கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்
முதியவர்கள் பெரும்பாலும் சோகத்துடன் இருப்பதைக் காணமுடியும். அவர்களிடம் கொஞ்சநேரம் மனம்விட்டு பேசிப் பார்த்தால், அதற்கான காரணங்களை அவர்களே சொல்வார்கள்.
அதாவது, ‘இத்தனை காலமும் வாழ்க்கை என்றால் என்னவென்று புரியாமல் பணத்தைத் தேடி, காலத்தை எல்லாம் வீணாக்கிவிட்டேன். இப்போதுதான் எது உண்மையான வாழ்க்கை என்பது புரிகிறது. எல்லோருடனும் பாசத்துடனும், நேசத்துடனும் பழக ஆசையாக இருக்கிறது. ஆனால், உடலுக்கு நோய் வந்துவிட்டது. எந்த நேரமும் மரணம் வந்துவிடும் போல் இருக்கிறது.
நிறைவாக வாழவில்லையே என்பதுதான் என் கவலையாக இருக்கிறது. இனியாவது, எல்லோருக்கும் பிடித்தவராக, எல்லோருக்கும் நல்லவராக வாழவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கு என்னிடம் பேசுவதற்குப் பிடிக்கவில்லை, நேரமும் இல்லை. எனக்கு எந்த வகையில் மரணம் நேரப்போகிறதோ என்பதுதான் எனக்கான பயமாக இருக்கிறது. சட்டென்று தூக்கத்திலேயே செத்துவிட வேண்டும். படுக்கையில் விழுந்து எல்லோரும் என்னை பாரமாக நினைக்கும் அவமானம் நிகழ்ந்துவிடக் கூடாது’ என்பதுதான் அவர்களின் கவலைக்கு காரணமாக இருக்கும்.
வாழ்ந்தது போதும். நான் நல்லபடியாக வாழ்க்கை நடத்தியிருக்கிறேன் என்ற மனப்பான்மை பெரும்பாலோருக்கு வருவதில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள் வாழும் காலத்தில் மரணத்தைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்கவே இல்லை என்பதுதான். அதனால், மரண பயம்தான், அவர்களை சோகமாக்குகிறது.
எனவே, ஒவ்வொரு மனிதரும் இளமையிலே மரணம் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், வாழ்க்கையைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
- பிறப்பு என்பது மனிதனுக்கு சிறை. மரணம் என்பது மனிதனுக்குக் கிடைக்கும் சுதந்திரம். எனவே, மரணத்தை வரவேற்கும் பக்குவம் ஒவ்வொரு கணத்திலும் இருத்தல் வேண்டும்.
- ஒவ்வொரு நாள் தூங்கி விழிப்பதும், புதிய ஜனனம். அன்றைய உறக்கம் ஒரு மரணம் என்று நம்ப வேண்டும்.
- தங்கள் உடல் மீதும், நெருக்கமான உறவுகள் மீதும், சம்பாதித்த பணம், சொத்துக்கள் மீது பற்று வைக்கும்போது, மரணம் எதிரியாகத் தெரியும். எனவே, நிலையற்ற உடல் மீதும், உறவுகள் மீதும், பணத்தின் மீதும் வைத்திருக்கும் பாசத்தை விலக்க வேண்டும்.
- எப்பேர்ப்பட்ட ஞானி என்றாலும், எத்தனை பெரிய கோடீஸ்வரர் என்றாலும், எத்தனை பெரிய அரசியல் தலைவர் என்றாலும், அவரை மரணம் விட்டுவைப்பதில்லை. எனவே மரணத்துக்கு அஞ்சுவதால் ஆகப்போவது எதுவும் இல்லை.
- நல்லவன், கெட்டவன், நோயாளி, ஆரோக்கியமானவன், முட்டாள், அறிவாளி என மரணம் யாருக்கும் பாகுபாடு பார்ப்பதில்லை.
- எந்த முன்னறிவிப்பும் இன்றி, எந்த நொடியிலும் மரணம் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. உன் பக்கத்து இருக்கை பயணியாகவே மரணத்தை நினைத்துக்கொள்.
- பயப்படுவது, கவலைப்படுவது அல்லது ஆராதனை செய்வதன் மூலம் மரணத்தை ஒருவராலும் வெற்றியடைய முடியாது.
- புரிந்துகொள்ளாதவர்களையே மரணம் மிகவும் பயமுறுத்துகிறது. எனவே, மரணத்துக்காக காதலுடன் காத்திரு. மரணமும் புன்னைகைப் பூவாகத் தெரியும்.
.