• Home
  • அரசியல்
  • ஆர்.எஸ்.பாரதிக்கும் அண்ணாமலைக்கும் வள் வள் வள்

ஆர்.எஸ்.பாரதிக்கும் அண்ணாமலைக்கும் வள் வள் வள்

Image

பி.ஏ. படிக்கும் நாய்கள்.

தங்கக் கடத்தல் நபருடன் அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் தங்கக் கடத்தலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லலாமா என்று கேள்வி எழுப்பிய ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக பொங்கி எழுந்திருக்கிறார் அண்ணாமலை.

அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘’எப்போதெல்லாம், திமுக ஆட்சிக்கு, பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் திரு. ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல. கள்ளக்குறிச்சியில், திமுக ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற, திரு. ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள்.

முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று பேசினார். இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார். அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட B.A. பட்டம் வாங்குகிறது என்று, ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

தமிழகத்தில், 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது என்பதை மறந்த திரு.ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே திமுகதான் என்று போலிப் பெருமை பேசிக் கொள்கிறார். திமுக முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமானால், டெல்லி, மும்பையிலிருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும், தமிழக அரசு சார்பான வழக்குகளுக்கு, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுர குடும்பம், .ஆர்.எஸ்.பாரதியை வாதாட அனுப்புவது, கதைக்கு உதவாத வழக்குகளுக்காகத்தான்.

 தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவச் செல்வங்களை அவமானப்படுத்தி, அவர்கள் வளர்ச்சிக்கு திமுகதான் காரணம் என்று கூறிக் கொள்ளும் .ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களைத்தான், திமுக உண்மையில் உருவாக்கியிருக்கிறது. தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள்…’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய பி.ஏ. நாய் படிப்பு குறித்து விளக்கம் கொடுத்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி, ‘’நாய் கூட பட்டம் பெறுகிறது என்று உள்ளர்த்தத்துடன் பேசவில்லை. கல்வி அனைவருக்கும் உரியதாகிவிட்டது என்பதை குறிப்பிடவே பேசினேன்’’ என்று கூறியிருக்கிறார்.

விஷயத்தை எப்படியெல்லாம் திசை மாத்துறாங்க.

Leave a Comment