• Home
  • பணம்
  • வங்கியும் பள்ளியும் கொள்ளைக்காரர்கள்

வங்கியும் பள்ளியும் கொள்ளைக்காரர்கள்

Image

பணம் தரும் மந்திரம்

கிணற்று நீரை இறைத்து ஊற்றிக் கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். முகத்தில் சோகத்துடன், ‘’நான் மிகவும் சிக்கனமாக வாழ்க்கை நடத்துகிறேன். தேவையில்லாத செலவுகளை எல்லாம் குறைத்துவிட்டேன். ஆனாலும், ஒவ்வொரு மாதமும் பணத்துக்கு நான் திண்டாட வேண்டியிருக்கிறது’’ என்று வருந்தினார்.

‘’இனிமேல் நீ எந்த செலவையும் குறைக்காதே… வருமானத்தைப் பெருக்கு’’

‘’அதெப்படி நான் மாதச் சம்பளத்தில் வேலை செய்கிறேன்… இந்த வேலைக்கு எங்கு போனாலும் இந்த அளவே சம்பளம் கிடைக்கும்..’’

‘’வேண்டும் என்று தேடுபவருக்கு வழிகள் திறக்கும், வேண்டாம் என்பவருக்குக் காரணங்கள் தென்படும்…’’

‘’அப்படியென்றால் நான் சரியாகத் தேடவில்லை என்கிறீர்களா..?’’

‘’ஆம், நீ இப்போது பார்க்கும் இதே வேலைக்கு இதே சம்பளம் என்றால், உன்னுடைய மேல் அதிகாரி என்னென்ன வேலை செய்கிறார் என்று முழுமையாகக் கவனி. அவருடைய வேலையைக்கு உயர்வதற்கு முயற்சி செய். உன் நிறுவனத்தில் அது சாத்தியமில்லை என்றால் வேறு ஒரு நிறுவனத்தில் அவர் வகிக்கும் பதவிக்கு முயற்சி செய். வேலை கிடைக்கும், சம்பளம் கூடும்…’’

‘’அது ரிஸ்க் இல்லையா..?’’

‘’ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர் ஒருபோதும் முன்னுக்கு வர மாட்டார். உனக்கு அதற்கு விருப்பம் இல்லையென்றால் பகுதி நேரமாக ஏதாவது வேலை செய்….’’

‘’எனக்கு என்ன தெரியும்?’’

‘’அதை நீயே கண்டுபிடிக்க வேண்டும். நன்றாக படம் வரைவாய் என்றால் ஓவிய வகுப்பு தொடங்கு. சமைக்கத் தெரியும் என்றால் சப்பாத்தி செய்து கொடு… இதற்கெல்லாம் கஷ்டம் என்றால் உன்னிடம் இருக்கும் சொத்துக்களை சம்பாதிக்கச் செய்..’’

‘’சொத்து என்றால்..?’’

‘’எவ்வளவு நகை வைத்திருக்கிறீர்கள்..?’

‘’30 பவுன் இருக்குமென்று நினைக்கிறேன்… லாக்கரில் வைத்திருக்கிறேன்..’’

‘’பணத்தை பதுக்கி வைத்திருக்கிறாய். உனக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் வீட்டில் வைத்துவிட்டு மீதியை விற்பனை செய். அந்தப் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்…’’

‘’திடீர் அவசரம் என்றால் பயன்படுத்துவதற்கு வைத்திருக்கிறேன்..’’

‘’இத்தனை ஆண்டுகளில் ஏதேனும் அவசரம் வந்ததா..?’’

‘’இல்லை…’’

‘’இத்தனை ஆண்டுகளாக நகையை பூட்டி வைத்து அதற்கு கட்டணமும் கொடுத்துவருகிறாய். பணம் சம்பாதிக்க நினைத்தால் முதலில் லாக்கரை மூடு. அது ஒரு கொள்ளைக் கூடம். நகை உன் வீட்டில் இருப்பதும் லாக்கரில் இருப்பதும் ஒன்று தான்…’’

’’அதெப்படி… லாக்கரில் இருப்பது தானே பாதுகாப்பு..?’’

‘’யார் அப்படி சொன்னது.. நாளை உன்னுடைய வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உன் நகையை கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டு போய்விட்டால் அதற்கு யாரும் பொறுப்பேற்பார்களா..?’’

‘’வங்கியில்தானே வைத்தேன், அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்…’’

‘’வங்கி லாக்கரில் நீ என்ன வைத்தாய் என்பது அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் பொறுப்பு ஏற்கவும் மாட்டார்கள். இதில் சந்தேகம் இருந்தால், அவர்களிடம் சென்று மீண்டும் ஒரு முறை கேட்டு உறுதிபடுத்திக் கொள். உன்னிடமிருக்கும் நகைக்கு இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டால் மட்டுமே அது கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஊரில் ஏதாவது நிலம் இருக்கிறதா..?’’

‘’கொஞ்சம் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறேன். விலை ஏறியதும் விற்பனை செய்வதற்குத் திட்டமிட்டிருக்கிறேன்..’’

‘’விலை ஏறும் வரையில் ஏன் சும்மா இருக்க வேண்டும்..? யாருக்காவது நிலத்தை குத்தகைக்கு விடு அல்லது வாடகைக்குக் கொடு. உனக்குத் தேவைப்படும் நேரத்தில் திரும்பக் கிடைப்பதற்கு ஏற்ப சட்டப்பூர்வமாக பத்திரம் பதிந்துகொள்… உன் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்..?’’

‘’ஒரு பெரிய தனியார் பள்ளியில். அதற்குத் தான் அதிக பணம் செலவாகிறது…’’

‘’நீ எங்கு படித்தாய்..?’’

‘’நான் அரசு பள்ளியில் ஒரு பைசா கூட செலவில்லாமல் படித்தேன்…’’

‘’உன் பிள்ளைகளையும் அங்கே படிக்கச் சொல். அவர்களுக்கு நீ செலுத்தும் கட்டணத் தொகையை பாதுகாப்பாக முதலீடு செய். உன்னுடைய அவசரச் செலவுக்கும் பயன்படுத்தலாம், நாளை உன் பிள்ளைகளின் மேற்படிப்புக்கும் அது உதவியாக இருக்கும்…’’

‘’அதெப்படி, அக்கம்பக்கத்தில் எல்லோரும் பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வைக்கும்போது நான் மட்டும் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்க்க முடியும். நாலு பேர் தப்பாப் பேசுவாங்களே…’’

’’அந்த நாலு பேரிடம் சென்று உன் பணப் பிரச்னைக்குத் தீர்வு கேள்’’ என்றபடி பேச்சை முடித்துக்கொண்டார் ஞானகுரு.

 

Leave a Comment