• Home
  • தமிழ் லீடர்
  • அடேங்கப்பா, அரசியலுக்கு வந்து தோற்றுப் போன நடிகர்கள் இத்தனை பேரா..?

அடேங்கப்பா, அரசியலுக்கு வந்து தோற்றுப் போன நடிகர்கள் இத்தனை பேரா..?

Image

விஜய் ஜெயிக்கட்டும்

விஜய் மாநாடு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்ற ஆசையில் அரசியலில் நுழைந்த சிலருடைய பட்டியலை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் குழப்பமின்றி தெளிவடைய முடியும்.

எம்.ஜி.ஆர். ஒரு நெருக்கடியில் தான் கட்சியைத் தொடங்கினார். அவருக்கு தனி கட்சி தொடங்கும் எண்ணம் முன்கூட்டியே இருக்கவில்லை. தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டதும் வேறு வழியில்லாமலே முழு நேர அரசியல்வாதியாக மாறினார். அதேபோல், ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரைப் பார்த்து அவரது வற்புறுத்தலின் பேரில் அரசியலுக்கு நுழைந்தவர். ஆகவே, இவர்கள் வெற்றி என்பது வேறு வகை.

எம்.ஜி.ஆர் மறைந்ததும் சிவாஜி கணேசன் 1988 ல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சி தொடங்கினார். எம்.ஜி.ஆர். ஆதரவாளர் வாக்குகளை அள்ளிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் ர்தலில் அவரும் தோற்று அவர் கட்சியினரும் டெபாசிட் இழக்க ஒரே வருடத்தில் கட்சியை கலைத்து விட்டு ஜனதாதளத்தோடு ஐக்கியமானார்.

சினிமாவில் சகலகலா வல்லவன், தொட்டதெல்லாம் பொன் என்று புகழப்பட்ட டி.ராஜேந்தர் 1991 ல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சி தொடங்கி 1996;ல் கட்சியை கலைத்து விட்டு திமுகவில் சேர்ந்தார். மீண்டும் திமுகவை விட்டு விலகி 2004 ல் அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது இந்த கட்சியை செயல்படாத கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எம்.ஜி.ஆரின் கலைவாரிசு என்று அவரால் ஆசிர்வாதம் செய்யப்பட்ட இயக்குனர் பாக்யராஜ் 1989 ல் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சி 1991 கேரளாவில் போட்டியிட்டு வெறும் 87 வாக்குகள் வாங்கியது. அதன்பின் 2006ல் கட்சியை கலைத்து விட்டு திமுகவில் சேர்ந்தார். அதன்பின் எந்தக் கட்சியிலும் இல்லாமல் அமைதியாகிவிட்டார்.

விஜயகாந்த் கட்சியைத் தொடங்கி வேகவேகமாக மேலே வந்து, ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்ததவும் கவுந்துபோனார். இப்போது அவரது கட்சி கூட்டணிக்குத் தூதுவிடும் நிலையில் உள்ளது.

2007 ல் அகில இந்திய சமுத்தவ கட்சியை தொடங்கினார் சரத்குமார் அவரும் இப்போது கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் சேர்ந்து விட்டார். தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்யும் நடிகர் கார்த்திக் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராக இருந்தார்‌. தேர்தலுக்கு தேர்தல் எந்த கட்சியாவது பணம் கொடுத்தால் அந்த கட்சிக்கு ஆதரவாக பேசிவிட்டு போய்விடுவார்.

கட்சி தொடங்குவது உறுதி என்று சொல்லிய ரஜினிகாந்த் கொரோனாவை காரணம் காட்டி அந்த எண்ணத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டார். ரஜினி வரவில்லை என்றதும் திடீரென மக்கள் நீதி மய்யம் மூலம் அரசியலுக்கு வந்தார் கமல்ஹாசன். தி.மு.க.வை எதிர்த்து கட்சி தொடங்கிய கமல்ஹாசன் இப்போது தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக நிற்கும் சூழலுக்கு ஆளானார். இவர்களத் தவிர மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், மயில்சாமி என்று எத்தனையோ பேர் அரசியல் குளத்தில் இறங்கி மூழ்கிப் போயிருக்க்றார்கள். இப்போது விஜய் வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். வழியா அல்லது சிவாஜி வழியா என்பதை காலமே பதில் சொல்லும்

Leave a Comment