யானைக்கு கொலை செய்யத் தெரியாது..!

Image

திருச்செந்தூர் கொடூரத்துக்கு ஞானகுரு பரிகாரம்

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி இரண்டு பேர் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கியுள்ளது. இப்போது தனிமையில் கட்டி வைக்கப்பட்டுள்ள யானை, உணவு உண்பதற்கு மறுத்து வருகிறது. மருத்துவர்கள் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை முதலில் அறிந்துகொள்வோம்.  

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பாகன் உதயகுமார் கவனித்து வந்தார். இந்த நிலையில் உதயகுமாரை காண அவரது உறவினரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிசுபாலன் வந்துள்ளார். அப்போது சிசுபாலன், யானையின் அருகே நின்று செல்பி எடுத்ததுடன் ‘‘வரட்டுமா’’ என்று யானையின் உடலில் தட்டியிருக்கிறார்.

செல்போன், செல்பி போன்ற சம்பவங்கள் மேலும் புதிய நபரின் அதிநெருக்கத்தால் ஆக்ரோஷமடைந்த யானை, பாகனின் உறவினரை தாக்கியது. அதை தடுக்க முயன்ற பாகனையும் யானை மிதித்து கொன்றது. இது பெண் யானை என்பதால் மதம் பிடிக்க வாய்ப்பில்லை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையொட்டி ஜெயலலிதா செய்தது போன்று அனைத்து யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. யானைக்குத் தேவை முகாம் அல்ல விடுதலை என்கிறார் ஞானகுரு.

யானைக்கு எத்தன மதிப்பு கொடுத்து கும்பிட்டாலும் கொண்டாடினாலும் அவை ஐந்தறிவு மிருகங்கள் மட்டுமே. திருச்செந்தூர் யானைக்கு உடல் முழுக்க திருநீறு பூசி அதை வெள்ளையாக்கி, மண்டி போட வைத்து, யாசகம் கேட்க வைத்து என்று நிறையவே தொந்தரவு நடந்திருக்கிறது. இவற்றை எல்லா நேரமும் அது பொறுத்துக் கொள்ளாது.  மற்ற விலங்குகளுக்கு உண்டான எல்லா குணங்கள் அவற்றிற்கும் இருக்கும். மிருகத்திடம் பக்தியையும், மனிதத்தன்மையையும் எதிர்பார்ப்பது தவறு. காட்டில் சுதந்திரமாக சுற்றி திரியும் விலங்குகளை பிடித்து கம்பிகளுக்கு பின்னால் அடைத்து வைத்து என்னதான் வசதிகளை செய்து கொடுத்தாலும் அவை கால்கள் கட்டப்பட்ட சிறை வாழ்க்கைதான் வாழ்வதாகத்தான் அர்த்தம்.

யானை யாரையும் கொலை செய்யாது. கொலை செய்யவும் தெரியாது. அதன் வழியில் குறுக்கே வருபவர்களை தள்ளி வைக்கும். அது, மனிதருக்குத் தான் கொலை. ஒரு பாவமும் அறியாத யானையை இனியும் கூட்டுக்குள் அடைப்பதை நிறுத்திவிட்டு காட்டுக்குள் விடுங்கள்’’ என்கிறார் ஞானகுரு.

Leave a Comment