கொரோனா காலத்தில் தொண்டாற்றிய அம்மா உணவகம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 71

மேயராக சைதை துரைசாமி கொண்டுவந்த அம்மா உணவகம் ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியது மட்டுமின்றி, 2015 சென்னை பெருவெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களின் பசியைத் தீர்ப்பதற்கும் பயன்பட்டது.

இவை எல்லாவற்றையும் விட, அம்மா உணவகத்தின் அவசியத்தை அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்துகொள்ளும் நெருக்கடியான ஒரு காலம் வந்தது. ஆம், கொரோனா பெருந்தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலை உருவான காலத்தில் உலகமே தடுமாறி நின்றது.

அனைத்து கடைகளும் இழுத்து மூடப்பட்டு, போக்குவரத்துக்கு கடுமையான  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. டீ கடையில் இருந்து பெரிய ஹோட்டல்கள் வரை செயல்பட முடியாத நிலை இருந்தது. எனவே வேலைக்குப் போக முடியாமல், பணம் சம்பாதிக்க முடியாமல் ஏராளமான மக்கள் தடுமாறினார்கள்.  

கையில் பணம் வைத்திருந்த நபர்களும் உணவு வாங்க முடியாமல் கஷ்டப்பட்டார்கள். இந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசும் அம்மா உணவகத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்தியது.

அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்குவதற்கு உத்தரவிட்டனர். இதனால் ஏழைகள், நடுத்தரவர்க்கத்தினர், வெளியூரில் இருந்து வந்து மாட்டிக்கொண்டவர்கள் என பலரும் மிகப்பெரும் நன்மை அடைந்தனர். எல்லா கடைகளும் அடைக்கப்பட்டாலும் அம்மா உணவகம் மட்டும் அமுதசுரபி போன்று அத்தனை பேருக்கும் உணவு வழங்கி சேவையாற்றியது.

’சைதை துரைசாமி மட்டும் தொலைநோக்குப் பார்வையுடன் அம்மா உணவகத்தை உருவாக்காமல் போயிருந்தால், கொரோனா தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்கள் நம்பிக்கை இழந்து மிகப்பெரும் துன்பத்திற்கும், தொற்றுக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

அம்மா உணவகம் உருவாக்கி ஏழைகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கையூட்டிய மேயர் சைதை துரைசாமி அவரது காலத்தில் மக்கள் ஆரோக்கியத்திற்கும் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment