பாப்பி மலர் போன்று மாறுங்கள்…

Image

கணவன், மனைவி உறவுக்கு ஆலோசனை

’’என் மகளுக்கு வரன் பார்த்திருக்கிறேன். நல்ல இடமாகத் தெரிகிறது. அதேநேரம், மாப்பிள்ளைக்கு முன்கோபம் ஜாஸ்தி என்றாலும் பாசக்காரர் என்கிறார்கள்… அதனால் சகித்துக்கொண்டு வாழவேண்டும் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறேன்… வாழ்க்கை என்பது அப்படித்தானே….?’’ ஞானகுருவிடம் விளக்கம் கேட்டார் மகேந்திரன்.

‘’பாப்பி மலர்களை சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள் ஏன் தெரியுமா..?’’

காரணம் தெரியாது என்பதால் பதில் சொல்லாமல் அமைதி காத்தார் மகேந்திரன். ஞானகுரு தொடர்ந்தார். ‘’சகிப்புத்தன்மைக்கு அடையாளமாக பாப்பி மலர்கள் உலகம் முழுக்க அடையாளம் காட்டப்படுகின்றன. ஏனென்றால், முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில் இங்கிலாந்து நாட்டில் கட்டங்கள், பாலங்கள், ரோடுகள், வீடுகள் எல்லாம் உடைந்து, சிதைந்து உருக்குலைந்து கிடந்தன. மக்கள் அமைதியைப் பறிகொடுத்து பதட்டமான மனநிலையில் இருந்தனர். அந்த நேரத்தில் பருவகாலம் மாறியதும் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் திடீரென பாப்பி மலர்கள் எங்கெங்கும் பூத்துக்குலுங்கின. வாழ்க்கை இன்னமும் இருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் வகையில் பெரும் நம்பிக்கையை பாப்பி மலர்கள் கொடுத்தன. மக்களுக்கு இந்த மலர்கள் பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்தன. இதையடுத்தே இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகளில் பாப்பி மலர்கள் இடம் பிடித்தன.

எத்தனை சிக்கல், துன்பம் நிகழ்த்தப்பட்டாலும் பருவ காலத்தில் பாப்பி மலர்கள் தங்கள் செயலை நிறுத்துவதே இல்லை. எனவே, சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்துகொண்டு இருந்தால், திடீரென மாற்றம் வந்துவிடும் என்பதைச் சொல்கின்றன பாப்பி மலர்கள்.

மனிதர்களுக்கும் சகிப்புத்தன்மை மிகவும் அவசியமே. அதுவும் அக்கம்பக்கத்தில் வசிக்கும் மனிதர்கள், உடன் பணிபுரியும் ஊழியர்கள், உறவினர்கள் ஆகியோர்களிடம் மிகுந்த சகிப்புத்தன்மையுடனே இருத்தல் வேண்டும்.

முக்கியமாக பொது இடங்களில் புழங்கும் நேரத்தில் சகிப்புத்தன்மை ரொம்பவே தேவை. ரயிலுக்காக காத்திருக்கும் நேரம், அக்கம்பக்கத்தில் யாரேனும் செல்போனில் உரக்கப் பேசிக்கொண்டிருந்தால், யாரேனும் குடித்துவிட்டு உளறிக்கொண்டிருந்தால் அதனை சகித்துக்கொள்ள வேண்டும். கூட்டமான  பஸ்ஸில் பயணிகள் நெரிசலை சகிக்கத்தான் வேண்டும். ஏ.டி.எம்.மில் நுழைந்தவர் மீண்டும் மீண்டும் பணம் எடுத்துக்கொண்டே இருந்தால், அந்த செயலை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

நன்றாக தூங்கிக்கொண்டு இருக்கும் நேரம்… காரில் எங்கோ ஒருவர் சத்தமாக ஹார்ன் செய்துவிட்டுப் போகிறார் என்றால், ஆர்வமாக தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் மின்சாரம் போய்விட்டால் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

கற்றலில் குறைபாடு உள்ள பிள்ளைக்கு ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கற்றுத்தர வேண்டியிருக்கும். இதுகூட புரியவில்லையே என்று சலித்துக்கொள்ளாமல் அவரது குறைப்பாட்டை சகித்துக்கொள்ள வேண்டும். சிக்னலில் நிற்கும்போது யாரேனும் ஒருசிலர் சிக்னலை கண்டுகொள்ளாமல் தைரியமாகப் போவார்கள், அவர்களை சகித்துக்கொள்ளுங்கள். பூங்காவில் நீங்கள் அமைதியாக நடைபயிற்சி செய்துவரும் நேரத்தில், இளைஞர்கள் சிலர் கொண்டாட்டமாக குறுக்கே ஓடியாடினால், அவர்களை சகித்துக்கொள்ளவே வேண்டும்.

சகிப்புத்தன்மையை இன்னொரு வகையில் மன்னிப்பு என்றும் சொல்லலாம். பிறருக்கு வருத்தம் அல்லது சங்கடம் எதுவும் கொடுக்காமல் அவர்களது செயலை மன்னித்து அல்லது சகித்துக்கொள்ளும் நேரத்தில் மனதில் இனம்புரியாத அமைதியும் நிம்மதியும் ஏற்படுவது நிஜம். இந்த சகிப்புத்தன்மை உளவியல் கண்ணோட்டத்தில் உடல் நலனுக்கும் நல்ல விளைவுகளை உருவாக்குகிறது.

தகுதி இல்லாத சிலர் உயர் பதவியில் இருந்து உத்தரவுகள் போடும் நேரத்தில், கோபம் கொள்ளாமல் சகித்துக்கொள்ளவே வேண்டும். பிடிக்கவே செய்யாத ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால், அதனை சகித்துக்கொள்ளவே வேண்டும். நம்மால் ஒரு ஓட்டு எதிராக போட முடியுமே தவிர, அந்த ஆட்சியை எதிர்த்து எதுவும் செய்ய இயலாது. எனவே, அமைதியாக சகித்துக்கொண்டு போக வேண்டும்.

நோயால் முடங்கும் போது, நமது இயலாமையை சகித்துக்கொள்ள வேண்டும். நமது விருப்பத்திற்கு ஏற்ப பிறர் நடக்காத நேரத்தில், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் சொன்னதைக் கேட்கவில்லை என்று கோபம் கொள்ளாமல், அவர்களுக்குரிய முறையில் அவர்கள் வாழ்கிறார்கள், அதில் தவறு ஏதுமில்லை என்று ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மை.

இதுபோன்ற தருணங்களில் சகிப்புத்தன்மையை இழந்து விட்டால் பிற மனிதர்களுடன் இணைந்து வாழ்வதில் சிக்கல் வந்துவிடும். ஜாதி, மதம், மொழி, பண்பாடு, கலாசாரம் போன்ற வித்தியாசம் இருந்தாலும் பிற மனிதர்களின் உரிமைகளில் தலையிடாமல், அவர்களுடைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மதிப்பதே சகிப்புத்தன்மை. எனவே ஒவ்வொரு மனிதரும் சகிப்புத்தன்மையுடன் வாழவேண்டியது மிகவும் அவசியம். வீட்டுக்கு வெளியே இந்த சகிப்புத்தன்மை மிகமிக முக்கியம்… ஆனால், வீட்டுக்குள் சகிப்புத்தன்மை தேவையே இல்லை..’’ என்று நிறுத்தினார் ஞானகுரு.

‘’சகிப்புத்தன்மை பற்றி இத்தனை உயர்வாக சொல்லிவிட்டு, வீட்டில் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்…?’’ கோபமாகவே கேட்டார் மகேந்திரன்.

‘’வெளியுலகில்  இருக்கப்போவது கொஞ்ச நேரம். உயர் அதிகாரியுடன் இருக்கப்போவது சில நிமிடங்கள். பஸ் நிலையம், ஏ.டி.எம். வாசலில் இருக்கப்போவது கொஞ்ச நேரம். எனவே, சொந்த வாழ்க்கையுடன் எந்த தொடர்பும் இல்லாத மனிதர்கள் செய்வதை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால், வீட்டில் கணவனை மனைவியும் மனைவியை கணவனும் சகித்துக்கொண்டு வாழ்வது அர்த்தமே இல்லாதது. கணவனுக்குப் பிடிக்காது என்பதற்காக மனைவி அவருடன் வெளியே செல்லும் தருணங்களில் பச்சைக் கலர் உடை அணியாமல் போவது விட்டுக்கொடுத்தல் என்று சொல்லலாம். அதேநேரம், மனைவி ஒருபோதும் பச்சை நிறத்தில் உடை அணியவே கூடாது என்று சொல்பவரை சகித்துக்கொள்ளத் தேவையில்லை.

கணவர் கோபப்படுகிறார் என்றால், அவர் ஏன் கோபப்படுகிறார் என்பதை புரிந்துகொண்டு, அதனை தவிர்த்து வாழ்வதுதான் அழகு. அவர் கோபப்படுவதை சகித்துக்கொண்டே இருப்பது என்றால் மனைவியும், கணவனும் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் தன்மை இருக்கலாமே தவிர, சகித்துக்கொண்டு வாழும் கொடுமை இருக்கக்கூடாது.

சூழ்நிலை அறிந்து விட்டுக்கொடுப்பது ஒரு நல்ல செயலாக கருதப்படும். ஆனால், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்வது அடிமைத்தனமாக இருக்கும். விட்டுக்கொடுப்பவருக்கு மரியாதையும், நிம்மதியும் கிடைக்கும். ஆனால், சகித்துக்கொண்டு வாழ்பவருக்கு மனதில் கசப்புகள் மட்டுமே எஞ்சியிருக்கும்.…’’ என்றார் ஞானகுரு.

மகேந்திரனுக்குத் தெளிவு வந்தது.

Leave a Comment