• Home
  • யாக்கை
  • சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்குதா..?

சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்குதா..?

Image

கிரியேட்டினின் செக்கப் பண்ணிக்கோங்க

பொதுவாக உடல் உள் உறுப்புகள் சமர்த்தாக பணியாற்றிக்கொண்டே இருக்கின்றன. முடிந்த வரையிலும் உழைக்கின்றன. மிகவும் மோசமான பாதிப்பை எட்டிய பிறகே கடுமையான நோய் அறிகுறிகளை வெளியே காட்டுகின்றன. அதனாலே 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம், உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அந்த வகையில் இப்போது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை எப்படி பரிசோதனை செய்வது என பார்க்கலாம். சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கிரியேட்டினின் அளவைப் பார்த்து அறிந்துகொள்ள முடியும். சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்படும் நேரத்தில் ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு உயர்ந்துவிடும்.

கிரியேட்டினின் என்பது உடல் செல்களிலிருந்து வெளியேற்றும் ஒரு கழிவுப் பொருள். ஒவ்வொருவருக்கும் கிரியேட்டினின் பொதுவாக ஒரு நிலையான விகிதத்தில் உற்பத்தி செய்யப்பட்டு சிறுநீரகங்களால் உடலில் இருந்து அகற்றப்படுகிறது. சிறுநீரகங்கள் சேதமடைந்து, அவை செயல்பட முடியாவிட்டால், சிறுநீரில் உள்ள கிரியேட்டினின் அளவு குறைகிறது, அதே நேரத்தில் உங்கள் ரத்தத்தில் அதன் அளவு அதிகரிக்கிறது.

சிறுநீரகம் இந்த கிரியாட்டினை வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். ஒருவரின் ரத்தம் அல்லது சிறுநீரில் எவ்வளவு கிரியாட்டினின் உள்ளது என்பதைப் பொறுத்து அவருடைய சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மதிப்பீடு செய்கின்றனர். உடலில் கிரியாட்டினின் தங்கியிருப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

காரணங்கள்

உடலுக்குள் எடுத்துக்கொள்ளும் உணவுப் பழக்கமே சிறுநீரகப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதிக அளவு இறைச்சி, அதிக மது குடிப்பவர்களுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்படலாம். அதுபோல், குறிப்பிட்ட சிலவகை மருந்துகள் எடுத்துக்கொள்வதால் வரும் பக்கவிளைவு காரணமாகவும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். பரம்பரைத்தன்மை, தொற்று நோய் போன்ற காரணங்களாலும் சிறுநீரகத் தொற்று, சிறுநீர் பாதையில் தடை ஏற்பட்டு கிரியேட்டினின் பிரச்னை உருவாகலாம். எனவே நீரிழிவு, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கிரியேட்டினின் அளவை பரிசோதித்துக்கொள்வது நல்லது.

அறிகுறிகள்

சிறுநீரகப் பாதிப்புகள் ஆரம்ப கட்டத்திலேயே வெளிப்படுவதில்லை. மேலும் இந்த பாதிப்பின் அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடும். குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு அதிகம் தென்படுகிறது. இதனால் உடல் சோர்வு, பல்வீனம் அடைதல், குமட்டல் போன்றவை முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன. வாந்தி, தலைச்சுற்றுதல் போன்ற பிரச்னைகளும் இருக்கலாம்.

வெளிப்படையாகத் தெரிவது என்றால் தோல் உலர்ந்து காணப்படுதல், நீர்ச்சத்து இன்மை, பாதங்களிலும் முகத்திலும் நீர்கோர்த்தல் ஆகியவற்றுடன் சிலருக்கு மூச்சு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.  

கிரியேட்டினின் அளவு

பொதுவாக கிரியேட்டினின் 0.7 முதல் 1.4 மில்லி கிராம் வரை இருப்பது சீரான அளவு. சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது அதன் அளவு அதிகரித்துவிடும். அசாதாரண அளவுக்கு  அதிகரித்துவிட்டால் சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஆண்களுக்கு 0.7 – 1.3 மி.கி/.டெ.சி. லிட்டர், பெண்களுக்கு 0.6 – 1.1 மி.கி./டெ.லி., இளம் வயதினருக்கு 0.5 முதல் 1.0 மி.கி./டெ.லி., குழந்தைகளுக்கு 0.3 முதல் 0.7 மி.கி./டெ.லி., என்ற அளவிலும் கிரியாட்டினின் அளவு இருப்பது பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. ரத்தத்தில் இதற்கு மேல் இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டும்.

சிகிச்சை

கிரியேட்டினின் அளவில் சிறிய மாறுதல் இருப்பது பெரிய பிரச்னை இல்லை. அதாவது இரத்தத்தில் 1 – 3 என்ற அளவில் இருப்பது உணவின் மூலமே குறைத்துக்கொள்ள முடியும். உணவில் அதிகம் உப்பு எடுத்துக்கொள்வதையும், அதிக நீர் அருந்துவதையும் தவிர்ப்பதே போதுமானதாக இருக்கும். உப்பு அளவைக் குறைப்பது கிரியாட்டினின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிக அளவில் உள்ளன. குறிப்பாக உப்பில் உள்ள சோடியம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, கிரியாட்டினின் உற்பத்தியைக் குறைக்க நினைப்பவர்கள் உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது.

ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 3 – 6 என அதிகரிக்கும்போது புரதச்சத்து உப்பு குறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படும்.  சிறுநீரின் அளவு மற்றும் ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவைப் பொறுத்து நீரின் அளவும், பொட்டாசியம் உள்ள உணவுகளின் அளவும் பரிந்துரைக்கப்படும். இதற்கும் அதிகமான கிரியேட்டினின் இருப்பவர்களுக்கு உப்பு, பொட்டாசியம், புரதம், குறைந்த உணவு பரிந்துரைக்கப்படும். ரத்தத்தில் கால்சியம், பாஸ்பரஸ், கொலெஸ்டிரால் இவற்றின் அளவைப் பொறுத்து அவற்றிக்கான உணவு ஆலோசனையும் வழங்கப்படும்.

கிரியாட்டினின் அளவைக் கட்டுப்படுத்த புரதச்சத்து மிக்க உணவைக் குறைத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். உடல் ஆரோக்கியமாக இயக்க புரதச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. அளவுக்கு அதிகமான புரதச்சத்து கிரியாட்டினின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே, இறைச்சி, சில வகையான பால் பொருட்களைத் தவிர்ப்பது கிரியாட்டினின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

நார்ச்சத்து மிக்க உணவுகள் செரிமானத்துக்கு உதவியாக இருக்கக் கூடியவை. இவை கிரியாட்டினின் உருவாவதைக் கட்டுப்படுத்தி வெளியேற்ற உதவுகின்றன. தொடர்ந்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து வருவது கிரியாட்டினின் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு, பயிறு வகைகளில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது.

திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, கிவி, பப்பாளி, அன்னாசி, மாதுளை போன்ற பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் செயல்பட வைத்து கிரியேட்டினின் அளவை இயற்கையாகப் பராமரிக்கின்றன. 

சுரைக்காய் சாப்பிட்டால் உடலிலுள்ள கெட்ட உப்புக்களை சிறுநீரகம் வழியாக வெளியே கொண்டு வந்துவிடும். எனவே சுரைக்காயை பச்சையாகவோ, வேக வைத்தோ, பொரியல் செய்தோ, அவியல் செய்தோ சாம்பாரில் பயன்படுத்தியோ அல்லது சூப் வடிவத்திலோ தொடர்ந்து சாப்பிட்டு வருவது கிரியேட்டினின் அளவை குறைக்க உதவும். நீரிழப்பு, குறைவான அளவில் தண்ணீர் அருந்துவது உடலில் கிரியாட்டினின் அளவை அதிகரித்துவிடும். இதை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகங்கள் திணறும். பொதுவாக சிறுநீரக செயலிழப்பால் அவதியுறுபவர்கள் டாக்டர் பாிந்துரைத்த அளவு மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். மற்றவர்கள் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் அருந்தலாம்.

Leave a Comment