அண்ணாமலைக்குப் பதவி நீட்டிப்பு..?

Image

தி.மு.க.வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டம்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொள்ள இருப்பதால் அவரது பதவி பறிக்கப்பட்டு, புதிய நியமனம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அதேநேரம் அவரது லண்டன் பயணத்துக்கும் அனுமதி கிடைத்துள்ளது.

ஆகவே, தி.மு.க.வுக்கு எதிராக தன்னுடைய தாக்குதலைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருக்கிறார். கடந்த 1ம் தேதி கொளத்தூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கபிலன் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கு அண்ணாமலை, ‘பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக கபிலனைக் கைது செய்திருக்கும் திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது’’ என்று கண்டனம் செய்திருக்கிறார்.

அதேபோல் தி.மு.க.வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பும் வெளியிட்டுள்ளார். ‘’திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 39 மாதங்களாக, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நடைமுறைப்படுத்தா மல் காலதாமதமாக்கி வருகிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து, அமைச்சர்கள், ஆளுக்கொரு பணி நிறைவு சதவீதத்தைக் கூறி பொதுமக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி, மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்கியிருக்க வேண்டும். பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல தமிழக அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. தமிழக அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் பணி. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும், இதுவரை திமுக அரசு, இந்தக் குழுவை அமைக்கவில்லை.

உடனடியாக, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், குழாய் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம். இவற்றை நிறைவேற்ற திமுக அரசு தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment