என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 67
பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்தபோது அறிமுகப்படுத்திய அம்மா உணவகம் போன்று ஒரு திட்டத்தை உலகில் எந்த ஓர் அரசும் நடைமுறைப்படுத்தியதே இல்லை. அதனால்தான் இந்தியாவின் அனைத்து மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமின்றி வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து அம்மா உணவகத் திட்ட நடைமுறை குறித்து தெளிவாகக் கேட்டு அறிந்தனர்.
இந்தத் திட்டத்தை மிகவும் சரியாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினால், உலகில் எந்த நாட்டிலும் யாரும் பசியினால் துன்பப்படும் சூழல் ஏற்படவே செய்யாது என்பதை அழுத்தம்திருத்தமாக அனைவருக்கும் எடுத்துக் கூறினார் சைதை துரைசாமி.
சைதாப்பேட்டையில் தொடங்கிய மலிவு விலை உணவகத்தை அம்மா உணவகமாக மாற்றிய சைதை துரைசாமிக்கு அமோக பாராட்டு கிடைத்துவந்த நிலையில், அந்த அம்மா உணவகமே அவருக்குக் கை கொடுக்கும் சூழலும் உருவானது. சென்னையில் வசிக்கும் அத்தனை மக்களும் அம்மா உணவகத்தின் அவசியத்தை உணர்ந்துகொள்ளும் தருணமும் எதிர்பாராமல் ஏற்பட்டது.
ஆம், 2015 டிசம்பர் சென்னை பெருவெள்ளத்தில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், அந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் அமர்த்தப்பட்டனர். ஏழைகள் மட்டுமின்றி செல்வந்தர்களின் இல்லங்களும் இந்த பெருவெள்ளத்தில் சேதம் அடைந்தது. அந்த நேரத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆபத்பாந்தவனாக கைகொடுத்து உதவியது அம்மா உணவகம்தான்.
அன்று அம்மா உணவகம் இல்லையென்றால், உணவு வழங்குவதற்குப் போதுமான கட்டுமான அமைப்பு இல்லாமல் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பது மட்டும் உண்மை. மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற வசதிகள் முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையிலும் அம்மா உணவகமே மக்களின் பசியாற்றும் அமுதசுரபியாக இரவும் பகலும் செயலாற்றியது. அதனாலே, சென்னை முழுக்க எல்லா பகுதிக்கும் உடனுக்குடன் உணவு கொண்டுசெல்லவும், மக்களின் பசி தீர்க்கவும் முடிந்தது.
- நாளை பார்க்கலாம்.