• Home
  • சக்சஸ்
  • அஞ்சு பாபி ஜார்ஜ் எனும் சாகசக்காரி

அஞ்சு பாபி ஜார்ஜ் எனும் சாகசக்காரி

Image

உடல் குறையுடன் உலக சாதனை..!


‘நம்பினால் நம்புங்கள். நான் மிகவும் அதிர்ஷ்டம் படைத்தவள். ஒற்றை கிட்னியுடன் உலக அரங்கில் உச்சத்தை என்னால் தொட முடிந்தது. அப்போது சாதாரண வலி நிவாரணிக்குக்கூட எனக்கு ஒவ்வாமை இருந்தது. அதனால் வலியுடன்தான் போட்டியிட்டேன். இத்தனை இருந்தும் என்னால் சாதிக்க முடிந்தது. இது பயிற்சியாளரின் மேஜிக்கா அல்லது திறமையா’ என்று நீண்ட காலத்துக்குப் பிறகே தன்னைப் பற்றிய மருத்துவ உண்மையை வெளியே சொன்னார் அஞ்சு பாபி ஜார்ஜ்.

 யார் இந்த அஞ்சு பாபி ஜார்ஜ்..?

 2003ல் நடைபெற்ற பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் தாவி இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தந்த முதல் வீராங்கனை என்ற மகத்தான சாதனையை இவர் படைத்தார். கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகே தன்னுடைய உடல் குறையை வெளியே பேசினார்.

இதுகுறித்து அஞ்சு பாபி ஜார்ஜ்,  “பிறப்பிலிருந்தே எனக்கு இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே எப்போதும் காயங்களிலிருந்து மீண்டுவர எனக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. 2001ல் எடுத்துக்கொண்ட பரிசோதனையில்தான் நான் ஒற்றை கிட்னியுடன் பிறந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விளையாட முடியுமா என்ற கவலை என்னைத் தொற்றிக்கொண்டது. பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்புகூட உடல்நிலையில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அதற்கும் இந்த ஒற்றை கிட்னிதான் காரணம். தொடர்ந்து பயிற்சிகளிலும் போட்டிகளிலும் பங்குபெற்று வந்ததால் எனக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. அதிலிருந்து மீள போதிய நேரம் எனக்குக் கிடைக்கவில்லை. அப்போது இந்தப் பிரச்னையை வெளியில் சொல்ல தயங்கினேன். இப்போதுதான் இதில் ஒன்றுமில்லை என்ற பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. இதை இப்போது வெளியில் சொல்வதன் மூலம் பலரையும் ஊக்கப்படுத்த முடியும் என நம்புகிறேன். இந்த வெற்றிக்குப் பயிற்சியாளரும், தன் கணவருமான ராபர்ட் பாபி ஜார்ஜூம் மிக முக்கியக் காரணம்’ என்றார்.

இவர், 1977ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி கேரளாவில் உள்ள சங்கனாச்சேரியில் பிறந்தவர். அஞ்சு, விளையாட்டுக்குள் நுழைய அவரது தந்தையே காரணம். அவரது ஊக்குவிப்பால் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார். பள்ளிக்கூட பயிற்சியாளர்களான வெல்சியும், தாமஸுமே அவருடைய முதல் குருநாதர்கள். அவர்கள் இருவரும்தான்  அஞ்சுவுக்கு முதன்முதலில் தடகளத்தில் பயிற்சி அளித்தவர்கள். இவர்கள் கொடுத்த பயிற்சியின் மூலம் அஞ்சு,  தன்னுடைய சிறுவயதிலேயே 100 மீ தடைகள் மற்றும் ரிலே பந்தயத்தில் வென்று சாதனை படைத்தார். மேலும் 1991 – 92ம் ஆண்டில் பள்ளியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் 2வது இடத்தைப் பிடித்து அசத்தினார். தொடர்ந்து பள்ளியளவில் நடைபெற்ற தேசியப் போட்டிகளிலும் சாதனை படைத்தார். குறிப்பாக, 100 மீ தடைகள் மற்றும் 4×100 மீ ரிலே பந்தயத்தில் 3வது இடத்தைப் பிடித்தார்.

ஆரம்பத்தில் அஞ்சு தனது தடகள வாழ்க்கையை ஹெப்டாத்லானுடன் தொடங்கினார். பின்னர், அவர் தாண்டுதல் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்தார். டெல்லியில் 1996ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து பெங்களூரு கூட்டமைப்பு கோப்பையில் மூன்று தாண்டுதல்களில் ஒரு புதிய தேசிய சாதனையை உருவாக்கி தெற்காசிய கூட்டமைப்பில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

2001ல் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசியப் போட்டியில், நீளம் தாண்டுதலில், 6.74 மீட்டர் தாண்டி சாதனை நிகழ்த்தினார். அதே ஆண்டில் லூதியானா தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தாண்டுதல்கள் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினார். மான்செஸ்டர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டும் பிரிவில் அஞ்சு வெண்கலப் பதக்கம் பெற்றார். இதில் அவர் 6.49 மீட்டர் தாண்டி சாதனை புரிந்தார். அதுபோல், 2002ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6.53 மீட்டர் தூரம் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதன்பிறகுதான் 2003ல் பாரிஸ் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில்  6.70 மீட்டர் தூரத்தை வென்று சரித்திரத்தில் இடம்பெற்றார். இப்படி, தொடர்ந்து தடகளத்தில் சாதனை படைத்த அஞ்சுவுக்கு இந்திய அரசு 2003ல் அர்ஜுனா விருது வழங்கி கெளரவித்தது. 2004ம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் பத்மஸ்ரீ விருதும்  வழங்கப்பட்டது.

மூன்று தாண்டுதல்களில் முன்னாள் தேசிய சாம்பியனும், அவரது பயிற்சியாளருமான ராபர்ட் பாபி ஜார்ஜ் என்பவரை அஞ்சு திருமணம் செய்துகொண்டார். ராபர்ட் பாபி ஜார்ஜ், சென்னையில் சுங்கத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கேரள மாநில விளையாட்டுக் கவுன்சிலில் தலைவர் பதவி வகித்த அஞ்சு பாபி ஜார்ஜ்,  அதில் ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் ஒருவர் கூறியதையடுத்து, அந்தப் பதவியை உடனே ராஜினாமா செய்தார். பின்னர், இளம் வயது விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்விதமாக, தன்னுடைய பெயரில் பெங்களூருவில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இந்திய தடகள சம்மேளனத்தின் 2020-24ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் அஞ்சு பாபி ஜார்ஜ், சீனியர் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவர் பொறுப்பை ஒரு பெண் ஏற்பது இதுவே முதல் முறையாகும்.

உடல் குறை இருந்தாலும் அதனை தாங்கிக்கொண்டு சாதனை புரிந்த சாதனைப் பெண்மணிக்கு வாழ்த்துகள்!

Leave a Comment