இஸ்ரேல் பிரதமருக்குப் பிடி வாரண்ட்…

Image

போர் நிற்க வாய்ப்பு உண்டா?

இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், பாலஸ்தீனப் போர் முடிவுக்கு வர வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்த இஸ்ரேலின் மேல்முறையீட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை பிரிவு நிராகரித்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோகவ் கேலண்ட் மற்றும் ஹமாஸின் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கரீம் கான், நெதன்யாகு, கேலண்ட் மற்றும் டெய்ப் மற்றும் (கொல்லப்பட்ட) இரு ஹமாஸ் தலைவர்களான இஸ்மாயில் ஹனியே மற்றும் யாஹ்யா சின்வாருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரினார். மேலும், ஜூலை மாதம் காஸாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் முகமது டெய்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறிய நிலையில் அவருக்கு எதிராகவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு எதிராக நடைபெறும் போரில், போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இம்மூவரும் காரணம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த பிடிவாரண்டை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவு, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளை தவிர்த்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 124 உறுப்பினர் நாடுகளையும் பொறுத்தது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ”பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார், [காஸாவில்] ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் இஸ்ரேல் நிர்ணயித்த அனைத்து போர் இலக்குகளையும் அடையும் வரை பின்வாங்க மாட்டார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வரை, இந்த போர் நிற்கப்போவதில்லை என்பதே நிஜம்.

Leave a Comment