மனம், மனமறிய ஆவல்.
பட்டாம்பூச்சி போன்று சினிமா ரசிகர்களின் கனவில் சுற்றிக்கொண்டிருந்த நஸ்ரியாவுக்கு ஒரு வித்தியாசமான உளவியல் சிக்கல். அதனை தெளிவாக விளக்குகிறார் மருத்துவர் மோகன் பாலகிருஷ்ணா.
இளம் வயதில் நடிக்க வந்து தனக்கென்று ரசிகர் கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டவர் நஸ்ரியா. இவர் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பிறகு, இந்த ஜோடிக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி, பிரசன்னா – சினேகா போன்று அனைவருக்கும் பிடித்த காதல் ஜோடியாக உள்ளனர். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வந்த நஸ்ரியா திடீரென காணாமல் போனார். இந்த நிலையில், அவர் போட்ட ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ள்ளாக்கியது.
நீண்டநாட்களாக அவர் பொதுவெளியில் வராமல் இருப்பது குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நஸ்ரியா விளக்கம் அளித்திருக்கிறார். அதில், ‘’அனைவருக்கும் வணக்கம்… நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் சிறிது காலமாக தொடர்புகொள்ள முடியாத சூழலில் இருந்து வருவது பற்றி உங்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எல்லோருக்கும் தெரியும் நான் சமூவலைதளத்தில் எந்த அளவிற்கு ஆக்டிவாக இருப்பேன் என்று. ஆனால், கடந்த சில நாட்களாக மனநலம் மற்றும் தனிப்பட்ட சவால்கள் (Emotional wellbeing and personal challenges) காரணமாக போராடி வருகிறேன். மன்னித்து விடுங்கள்… நான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன்.
எனது 30வது பிறந்த நாளையும், புத்தாண்டையும், என் ‘சூக்ஷ்மாதர்ஷினி’ படத்தின் வெற்றியையும், இன்னும் பல முக்கியமான தருணங்களையும் என்னால் கொண்டாட முடியவில்லை. நான் ஏன் காணாமல் போனேன் என விளக்காததற்கும், அழைப்புகளை எடுக்காததற்கும், மெசேஜ்களுக்கு பதில் சொல்லாததற்க்கும் என் அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்படுத்தியிருக்கும் கவலை அல்லது சிரமத்திற்கு நான் உண்மையிலேயே வருந்துகிறேன். நான் முற்றிலுமாக இயங்குவதை நிறுத்திவிட்டேன்.
வேலை விஷயமாக என்னைத் தொடர்புகொள்ள முயற்சிக்கும் என் சக நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துகிறேன்.
ஒரு நேர்மறை விஷயமாக, சிறந்த நடிகருக்கான கேரள திரைப் பட விமர்சகர்கள் விருதைப் பெற்றதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து அங்கீகாரங்களுக்கும் மிக்க நன்றி மற்றும் சக போட்டியாளர்களுக்கும், வெற்றியா ளர்களுக்கும் வாழ்த்துகள்.
இது ஒரு கடினமான பயணம். ஆனால், நான் ஒவ்வொரு நாளும் குணமடைவதில் கவனம் செலுத்துகிறேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி கூறுகிறேன். முழுமையாகத் திரும்பி வர எனக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படலாம். ஆனால், நான் மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்.
இன்று இதை எழுதுவதற்கான காரணம், இப்படி நான் காணாமல் போனதற்கு எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நான் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதனால்தான். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்… விரைவில் மீண்டும் இணைவோம். என்னோடு இருந்ததற்கும் உங்கள் முடிவில்லாத ஆதரவுக்கும் நன்றி’’ என நஸ்ரியா தெரிவித்துள்ளார்.
நடிகை நஸ்ரியா, மனநலம் மற்றும் தனிப்பட்ட (Emotional Wellbeing) சவால்கள் என்கிற மனம் சார்ந்த பிரச்னையைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். உண்மையில், அது என்ன அவ்வளவு பெரிய உளவியல் பிரச்னையா என்று மன நல ஆலோசகர் மோகன் பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.
அதற்கு அவர், ‘’நஸ்ரியாவுக்கு வந்திருப்பது அச்சப்பட வேண்டிய மன நோயோ அல்லது அகப் பிரச்னையோ இல்லை. தனது உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சிலரால் முடியாது. அவர்கள் திடீரென்று அழுவார்கள், சிரிப்பார்கள், தனக்குத் தானே கூட பேசிக்கொள்வார்கள். தொடர்ந்து இந்தப் பிரச்னை ஏற்படாது. அவ்வப்போது ஏற்படலாம். உணர்ச்சிகளை ஆக்கப்பூர்வமாக (capacity to express emotions constructively) வெளிப்படுத்த இயலாதபோதுகூட இதுபோன்ற பிரச்னை ஏற்படலாம்.
சுய மதிப்பீடு என்று ஒன்று இருக்கிறதல்லவா இது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவர் தனது தகுதிக்கு மீறி தன்னைப் பற்றிய மிகு எண்ணம் கொண்டிருப்பார். சிலர் தாழ்வு மன நிலையிலேயே வாழ்வில் எல்லா பரிமாணங்களையும் எதிர்கொள்வார்கள். இன்னும் சிலர் தன்னைப் பற்றிய எந்த சுய மதிப்பீடும் இல்லாமலே இருப்பார்கள். முதல் இரண்டு வகை நபர்களுக்கும் தன்னைப் பற்றிய சுய அலசல் இல்லாததுதான் பிரச்னையே. இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும்… ‘நான் யார்?’ என்பது ரமணரின் உயர்ந்த கோட்பாடு. நான் யார்? என் எண்ணங்கள் என்ன? என்னை வழிநடத்துவது எத்தகைய எண்ணங்கள். நான் யாரை பின் தொடர்கிறேன். எனக்கு வரும் இன்ப, துன்பங்களுக்கு யார் காரணம் அல்லது எது காரணம் என்பதை கண்டறிந்து, அதனை நூறு விழுக்காடு ஏற்றுக்கொண்டு… இதில் இருக்கிற தூசி தும்பட்டைகளை களைபவன் தெளிந்த மனிதனாகிறான்.
பல்வேறு சமயத்தில் பல மனிதர்கள் இந்த ’சைக்கோ அனாலிசிஸ்’ என்பதைப் பற்றி சிந்திப்பதே இல்லை. தன் குற்றைத்தை, தனது தவறை, தனது இழிவை ஏற்றுக்கொண்டு அதனை களைய முற்படாத பட்சத்தில் சுய மதிப்பீடுகள் செயலிழந்துவிடுகின்றன.
நஸ்ரியாவை பொறுத்தவரை அவரது சுற்றுப்புற மனிதர்களின் எண்ணவோட்டங்கள், சிந்தனைகள் கருத்துகளின் முரண்பாட்டால் கூட அவருக்கு அந்த பிரச்னை வந்திருக்கலாம். இந்தப் பிரச்னையில் மிக முக்கியமானது மன அழுத்தம்தான். இதுதான் தனிப்பட்ட (Emotional Wellbeing) சவால்கள் எனும் பிரச்னைக்கு முதல் புள்ளியாகவும் கடைசி புள்ளியாகவும் இருக்கிறது.
சுந்தர ராமசாமி ஒரு நாவலில், ’அவள் அவளுக்குள் இருந்து தாவிக் குதித்தாள்…’ என்று எழுதியிருப்பார். கிட்டத்தட்ட இந்த நிலை. விடுதலையுணர்வின் அம்சங்கள் நிரம்பியவை. இந்நிலையை அடைபவர்கள் மனப் பிரச்னையில் சிக்கிக் கொள்வதே இல்லை. மன இறுக்கம், மன அழுத்தம் எல்லாமே தன்னை முழுமையாக நம்பி பயணிக்க மறுக்கும் சூழலில் ஒருவருக்குள் தோன்றும் பிரமையாகும்.
இத்தகைய மன நிலையில் உள்ளவர்களை தனிமையில் விடக்கூடாது. மகிழ்ச்சி ததும்பும் கூட்டங்களில், பூங்காக்களில், இசை நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் சுற்றியிருப்பவர்கள் நேர்மறையான எண்ணங்களை வளர்த்தெடுக்க எல்லா வகையிலும் முயற்சிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்த அந்த நபருக்கு நிறைய ஸ்பேஸ் கொடுக்க வேண்டும்.
ஒரு வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும், அந்த வீட்டில் அவரவருக்கு என்று ஒரு ஸ்பேஸ் இருக்கும். அது குழந்தையாகட்டும், முதியவர்களாகட்டும் எவராயினும் அவர்களுக்குரிய உரிய இடத்தை உரிய முறையில் வழங்க வேண்டும். நாம் தொட்டிச் செடியாக இருக்கிறோமா… இல்லை பூங்காவனத்தில் ஒரு பூ மரமாக இருக்கிறோமா என்பது நம்மால் மட்டும் நிகழ்வதில்லை. சூழல் மிக முக்கிய காரணியாகும். நஸ்ரியாவுக்கு மட்டுமில்லை நலம் நாடும் அனைவருக்கும் அதுதான் தேவை’’ என்றார் மோகன் பாலகிருஷ்ணா.