சமூகநலக்கூட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 333

எந்த ஒரு முறைகேடு என்றாலும் அதனை விஞ்ஞான முறையில் சரிசெய்துவிட முடியும் என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்கு தெரியும். அவரது அரசியல் அனுபவம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப ஆர்வம் மூலம் சமூகநலக்கூடத்தில் நிலவிய புக்கிங் மோசடிக்கு சரியான தீர்வு கொண்டு வந்தார்.

அதனால்  மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து சமூகநலக் கூடங்களிலும் ஆன்லைன் புக்கிங் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதனை யார் வேண்டுமானாலும் புக்கிங் செய்துகொள்ளலாம் என்றாலும், முன்பதிவு செய்வதற்கு எக்கச்சக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இத்தனை கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் புக்கிங் நடைமுறைக்கு வரும் என்பதை எதிர்பார்க்காத முறைகேட்டாளர்கள் அதிர்ந்தே போனார்கள்.

யார் வேண்டுமானாலும் புக்கிங் செய்துகொள்ளலாம் என்றாலும் உண்மையான பயனாளிகள் மட்டுமே பயன் பெற வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். எனவே மண்டபம் புக்கிங் செய்வதற்கு மணமகன் புகைப்படம், மணமகள் புகைப்படம், திருமணப் பத்திரிகை, வீட்டு முகவரிக்கு இருப்பிடச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார் எண் போன்றவை கட்டாயமாக்கப்பட்டது.

நிச்சயதார்த்தம் என்றால் அதற்கு முறைப்படி குடும்ப உறுப்பினரின் ஒப்புதல் கடிதம் இருக்க வேண்டும். அதேபோன்று மஞ்சள் நீராட்டு விழா,  பெயர் சூட்டுவிழா, பிறந்த நாள் விழா என்றாலும் பிறந்த நாள் சான்றிதழ், குடும்ப அட்டை போன்ற  சான்றிதழ்களுடன் மட்டுமே  பதிவு செய்ய முடியும் என்று விதிகள் கொண்டுவரப்பட்டன. இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தால் உண்மையான பயனாளிகள் எளிதாக முன்பதிவு செய்ய முடிந்தது. முறைகேடு செய்து வந்தவர்கள் எந்த வகையிலும் தில்லுமுல்லு செய்துவிட முடியாத அளவுக்கு சமூகநலக் கூடங்களிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

யாரையும் பகைத்துக்கொள்ளாமல் அதேநேரம், ஏழைகளுக்கு முழு பயனும் கிடைக்கும் வகையில் சமூகநலக்கூட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment