அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி
ஊருக்கெல்லாம் நல்ல நேரம் பார்த்த ஜோசியர், தன்னோட நேரத்தைப் பார்க்காம இடி விழுந்து செத்தார் என்பார்கள். அந்த கதையாத்தான் மாறிப் போச்சு பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தேர்தல் பஞ்சாயத்து.
மோடியை ஜெயிக்க வைச்சேன், மம்தாவை ஜெயிக்க வைச்சேன், ஸ்டாலினை ஜெயிக்க வைச்சேன் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தவர், தானே ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையில் பிஹாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார். பிஹாரில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இவரது கட்சியினர் முதன்முறையாகப் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 4 வேட்பாளர்களும் மோசமான தோல்வி அடைந்தனர். இவர்களில் 3 பேர் டெபாசிட் இழந்தனர். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், “பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளது. இங்கு பாஜக கூட்டணி நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தாலும் இதனை முடிவுக்கு கொண்டுவரவில்லை. என்றாலும் இங்கு பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது கவலை அளிக்கிறது. இத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 10 சதவீத வாக்குகளை எங்கள் கட்சி பெற்றுள்ளது. 3 தொகுதிகளில் ஆர்ஜேடி தோல்விக்கு இது காரண மாக இருந்ததாக கூறுவதை ஏற்க முடியாது” என்றார்.
பிரசாந்த் கிஷோரை தமிழகத்துக்கு கொண்டுவர திட்டம் போட்டிருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது அதிர்ச்சியில் இருக்கிறார். தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத கிஷோர் அ.தி.மு.க.வை காப்பாற்றுவாரா என்ன..?