அ.தி.மு.க. ஆதரவாளர்களுக்கு பதவி குடுத்துட்டாங்க.
எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை, இனிமேல் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று அண்ணாமலை அழுத்தி அழுத்தி சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை லண்டனுக்கு அனுப்பிவிட்டு, அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது பா.ஜ.க. மேலிடம்.
ஆரம்பத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றாலும், அங்கிருந்தபடியே கட்சிப் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் அவரது ஆதரவாளர்கள் ரொம்பவே நம்பிக்கையுடன் இருந்தார்கள்.
ஆனால், அண்ணாமலை லண்டனுக்கு வந்த சில மணி நேரங்களிலே, அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஹெச்.ராஜா தலைமையில் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய குழு அமைக்கப்பட்டுவிட்டது.
பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டிருக்கும் குழுவில் முதல் பெயராக ஹெச்.ராஜா பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த குழுவில் சக்கரவர்த்தி, ராமசீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், முருகானந்தம், கனகசபாபதி அடங்கிய 6 பேர் இருக்கிறார்கள்.
இந்த குழுவில் இருக்கும் அனைவருமே அ.தி.மு.க. கூட்டணிக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் என்பது தான் கவனிக்கத்தக்க விஷயம். ஆகவே, இனிமேல் தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையில் மோதல் நடக்காது. அண்ணாமலை அப்படியே மேற்படிப்பு படித்துவிட்டு லண்டனிலேயே 2026 தேர்தல் வரையிலும் தங்க வைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.
அண்ணாமலை இந்த குழு குறித்து இன்னமும் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்தே அவர் அதிருப்தியில் இருப்பதை அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள்.