ஆம்ஸ்ட்ராங் டைரிக் குறிப்பு

Image

படிப்பு முதல் படுகொலை வரை

வடசென்னை அரசியல் வித்தியாசமானது. தமிழகத்தின் பிற பகுதி போன்று அனைத்து மக்களுக்கும் நெருக்கம் இல்லாதது. அதனாலே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்படட் பிறகே அப்படி ஒரு தலைவர் இருந்ததும் அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் என்பதும் நிறைய மக்களுக்குத் தெரியவந்திருக்கிறது.

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்.

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டியலினத்தவரான கிருஷ்ணன் என்பவரது மகன் ஆம்ஸ்ட்ராங். ஆரம்ப காலத்தில் குத்துச்சண்டை, உடற்பயிற்சி போன்றவற்றில் ஆர்வம் காட்டியவர்.

ஆம்ஸ்ட்ராங் அரசியலில் ஆர்வம் காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ-வான ப.ரங்கநாதனுடன் சற்று நெருக்கமாக இருந்தார். பின்னர் பூவை மூர்த்தி தலைவராக இருந்த புரட்சி பாரதம் கட்சியில் சேர்ந்தார். இதற்கிடையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கேஸ்வரா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார்.

2002ம் ஆண்டு பூவை மூர்த்தி இறந்த பிறகு, அக்கட்சியில் இருந்து விலகிய ஆம்ஸ்ட்ராங், தனியாக ‘அம்பேத்கர் தலித் ஃபவுன்டேஷன்’ என்ற அமைப்பு ஒன்றைத் துவங்கிச் செயல்பட்டு வந்தார். அதேநேரம் ஏரியா மக்களிடம் ரொம்பவே இணக்கம் காட்டிவந்தார். அதனால் 2006ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 99-வது வார்டில் யானைச் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஆம்ஸ்ட்ராங்.

அந்தத் தருணத்தில் சென்னையில் ஷிப்பிங் கார்ப்பரேஷனில் பணியாற்றிவந்த இடும்பன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியில் (பி.எஸ்.பி) தீவிரமாக செயல்பட்டுவந்தார். யானை சின்னத்தில் நின்று ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்றதையறிந்த இடும்பனும் இன்னும் சிலரும் இணைந்து ஆம்ஸ்ட்ராங்கைச் சந்தித்து, பி.எஸ்.பி-யில் இணையும்படி கோரினர். அப்போது பி.எஸ்.பி-யின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சுரேஷ் மானேவும் கட்சியில் இணையும்படிச் சொல்லவே, அக்கட்சியில் இணைந்தார் ஆம்ஸ்ட்ராங்.

உடனடியாக, அதாவது 2007ம் ஆண்டில் அக்கட்சியின் மாநிலத் தலைவராகவும் ஆம்ஸ்ட்ராங்க் நியமிக்கப்பட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து  செல்வப்பெருந்தகை வெளியேறியபோது, அவர் பி.எஸ்.பி-யில்தான் இணைந்தார். ஆகவே அவர் தலைவராக்கப்பட்டு, ஆம்ஸ்ட்ராங் ஒருங்கிணைப்பாளர் ஆக்கப்பட்டார்.

பின்னர் செல்வப்பெருந்தகை காங்கிரசிற்குச் சென்ற பிறகு மீண்டும் பி.எஸ்.பி-யின் மாநிலத் தலைவரானார் ஆம்ஸ்ட்ராங். இந்த நிலையில், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கு இடையிலான கலவரம் தொடர்பாக இவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், ஒரே நாளில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இந்த வழக்கில், 2016ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கவுன்சிலராக இருந்த காலட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர் பிரச்சனைக்காகச் சில போராட்டங்களை நடத்தி இருக்கிறார். பி.எஸ்.பி-யின் மாநிலத் தலைவரான பிறகு மாயாவதியைச் சென்னைக்கு அழைத்து வந்து மிகப் பெரிய மாநாடு ஒன்றையும் ஆம்ஸ்ட்ராங் நடத்தினார்.

அரசியலில் பெரிய அளவுக்கு வளர்ந்துவந்த நிலையில் கடந்த 5ம் தேதி உணவு டெலிவரிக்கு வந்த ஊழியர்கள் போன்று சிலர் தயாராக நின்ற நிலையில், மூன்று பைக்கில் வந்த 6 பேர் ஆம்ஸ்ட்ராங்கை அவரது வீட்டுக்கு அருகே வெட்டிச் சாய்த்தனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டும் காப்பாற்ற முடியாமல் உயிர் இழந்துவிட்டார்.

கட்டப்பஞ்சாயத்து, ஆருத்ரா கோல்டு மோசடி, அரசியல் போட்டி, தொழில்முறை பிரச்னை, இப்போது வீடு கட்டும் இடத்தில் தகராறு என்று இவரது படுகொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. அதேநேரம், இவர் பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்கி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போலீஸ் இவரது மரணத்தை பழி வாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான தென்னரசு, கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே கொல்லப்பட்டார். இந்தக் கொலையைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களே தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு காரணம் என நம்பப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு திருமணமாகி, ஒரு குழந்தை இருக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பாலு, அதே பகுதி சந்தோஷ், பெரம்பூர் பொன்னுசாமி நகர், 3-வது தெரு திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத், அதே பகுதியைச் சேர்ந்த அருள், செல்வராஜ், விஜய், கோகுல், சிவசக்தி ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆற்காடு சுரேஷின் தம்பி கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில், ‘’கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் 18-ந் தேதி வெட்டிக் கொலைசெய்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் மறைமுகமாக பல்வேறு உதவிகளை செய்தார். சுரேசின் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான மாதவன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தன.

இதனால் ஆம்ஸ்ட்ராங்கை விட்டு வைத்தால் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று கருதினேன். எனது அண்ணனுக்கு நேற்று முன்தினம் (5-ம் தேதி) பிறந்த நாளாகும். எனவே அன்றைய தினம் ஆம்ஸ்ட்ராங்கை எப்படியும் கொல்ல வேண்டும் என்று திட்டம் போட்டோம். இதன்படி கொலை செய்தோம்’’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.  இவ்வாறு வாக்கு மூலம் அளித்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

கருணாநிதி உடலை பொது இடமான மெரீனாவில் அடக்கம் செய்யலாம் என்றால் ஆம்ஸ்ட்ராங்கை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்வதில் என்ன பிரச்னை என்று அவரது ஆதரவாளர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

விஜயகாந்த், மூப்பனார் போன்றோரின் உடல் அவர்களது கட்சி நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கும் பொழுது ஏன் ஒரு தலித்திய மக்களுக்கான தலைமைக்கு அனுமதி இதுவரை வழங்கப்படாமல் இருக்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாவனா, ‘’ஆம்ஸ்டிராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது; ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை’’ என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உடல் அடக்கம் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.

Leave a Comment