அட்டகாசமான குட்டிக் கதை
‘உண்மை வீட்டு வாசல் தாண்டுவதற்குள், பொய் உலகத்தைச் சுற்றி வந்துவிடும்’ என்பார்கள். ஏனென்றால் பொய்க்கு வேகம் அதிகம், ஆனால் உண்மைக்குத்தான் வலிமை அதிகம். இதை நிரூபிக்கும் ஒரு குட்டிக் கதை இது.
வேலை செய்வதில் ஆர்வமில்லாத இளைஞன் ஒருவன் திருடப்போவதாக தாயிடம் சொன்னான். தாய்க்கு அதிர்ச்சி என்றாலும், ‘நீ திருடுவதை பற்றி கவலையில்லை, ஆனால், எப்போதும் உண்மை மட்டும் பேசுவேன் என்று சத்தியம் செய்துகொடு” என்று கேட்டாள். இதில் என்ன பிரச்னை என்று சத்தியம் செய்துவிட்டு திருடக் கிளம்பினான்.
எப்படியோ எல்லோருடைய கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு கஜானா அறைக்கு வந்துவிட்டான். அப்போது மாறுவேடத்தில் நகர்வலம் கிளம்பிய அரசன் எதிரே வந்துவிட, அவரையும் திருடன் என்று நினைத்து, ‘சத்தம் போடாதே. கிடைப்பதை சரிபாதியாக பிரித்துக்கொள்வோம்’ என்று சொன்னான். அரசனும் புன்னகையுடன் அவனை தொடர்ந்தான்.

கஜானா அறையில் இருந்த தங்கம், வெள்ளி, முத்து, மாணிக்கம் போன்றவைகளை கண்டுகொள்ளாமல், ஒரு பெட்டியில் இருந்த மூன்று பெரிய வைரங்களில் இரண்டை மட்டும் எடுத்தான் திருடன். ஒன்றை அரசனிடம் கொடுத்துவிட்டு, மற்றதை அவன் வைத்துக்கொண்டான். மூன்றாவதையும் எடுக்கலாம் என்று அரசன் சொன்னதும், ‘மூன்றாவது யாருக்கு என்று பிரச்னை வரும். அதனால் வேண்டாம். இதை விற்றாலே நிறைய செல்வம் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
உடனே அரண்மனைக்குத் திரும்பிய அரசன் அமைச்சரை அழைத்து, ’கஜானாவில் திருடு போயிருக்கிறது. கணக்கு பார்த்து வாருங்கள்’ என்று அனுப்பிவைத்தான்., இரண்டு வைரம் மட்டும் திருடு போயிருப்பதைப் பார்த்ததும் அமைச்சருக்கு ஆசை வந்தது. மூன்றாவது வைரத்தை அவர் எடுத்துக்கொண்டார். அரசவைக்குத் திரும்பிவந்து, மூன்று வைரங்கள் திருடப்பட்டுள்ளது என்றதும், அரசன் அதிர்ச்சி அடைந்தான். எதுவும் பேசாமல் திருடனை இழுத்துவரச் சொன்னான்.
திருடனுக்கு அரசனை அடையாளம் தெரியவில்லை என்றாலும் உண்மை பேசினான். ‘நான் ஒரு வைரம் எடுத்தேன். இன்னொன்று என்னுடன் வந்த திருடனுக்குக் கொடுத்துவிட்டேன். மூன்றாவதை எடுக்கவில்லை” என்று சொன்னான்.
உடனே அமைச்சர், ‘இவனே மூன்றையும் திருடிவிட்டு பொய் சொல்கிறான். இவனை சிறையில் போட்டு சித்ரவதை செய்தால் உண்மையை கக்கிவிடுவான்’ என்று கோபமானார்.
அப்போது அரசன் நேற்று இரவு அணிந்திருந்த தாடியை எடுத்து ஒட்டவைக்க, ‘இதோ இவனிடம்தான் இரண்டாவது வைரத்தைக் கொடுத்தேன்’ என்றான் திருடன். அதைக் கேட்டதும் அமைச்சர், ‘அரசனையே திருடன் என்கிறாயே, காவலர்களே இவனுக்கு உடனே மரண தண்டனை கொடுங்கள்’ என்று உத்தரவிட்டான்.
உடனே அரசன், ‘தண்டனை உமக்குத்தான் கொடுக்கவேண்டும். அவன் திருடனாக இருந்தாலும் உண்மை பேசினான். நீர் பெரிய பதவியில் இருந்தும் பொய் பேசினீர்?’ என்று மிரட்டவே, தலைப்பாகையில் இருந்து வைரத்தை எடுத்துக் கொடுத்தார் அமைச்சரை சிறையில் அடைத்த அரசன், திருடனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார்.
இது, கதை என்றாலும் உண்மையின் வலிமையைச் சொல்லும் கதை. உண்மையை மட்டுமே பேசியதால் தான் அரிச்சந்திரனை இன்றும் நாம் புகழ்கிறோம். உண்மையால்தான் அகில இந்தியாவும் காந்தியடிகளுக்குப் பின்னே நின்றது.
பொய் பேசுபவர்களுக்கு நிறைய ஞாபகசக்தி இருக்க வேண்டும். உண்மை பேசுபவர்களுக்கு அந்த பிரச்னை இல்லை. எனவே பொய் சொல்லி தப்பிப்பதை விட உண்மை பேசி மாட்டிக்கொள்வது மிகவும் நல்லது.
ஆதாயம் கிடைக்கிறது என்றாலும் பொய் பேச வேண்டாம். குறிப்பாக குழந்தைகள் முன்பு பொய் பேச வேண்டாம், குழந்தைகள் பொய் பேசுவதை ஊக்குவிக்கவும் வேண்டாம்.