• Home
  • அழகு
  • மழைக் காலத்திலும் பளபள அழகு

மழைக் காலத்திலும் பளபள அழகு

Image

பழங்களே பியூட்டி பார்லர்

பெண்களின் சருமத்திற்கு கோடை காலத்தில் ஒரு வகையிலான பிரச்னை என்றால் மழைக் காலத்தில் வேறு வகையில் தொந்தரவுகள், பிரச்னைகள் வருகிறது. இந்த காலகட்டத்தில் முகப்பரு, கரும்புள்ளி, பாக்டீரியா தொற்று, பூஞ்சை தொற்று, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வருகின்றன. முகப்பருவால் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு குளிர் காலமும் மழைக் காலமும் கூடுதல் பாதிப்புகளை உருவாக்கலாம்.

இப்போது காற்றில் உயர்ந்த ஈரப்பதம் காரணமாக சரும துளைகள் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகம் உருவாக்குகிறது. எனவே, சருமத்தை சுத்தம் செய்வதன் மூலம் சருமத்துக்கு ஈரப்பதம் ஒட்டும் தன்மை அதிகமாக கிடைக்கும். சருமத்தை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கட்டாயம் சுத்தப்படுத்த வேண்டும். அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு மென்மையான க்ளென்சிங் மில்க் பயன்படுத்தலாம்.

காற்றில் நிறைய ஈரப்பதம் இருந்தாலும் சருமத்துக்கு கூடுதலாக ஈரப்பதம் தேவைப்படுகிறது. எனவே ஜெல் மற்றும் நீர் சார்ந்த மாய்சுரைசர்கள் பயன்படுத்துவதால் முகப்பரு வராமல் தவிர்க்கலாம். எண்ணெய் பசை கொண்ட கூந்தல் முகப்பருவை உண்டு செய்யலாம். குறிப்பாக தலைமுடியில் எண்ணெய் அதிகம் இருக்கும் போது கூந்தல் சுத்தம் அவசியம். மழைக்காலம் என்றாலும் வாரம் இரண்டு முறையாவது தலைமுடியை சுத்தம் செய்வதன் மூலம் முகப்பருவை தடுக்கலாம். மழைக்காலங்களில் மேக்கப் போடுவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டியதில்லை. ஓரளவு மிதமாக போடலாம்.  சிறிதளவு மேக்கப் பயன்படுத்தினாலும் இரவில் தூங்கும் போது மேக்கப்பை கலைத்துவிட்டு படுப்பது முக்கியம்.

மழை காலங்களிலும் சருமத்திற்கு போதிய ஊட்டச்சத்து கொடுக்க வேண்டியது அவசியம். பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவது போன்று பழத்தின் தோல்கள் சருமத்திற்கு நன்மை செய்கின்றன. வைட்டமின் சி மற்றும் மாய்சுரைசர் நிறைந்த பழத்தோல்களை சருமத்தில் பயன்படுத்தும்போது அவை சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க செய்யும்.

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு தோல், வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை தோல், பப்பாளியின் தோல், வாழைப்பழத் தோல், ஆப்பிள் தோல், மாதுளைப்பழத் தோல் போன்றவற்றை சரும அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். மாதுளம் பழத்தோலை காயவைத்துபொடியாக்கி அத்துடன் பன்னீர் கலந்து முகம் கழுத்து பகுதியில் தடவி நன்றாக காய வைக்க வேண்டும். அதன் பிறகு நீரில் முகத்தை கழுவி எடுக்க வேண்டும். மாதுளை தோல் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கச் செய்யும். வயதான தோற்றத்திலிருந்து இளமையாக வைத்திருக்க உதவும்.

ஆப்பிள் தோலை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஆறவைத்து ஆப்பிள் தோலை மசித்து வைக்கவும். இந்த தண்ணீரை டோனராக பயன்படுத்தலாம். பருத்தி உருண்டையை கொண்டு முகத்தில் தடவி விடுவதன் மூலம் சருமத்திலுள்ள துளைகளை இறுக்க செய்யும். மசித்த விழுதுடன் சிறிது கடலை மாவு கலந்து முகத்துக்கு பேக் போட்டு மந்தமான நீரில் முகத்தை கழுவி விடவும். ஆப்பிள் தோலை மிக்ஸியில் அடித்து ஃபேஸ் பேக் போடுவது முகத்துக்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்கும்.

அதேபோல் மசித்த பப்பாளித்தோலுடன் சில துளி பன்னீர் சேர்த்து கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவலாம். பப்பாளி தோலில் உள்ள என்சைம்கள் சருமத்தை மிருதுவாகவும் பொலிவாகவும் மாற்றும். சருமத்தை மென்மையாக வைக்க உதவும். இதை அழகு சார்ந்த தயாரிப்பு பொருள்களிலும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. பப்பாளி தோல் இறந்த செல்களை அகற்றும். இதில் இருக்கும் பபைன் என்னும் நொதி இதற்கு உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தின் தோலை நன்றாக காயவைத்து அதனை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழத் தோல் பொடியுடன் சம அளவு சந்தனம் பன்னீர், தயிர் அல்லது தேன் கலந்து குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும். ஆரஞ்சு வைட்டமின் சி நிறைந்தது. இது சருமத்துக்கு நன்மை பயக்க கூடியது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் குறைக்கும். சருமத்துளைகளை அடைத்து சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

வாழைப்பழத்தோலின் இரண்டு நுனி பகுதியில் உள்ளவற்றை வெட்டி எடுத்துவிட வேண்டும். இப்போது தோலை முகத்தில் மென்மையாக தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் போன்று 15 முதல் 20 நிமிடங்கள் வரை தேய்க்க வேண்டும். வாழைப்பழத்தோலில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால் சருமம் ஜொலிப்பதை பார்க்கலாம். இது வைட்டமின் சி, இ , பொட்டாசியம், ஜிங்க் மாங்கனீசு சத்து உள்ளடக்கியது. பொதுவாக பழத்தோல்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டவை. மேலும், இவை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதுடன் சரும எரிச்சலைக் குறைக்கின்றன.

Leave a Comment