த்தி, “தேசத்தின் முன்னேற்றத்துக்கு கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். நாட்டில் வலுவான பணி சார்ந்த நெறிமுறை இல்லாமல் நம்மால் உலக நாடுகளுடன் வளர்ச்சி சார்ந்து போட்டியிட முடியாது. இந்தியாவின் வளர்ச்சி நம் முயற்சியில் தான் உள்ளது. 1986-ல் வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை என்ற மாற்றம் எனக்கு ஏமாற்றம் தந்தது. மேலும், வாரத்துக்கு 6 நாள் வேலை அவசியம் என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன். அந்த கருத்தை தன் கல்லறை வரை கொண்டு செல்வேன், ஒருபோதும் மாற்றிக் கொள்ளபோவதில்லை.” என்றும் தெரிவித்திருந்தார்.
இப்போது சுப்பிரமணியத்தின் பேசுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ’’தொழிலாளர்கள் வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்யும்போது சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடியாக உள்ளது. இது முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு. தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார்.
அலெக்சாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா? சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான். தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா? இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான். நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது.
ஒரு வாரத்துக்கு 40 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்த்தால் உடலில் சத்துக் குறைபாடு, முறையற்ற தூக்கம், மன அழுத்தம் போன்றவை ஏற்பட்டு குடும்பம் சீர்குலைந்துவிடும். நான் வேலையை பார்த்துக்கொண்டால், என் மனைவியை யார் பார்ப்பது?’’ என்று கடுமை காட்டுகிறார்கள்.