• Home
  • சக்சஸ்
  • கிங் கோலி மேடையில் அஸ்திரம் பும்ரா

கிங் கோலி மேடையில் அஸ்திரம் பும்ரா

Image

ரோகித்துக்கு வெற்றிப் புன்னகை

கிங் கோலி இருக்கிறார் என்ற நம்பிக்கையே இந்திய அணிக்கு கணிசமான ரன்கள் கிடைக்க உதவியது. அதேபோல் அதிசய அஸ்திரம் பும்ரா இருக்கிறார் என்ற நம்பிக்கையாலே கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறார் ரோகித் சர்மா.

ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் வெற்றி உறுதி என்றே இருந்தது.

13 ஓவர்களில் 109 ரன்கள், 42 பந்துகளுக்கு 68 ரன்கள் தேவை என்ற நிலையில், 12 பந்துகளில் 38 ரன்களை அடித்துவிட்டனர். 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தான், அடித்து நொறுக்கும் கிளாசன், மில்லர் களத்தில் நிற்கிறார்கள். இந்த இடத்தில் இந்தியா வெற்றிப்பெறும் என 17% மக்கள் மட்டுமே கணித்தனர்.

கடைசி 2 ஓவர் எல்லாம் இல்லை, பும்ரா ஏதாவது மேஜிக் செய்தால் மட்டுமே என்று நினைத்த வேளையில், பும்ராவை சரியாக கொண்டு வந்தார் ரோகித். நம்பவே முடியாத இடத்தில் இருந்து மீண்டு வந்து அணியை வெற்றி பெறுவதெல்லாம் மறக்கவே முடியாது. அதை சாதித்துக் காட்டினார் பும்ரா.

16 ஆவது ஓவரில் பும்ரா 4 ரன்கள் மட்டுமே கொடுக்க, 17 ஆவது ஒவரை வீசிய பாண்டியா கிளாசன் விக்கெட் எடுத்து 4 ரன்களை மட்டுமே கொடுத்த இடமே இந்தியாவிற்கு நம்பிக்கையை கொடுத்திருக்கும்.

18 ஆவது ஓவரில் யான்சன் விக்கெட்டுடன் 2 ரன்கள் மட்டுமே. இந்த ஓவரின் கடைசி பந்தில் மில்லர் மஹராஜை ஏன் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக் கொடுத்தார் எனத் தெரியவில்லை. அவர்களின் அபாயகரமான பவுலர் கடைசிப் பந்தை வீசுகிறார், அடுத்த இரு ஓவர் அர்ஷ்தீப், பாண்டியா என்ற நிலையில் ஸ்ட்ரைக்கை எதற்கு மஹராஜ்க்கு கொடுக்கனும், கடைசி ஓவரில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தாரோ!

அர்ஷ்தீப் 4 ரன்கள் மட்டுமே கொடுக்க கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை, முதல் பந்திலே ஆகாய மார்க்கத்தில் மில்லர் பறக்கவிட, சிக்சா அவுட்டா என உலகமே பார்க்க, அவ்வளவு நெருக்கடியான நேரத்திலும், சூர்யகுமார் விழிப்புணர்வோடு மிகத்துல்லியமாக நேரத்தை, தூரத்தை கவனித்து கேட்ச் செய்து வெற்றியை உறுதி செய்தார்.

கடைசி 5 பந்துகளையும் ரபாடா, மஹராஜை வைத்து பாண்டியா நகரத்த 8 ரன்களில் நம்ப முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார் பாண்டியா. கடைசியில் 2 ஓவர் வீசிய பாண்டியா 10 ரன்களை கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார், ஒரு ஓவர் வீசிய அர்ஷ்தீப் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 2 ஓவர்கள் வீசிய பும்ரா 6 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றியது.

பும்ராவிற்கு 2 ஓவர் இருக்கிறது என்ற அவர்களின் பயம் இந்தியாவிற்கு நம்பவே முடியாத வெற்றியை பறித்து கொடுத்துள்ளது. அதிரடி உலகக்கோப்பைத் தொடரில் 29.4 ஓவர்கள் வீசி 2 மெய்டன்கள் உடன் 124 ரன்கள் மட்டுமே, அதாவது ஓவருக்கு 4.17 ரன்கள் கொடுத்து 15 விக்கெட்களை கைப்பற்றி கோப்பையை பெற்றுக் கொடுத்ததோடு தொடர் நாயகன் விருதையும் பெற்றுவிட்டார்.

கோலி எனும் கிங் அமைத்துக்கொடுத்த மேடையில் பும்ரா என்னும் அஸ்திரம் கோப்பையை பெற்றுக் கொடுத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித்தும் இணைந்துவிட்டார்.

Leave a Comment