குளியல் என்பது கலை

Image

கவிஞர் வைரமுத்து சொல்வதைக் கேளுங்கள்.

பக்கெட் வாட்டரில் குளிப்பது தான் நகரவாசிகளுக்கு விதிக்கப்பட்ட குளியல் முறையாக இருக்கிறது. கிணறு, நீச்சல் குளம் அல்லது பக்கெட் வாட்டர் என எதுவாக இருந்தாலும் குளிப்பதற்கு என கொஞ்சநேரம் ஒதுக்குவதும், அதனை அனுபவித்துக் குளிப்பதும் மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் செயல் என்கிறார்கள் மருத்துவர்கள். எப்படி அனுபவித்துக் குளிக்க வேண்டும் என்பதற்கு கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் கவிதையைப் படித்துப் பாருங்கள்.

மகிழ்ச்சியாகக் குளிக்கும் ஆசை வந்துவிடும்.

குளித்தல் என்பது

தண்ணீர்த் தாரைகள்

சருமம் கடக்கும்

சம்பவம் அல்ல

சின்னதொரு தியானம்;

சிலநிமிட தவம்

சொந்த உறுப்புகளின்

சுயதரிசனம்

புறத்தோல் கழுவல்

உட்சூடு தணித்தல் என

ஒரு வினையில்

இருவினை புரியும்

திருவினை – குளித்தல்

நெடுவுடல் எங்கணும்

நீர்வழிந்தாட

நீர்வழித் தடத்தில்

நினைவுகள் ஓட

மரணம் போலொரு

மகாசுகம் எய்தும்

அன்றாட மோட்சம் குளியல்

எந்த உறுப்பையும்

தவிர்க்காதபடி

நின்று தேய்த்து

நீயே குளிக்கும்வரை

உனது உடம்பு உன்னுடையது

குளியலை

ஒரு கலையென்று கருதாது

கடனென்று

கருதும் பாவிகளை

எந்த நதியில் குளிப்பாட்டுவது?

  • கவிஞர் வைரமுத்து, ‘நெற்றித்தீ’

Leave a Comment