• Home
  • அழகு
  • ரோஸ் வாட்டரில் அழகோ அழகு..!

ரோஸ் வாட்டரில் அழகோ அழகு..!

Image

சிம்பிள் பியூட்டி

உலக அழகி கிளியோபட்ராவே தன் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்தியிருக்கிறார் என்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம். அப்படியானால் பண்டைக்காலம் முதலே ரோஸ் வாட்டர் அழகு கலைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவாக புரியவருகிறது. ரோஸ் வாட்டரை போலவே ரோஸ் எண்ணெயும் உங்கள் அழகை மெருகேற்ற பயன்படுகிறது. 

ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதனை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி அழகை மேன்மேலும் அதிகரிக்க முடியும். மேலும் ரோஸ் வாட்டரை அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டர் கடைகளில் கிடைக்கும் ஒரு அற்புதமான விலை குறைவான பொருள்.

ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மென்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைத்து, சருமமே இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இங்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அதன்படி செய்து கோடையிலும் உங்கள் அழகை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

கண் வீக்கத்தை குறைக்கும்
ரோஸ் வாட்டர் பாட்டிலை 1/2 மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக காணப்படும்.

புத்துணர்ச்சியான சருமம்
கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் இந்த முறையை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

மென்மையான சருமம்
தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

வறட்சியான சருமத்தை போக்கும்
வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.

மேக்கப் ரிமூவர்
இரவில் படுக்கும் போது, வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால், அதனை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், மேக்கப் நீங்குவதோடு, சருமமும் மென்மையோடு இருக்கும்.

ஸ்ப்ரே
முகத்திற்கு மேக்கப் போட்ட பின்னர், இறுதியில் ரோஸ் வாட்டரை லேசாக முகத்திற்கு தெளித்து கொண்டால், மேக்கப் போட்ட பின் முகம் அழகாக காட்சியளிக்கும்

சிறந்த ஆப்டர் ஷேவ்
ஷேவிங் செய்து முடித்த பின், ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி பயன்படுத்தினால், ஷேவிங் மூலம் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்றவை நீங்கி, முகம் அற்புதமாக இருக்கும்.

சரும டோனர்
ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். மேலும் ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போகி, சருமத்தை இளமையாக வெளிக்காட்டும். அதற்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

முகப் பொலிவு

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும். இளமையோடு காட்சி தரும். சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும்.

ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவிய பின், சில துளிகள் க்ளிசரின் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வரலாம். இது முகத்திற்கு சிறந்த க்ளென்சராக இருக்கும். குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கலாம். இதனால் கண்களில் சோர்வு மற்றும் வறட்சி மறைந்துவிடும்.

ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசிய பிறகு ஒரு கப் ரோஸ் வாட்டரால் கூந்தலை மேலும் ஒரு முறை அலசலாம். இது கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.  குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவலாம். அப்படி தடவினால் சரும துளைகள் சுருங்கி முகம் பளபளக்கும்.

வீட்டிலே செய்யலாம்

ரோஸ் வாட்டரை  கடையில வாங்குறது  விட வீட்டிலேயே எப்படி ரோஸ் வாட்டர் செய்வது என்பதை பார்க்கலாம். ரோஜா இதழ்களை நல்ல தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் போட்டு 20 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து, பின்னர் அதில் தேவைப்பட்டால் பாதாம்  எண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு விட்டு, பிறகு எடுத்து வடிகட்டி ஆறியதும், அந்த நீரை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டரைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை முறை  வேண்டுமானாலும் முகத்தை சுத்தப்படுத்தலாம்

Leave a Comment